Followers

Saturday 21 January 2012

வாயைப் பொத்தி, கண்ணை மூடிக் கொண்டோமே என்று மக்கள் வருந்துகிறார்கள்- கருணாநிதி

சட்டசபைத் தேர்தலின்போது திமுகவுக்கு வாக்களிக்காமல் வாயைப் பொத்திக்
கொண்டு, கண்ணையும் மூடிக் கொண்டு விட்டோமே என்று மக்கள் இப்போது
வருத்தப்படுகிறார்கள் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
பாமக, தேமுதிகவிலிருந்து வெளியேறிய ஏராளமான நிர்வாகிகள் தொண்டர்கள் என
கிட்டத்தட்ட 2000க்கும் மேற்பட்டோர் நேற்று கருணாநிதி முன்னிலையில்
திமுகவில் இணைந்தனர்.
கலைஞர் அரங்கில் நடந்த இந்த நிகழ்ச்சியில் அனைவருக்கும் வரவேற்பு அளித்து
கருணாநிதி பேசினார்.அப்போது அவர் பேசுகையில்,
பாமக கடந்த பல ஆண்டுகளாக திமுகவுடன் தோழமையாக இருந்த கட்சி. இடையில்
அவர்களாகவே ஏற்படுத்திக் கொண்ட சில பூசல், வேறுபாடுகள், கருத்து
ஒவ்வாததாகி விட்ட சூழலில் இந்த காட்சியை காண்கிறோம்.
எங்களுக்கு ஏற்ற இடம் இது தான் என்று வந்திருக்கிறீர்கள்.ஏற்ற இடமாக
அல்ல. ஏற்றுக் கொண்ட இடமாகவந்திருக்கிறீர்கள்.
திராவிட இயக்கம் ஏன்பெரியாரால் உருவாக்கப்பட்டது. அண்ணாவால் ஏன்
வளர்க்கப்பட்டது. பிற்படுத்தப்பட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாயம்
நம் சமுதாயம். இந்த சமுதாயத்திற்கு திமுக ஆட்சியில்தான் மிகவும்
பிற்படுத்தப்பட்டோர் என்ற பிரிவு உருவாக்கி அவர்களை ஒரு தொகுப்பாக்கி
அதில் பெரும்பான்மையோர் வன்னியர்.
பிற்படுத்தப்பட்ட ஏழை எளிய மக்களின் முன்னேற்றத்திற்கு திமுக என்றென்றும்
பாடுபட்டு வருகிறது.திமுக என்பது தேர்தலுக்கான அரசியல் இயக்கம் அல்ல.
சமூக புரட்சிக்காக தொடங்கப்பட்ட இயக்கம்.
திராவிட இயக்கம் என்று ஒன்று இல்லாமல் போயிருந்தால் பிற்படுத்தப்பட்ட,
மிக மிகப்பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தை கைதூக்கிவிட எந்த இயக்கமும்
இல்லாமல் போயிருக்கும். நாம் இந்த இயக்கத்திற்கு நன்றியுடையவர்களாக
இருக்க வேண்டும் என்று இன்றைக்கு பிற்படுத்தப்பட்ட சமுதாய மக்கள்
கருதுகிறார்கள் என்றால், அந்த எண்ணத்தின் பிரதிபலிப்புத்தான்இந்தக்
கூட்டம்.
மக்கள் தங்களை அறியாமல் திமுகவுக்கு ஆட்சிப் பொறுப்பை தராமல் போனதன் பயனை
இன்று அனுபவிக்கிறார்கள். திமுக ஆட்சி இல்லாத சூழ்நிலையில்,
வாக்களித்தவர்கள் வாயை பொத்திக் கொண்டு கண்ணை மூடிக்கொண்டு தவறு செய்து
விட்டோமே என்பதை வெளியில் சொல்ல வெட்கப்பட்டுக் கொண்டு இருப்பதை நாம்
காண்கிறோம்.
பரிதிமாற்கலைஞரால் பெற முடியாத வெற்றியை 100 ஆண்டுகளுக்குப் பிறகு அவர்
வாழ்ந்த மதுரை வீட்டில் சிலைநிறுவி அவர் கனவை நனவாக்கினோம். இப்போது
செம்மொழி என்றால் செந்தீ பட்டது போல சினம் கொள்கிறார்கள் என்று
கேள்விப்படுகிறேன்.
செம்மொழி பூங்காவில் பூங்காவை அகற்ற முடியவில்லை. செம்மொழியை அகற்றி
விட்டார்கள். அதனால்செம்மொழி ஒழிந்து விடுமா? திமுக ஆட்சிஎதை செய்தாலும்
அதை மாற்றியே தீருவேன் என்று கங்கணம் கட்டிஒரு ஆட்சி தொடர்ந்துகொண்டு
இருக்கிறது. அதை எதிர்க்க எனக்குவலிமை வேண்டும்.
அந்த வல்லமை தர உங்களை பயன்படுத்திக் கொள்ள வந்திருக்கிறீர்கள்.நான்
விரும்பும் வலிமை வந்து இருக்கிறது. வெற்றியா தோல்வியா என்ற போரில் இதோ
வந்து விட்டோம் வெற்றி தேடித் தர என்று நீங்கள்
வந்திருக்கிறீர்கள்.உங்களை வரவேற்கிறேன் என்றார் கருணாநிதி.
பின்னர் அவரை செய்தியாளர்கள் சந்தித்தனர். அப்போது அவரிடம், தலைமைச்
செயலகத்தை மருத்துவமனையாக மாற்றும் திட்டத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம்
இடைக்காலத் தடை விதித்துள்ளதே என்று கேட்டதற்கு அதை வரவேற்பதாக
தெரிவித்தார்.
சங்கரன்கோவில் இடைத் தேர்தலில் அதிமுக வேட்பாளரை அறிவித்து விட்டது.
திமுக வேட்பாளர் யார் என்று கேட்டபோது, தேர்தல் ஆணைம் தேர்தல் தேதியை
அறிவித்தப் பிறகுதான், வேட்பாளர் யார் என்பதை ஆராய்ந்து வெளியிடுவோம்
என்றார் கருணாநிதி.
Tags: karunanidhi , dmk , pmk , கருணாநிதி , திமுக , பாமக

