Followers

Friday 24 February 2012

தகவல் உரிமை சட்டத்தில் வருமானம்-சொத்து விவரங்களை வெளியிட சோனியா மறுப்பு

 
 
சென்னையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் வி.கோபால கிருஷ்ணன் டெல்லி வருமான வரி உதவி கமிஷனருக்கு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் ஒரு மனு அனுப்பி இருந்தார்.
 
அதில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் 2000-2001 மற்றும் 2010-2011-ம் ஆண்டுக்கான வருமான வரி கணக்கு தாக்கல் செய்த படிவங்களை தகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005 பிரிவு 11-ன் கீழ் தெரிவிக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
 
இது பற்றி வருமான வரி உதவிக் கமிஷனர் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு கடிதம் எழுதி இருந்தார். அதற்கு சோனியா பதில் தெரிவித்துள்ளார். அதில், எனது சொத்து கணக்கு, வருமானவரி செலுத்திய விவரங்கள் தனிப்பட்ட விஷயம். பொது வாழ்வில் ஈடுபட்டுள்ள நான் அதை தேவையில்லாத 3-வது நபருக்கு பரிமாறக் கொள்ளக் முடியாது. அது எனது தனிப்பட்ட பாதுகாப்பு விவகாரத்தில் தலையிடுவதாகும்.
 
தனி நபர் வருமான வரித்துறைக்கு தெரிவிக்கப்பட்டுள்ள தகவல்கள் ரகசியமானவை. பாதுகாக்கப்பட வேண்டியவை. 1961-ம் ஆண்டு வருமான வரிச் சட்டம் 138-வது பிரிவின் கீழ் யாருக்கும் தெரிவிக்க வேண்டியதில்லை என்று சோனியா பதில் அளித்துள்ளார்.
 
சோனியாவின் பதிலை மனுதாரருக்கு வருமான வரித் துறை தெரிவித்துள்ளது. சோனியாவின் வருமான வரி கணக்கு விவரங்களை தெரிவிக்க மறுத்து இருப்பது இது 2-வது முறையாகும். ஏற்கனவே இது போல் வருமான வரி கணக்கு தாக்கல் விவரங்களை கேட்டிருந்தார். அதற்கு சோனியாவிடம் பதில் பெறாமல் வருமான வரித்துறையே தர மறுத்து விட்டது.
 
அதன் பிறகு கடந்த மாதம் கோபாலகிருஷ்ணன் மீண்டும் வருமான வரித் துறையிடம் சோனியாவின் வருமான வரி கணக்குகளை கேட்டு கடிதம் அனுப்பினார்.
 
இந்த முறை சோனியாவிடம் வருமானவரித்துறை அதிகாரிகள் பதில் பெற்று அதை மனுதாரருக்கு தெரிவித்துள்ளனர். இதன் மூலம் 2-வது முறையாகவும் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.



உரிமைக்காக போராடும் விவசாயிகளை நக்சலைட்டுகள் என்றழைக்கப்படுகிறார்கள்: ராகுல் காந்தி

 
 
உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத் நகரில் நேற்று நடந்த தேர்தல் கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது-
 
உத்தரபிரதேச மாநிலத்தில் விவசாயிகள் தங்களின் உரிமைக்காக போராடினால் அவர்கள் நக்சலைட்டுகள் என்று அழைக்கப்பட்டு அவர்களின் மீது துப்பாக்கி குண்டு மழைகள் பொழியப்படுகின்றன.
 
முன்னதாக, கடந்த வருடம் நொய்டா அருகே உள்ள பாட்டா பர்சாவுல் கிராமத்தில் மாயாவதி அரசால் கைப்பற்றப்பட்ட தங்களின் நிலத்துக்கு அதிக நஷ்டஈடு கேட்டு விவசாயிகள் போராடியதை சுட்டிக்காட்டிய ராகுல் தங்களின் தேவையை விவசாயிகள் கேட்டது ஒரு குற்றமா என்று கேள்வி எழுப்பினார்.
 
மேலும், இந்த சம்பவத்தை தொடர்ந்து ஏராளமான விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டனர். ஆனால், பகுஜன் சமாஜ்வாடி அரசு அவர்களுக்கு ஒன்றும் செய்யவில்லை என்று மாயாவதி அரசை குற்றம் சாட்டினார்.
 
காங்கிரஸ் கட்சியல்லாத மற்ற கட்சிகளின் அனைத்து முதல்வர்களும் மாநிலத்தை நாசபடுத்தி பணத்தை சூறையாடியுள்ளனர் என்று கூறிய ராகுல், இந்த நிலையை உத்தரபிரதேச மாநிலத்தில் வரும் ஐந்து ஆண்டுகளில் காங்கிரஸ் கட்சியால் மாற்ற முடியும் என்று தெரிவித்தார்.