Friday 20 January 2012

ஜெ. அரசுக்கு அடி மேல் அடி!

அதிமுக ஆட்சி அமைந்து கிட்டத்தட்ட 7 மாதங்களாகியுள்ள நிலையில் தொடர்ந்து
சட்ட ரீதியாக பல்வேறு தோல்விகளை ஜெயலலிதா அரசு சந்தித்து வருகிறது.
அதிமுக அரசின் பல முக்கிய முடிவுகள் சென்னை உயர்நீதிமன்றத்திலும் ,
உச்சநீதிமன்றத்திலும் தடைகளைச் சந்தித்துள்ளன.
மே 16ம் தேதி 3வது மறையாக ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசு ஆட்சிக்கு
வந்தது. ஆட்சிக்கு வந்த சில நாட்களிலேயே அதாவது மே 22ம் தேதி திமுக அரசு
அறிமுகப்படுத்திய சமச்சீர் கல்வித் திட்டம் தரமானதாக இல்லை என்று கூறி
அதை நிறுத்தி வைப்பதாக முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.
இதுதொடர்பாக , சமச்சீர் கல்விதிருத்த மசோதா தமிழக சட்டசபையில்
நிறைவேற்றப்பட்டது. மேலும் இத்திட்டத்தை ஆய்வு செய்ய நிபுணர் குழு
அமைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதை
விசாரித்த உயர்நீதிமன்றம் ஜூன் மாதம் , சமச்சீர் கல்வித் திட்டத்தை
நிறுத்தி வைக்கும் தமிழகஅரசின்சட்ட மசோதாவுக்கு இடைக்காலத் தடை
விதித்தது.
இதை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் அப்பீல் செய்தது. ஜூன்
14ம்தேதி இதை விசாரித்த உச்சநீதிமன்றம் , 1 முதல் 6ம் வகுப்பு வரை
நடப்பாண்டு சமச்சீர் கல்வித் திட்டத்தை தொடர வேண்டும் , பிற
வகுப்புகளுக்கு இதை விரிவுபடுத்துவது தொடர்பாக 9 பேர் கொண்ட நிபுணர்
குழுவை அமைத்து ஆராய வேண்டும் என்று தமிழக அரசுக்கு உத்தரவிட்டது.
பின்னர் நிபுணர் குழுவின் அறிக்கையை ஆராய்ந்த சென்னை உயர்நீதிமன்றம்
சமச்சீர் கல்விஅமலாக்கப்பட வேண்டும் என்று அதிரடி உத்தரவிட்டது.
இதுதான் ஜெயலலிதா அரசுக்கு கிடைத்த முதல் சட்ட அடியாகும்.
இதைத் தொடர்ந்து நில அபகரிப்பு வழக்குகளில் கைதான பலரையும் அதிமுக அரசு
குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து உள்ளே போட்டது. ஆனால் பொட்டு சுரேஷ்
உள்ளிட்ட பலரையும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்தது செல்லாது என்று
அதிரடி தீர்ப்புகள் வெளியாகின. இதனால் பொட்டு சுரேஷ் உள்ளிட்டோர் வெளியே
வந்தனர்.
அடுத்து கடந்த ஆகஸ்ட் மாதம் 19ம் தேதி திமுக ஆட்சியின்போதுகட்டப்பட்ட
புதிய தலைமைச் செயலகம் அதி உயர் மருத்துவமனை மற்றும் மருத்துவக்
கல்லூரியாகமாற்றப்படும் என முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். இந்த
மருத்துவமனை திட்டத்திற்குத்தான் இன்று சென்னை உயர்நீதிமன்றம் தடை
விதித்துள்ளது.
இதேபோல , சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தை உயர்
சிறப்பு குழந்தைகள் மருத்துவமனையாக மாற்றப் போவதாகமுதல்வர் ஜெயலலிதா
அறிவித்தார். இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத்
தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் அரசின்
முடிவுக்குத் தடை விதித்தது. இன்று வரை இந்தத் தடை தொடருகிறது.
அதேபோல 13,500 மக்கள் நலப் பணியாளர்களையும் ஒரே கையெழுத்தில் அதிமுக அரசு
வீட்டுக்கு அனுப்பி உத்தரவிட்டது. இதை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கை
விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் பணி நீக்கம் செய்ததற்கு இடைக்காலத்தடை
விதித்தது. பின்னர் இதுகுறித்து உச்சநீதிமன்றத்தில் அப்பீல் செய்தது
தமிழக அரசு. ஆனால் அதை சமீபத்தில் திரும்பப் பெற்றுக்கொண்டது.
ஜெயலலிதா அரசு பதவிக்கு வந்த பிறகு சட்ட ரீதியாக விழுந்த இன்னொரு மிகப்
பெரிய கொட்டு எதுஎன்றால் அது இருளர் சமூகப் பெண்கள் பாலியல் பலாத்காரம்
செய்யப்பட்ட விவகாரம்தான்.
விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகே போலீஸாரால் 4 இருளர்
சமுதாயத்தைச் சேர்ந்த பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டனர். இது
பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. இதையடுத்து உடனடியாக களத்தில் இறங்கிய
அரசு பிரச்சினையை அமுக்கும் வகையில் , நான்கு பெண்களுக்கும் தலா ரூ. 5
லட்சம் இழப்பீட்டுத் தொகையை அறிவித்தது. அமைச்சர் சி.வி.சண்முகம் நேரில்
சென்று இதை வழங்கினார்.
ஆனால் குற்றம் இழைத்த ஒரு போலீஸ்காரர் கூட கைது செய்யப்படவில்லை.
இதையடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த
வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் , சாதாரண வழக்குகளிலெல்லாம் உடனடியாக
கைது செய்கிறீர்கள். ஆனால் மிகப் பெரிய குற்றத்தை இழைத்துள்ள
போலீஸ்காரர்களை இதுவரை கைது செய்யாமல் உள்ளீர்கள் என்று அரசுக்கு கடும்
கண்டனம் தெரிவித்தது.
இந்த வழக்கில் 2 முறை தமிழக அரசு உயர்நீதி்மன்றத்தில் குட்டு வாங்கியது.
இருப்பினும் இதுவரை எந்தக் கைதும் நடைபெறவில்லை என்பது
குறிப்பிடத்தக்கது. தற்போது இந்த வழக்கு சிபிஐ வசம் போகும் சூழல்கள்
உள்ளது.
அதேபோல அதிமுக அரசுக்கு கிடைத்த இன்னொரு குட்டு , மதுரையிலிருந்து
வந்தது. பரமக்குடியில் தலித் மக்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு
குறித்த விசாரணையில் திருப்தி இல்லை என்று கூறி மதுரை உயர்நீதிமன்றக்
கிளையில்வழக்குத் தொடரப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றக்
கிளை , இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டது. இதுவும்
தமிழக அரசுக்கு கிடைத்த அடிதான்.
இப்படி அடுத்தடுத்து முக்கிய பிரச்சினைகளில் அதிமுக அரசு தொடர்ந்து சட்ட
ரீதியான அடி வாங்கி வருவது அதிமுக அரசின் சட்ட ரீதியான கையாளுதல்கள்
குறித்த கேள்வியை எழுப்பியுள்ளது.

Monday 16 January 2012

பாமகவில் இருந்து நீக்கப்பட்ட வேல்முருகனின் கட்சித.வா.க. உதயம்

பாமகவில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்ட முன்னாள் எம்.எல்.ஏ. வேல்முருகன்
பொங்கல் திருநாள் அன்று தமிழர் வாழ்வுரிமை கட்சி என்ற புதிய கட்சியைத்
துவங்கியுள்ளார்.
பாமகவில் இருந்து முன்னாள் எம்.எல்.ஏ. வேல்முருகன் அதிரடியாக
நீக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து அவரது ஆதரவாளர்கள் சிலரும்
நீக்கப்பட்டனர். இந்நிலையில் புதிய கட்சி துவங்கப்போவதாக அவர்
அறிவித்திருந்தார்.
அறிவித்தவாறே நேற்று அதாவது தமிழர் திருநாளான பொங்கல் திருநாளன்று
சென்னையில் புதிய கட்சியைத் துவங்கினார். அவர் தனது கட்சிக்கு தமிழர்
வாழ்வுரிமை கட்சி என்று பெயர் சூட்டியுள்ளார். துவக்க விழாவில் கட்சிக்
கொடியையும் அறிமுகப்படுத்தினார்.
அதன் பிறகு அவர் கூறியதாவது ,
நாங்கள் யாருக்கும் எதிரானவர்கள் கிடையாது. அதனால் யாருடன்
வேண்டுமானாலும் கூட்டணி வைப்போம். காலத்திற்கேற்ப அரசியல் சட்டத்தை
மாற்றியமைக்க வேண்டும் என்றார்.