Wednesday 22 February 2012

அட பாவீகளா எல்லாம் நாடகமா? ஜெயலலிதா, சசி சந்திப்பு

 
 
போயஸ் கார்டனை விட்டு சசிகலா வெளியேறிய நிலையில் கடந்த 16ம் தேதி சசிகலாவை சிறுதாவூரில் உள்ள பங்களாவுக்கு வர வைத்து அவரிடம் முக்கியமாகப் பேசியுள்ளார் முதல்வர் ஜெயலலிதா என்று கூறப்படுகிறது. அந்த சந்திப்பின்போது நடராஜன் கைது குறித்தும் ஜெயலலிதா முன்கூட்டியே தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.
 
கடந்த 2011ம் ஆண்டு டிசம்பர் மாதம் 18ம் தேதி தனது நெருங்கிய தோழி சசிகலா உள்ளிட்ட 12 பேரை அதிமுகவில் இருந்து முதல்வர் ஜெயலலிதா நீக்கினார். ஆனால் அதற்கு முன்னதாகவே டிசம்பர் 10ம் தேதியே சசிகலா போயஸ் தோட்டத்திலிருந்து வெளியேற்றப்பட்டார். டிசம்பர் 12ம் தேதி சசிகலாவை யாரும் சந்திக்கக் கூடாது, பேசக் கூடாது என்று ஜெயலலிதா உத்தரவிட்டார்.
 
இதையடுத்து சசிகலாவின் கணவர் நடராஜன், தம்பி திவாகரன், உறவினரான கோவையைச் சேர்ந்த ராவணன் போன்றவர்கள் பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
 
அதிமுக ஆட்சி அமைந்தது முதல் சசிகலாவின் உறவினர்கள் அதிகார மையங்களாக மாறி கோடி கோடியாக வசூலித்ததும், சில பல சொத்துக்களை வாங்கி குவித்ததும் உளவுத்துறை மூலமாக ஜெயலலிதா தெரிந்து கொண்டதால் தான் இந்த நடவடிக்கை என்று கூறப்படுகின்றது.
 
இது உண்மையா ... இப்படியெல்லாம் நடக்குமா ? இல்லை இது நாடகமாஎப்படியும் மூன்று அல்லது ஆறு மாதங்களில் மீண்டும் சேர்ந்துவிடுவார்களா ? அப்படி சேர்ந்துவிட்டால் நாம் என்ன செய்வது?என்று அதிமுக முக்கிய அமைச்சர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் மண்டையை போட்டு உடைத்துக் கொண்டிருக்கின்றனர்.
 
இல்லை, இல்லை, இது நிரந்தரமான பிரவு தான். சந்தேகம் வேண்டாம். சசிகலா மீண்டும் முதல்வர் ஜெயலலிதாவோடு சேரவே முடியாது. அதற்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டார் முதல்வர் என்று எல்லாரும் பேசி வருகின்றனர்.
 
இந்த நிலையில் ஜெயலலிதாவும் சசிகலாவும் கடந்த 16ம் தேதி மாலை சிறுதாவூரில் சந்தித்துப் பேசியதாக கூறப்படுகின்றது. அப்போது இளவரசியும் உடன் இருந்தாராம். இந்த சந்திப்பு ஒரு மணி நேரம் நடந்துள்ளதாக கூறப்படுகின்றது. அப்போது அங்கு சோகம், வேகம், பாசம், என பல முக பாவனைகள் கலந்து சம்பவங்கள் நடைபெற்றதாக அதிமுக வட்டாரங்களில் இருந்தே தகவல்கள் வெளியாகியுள்ளது.
 
இந்த சந்திப்பின்போது நடராஜன் கைது குறித்து ஜெயலலிதா கூறியதாகவும் கூறப்படுகிறது. இந்த சந்திப்புக்குப் பின்னர்தான் பெங்களூர் கோர்ட்டில் சசிகலா ஆஜராகி கண்ணீர் வடித்தபடி தானே அத்தனைக்கும் பொறுப்பு என்று வாக்குமூலம் அளித்தார்.
 
தற்போது போயஸ் கார்டனை விட்டு சசிகலா வெளியேறினாலும், அவரது அண்ணி இளவரசி ஜெயலலிதாவுடன் இன்னும் தொடர்பில் உள்ளதாகவே கூறப்படுகின்றது. இளவரசி மூலமாகவே பல தகவல்கள் ஜெயலலிதா வசம் சென்றதாக ஒரு தகவல் உண்டு. இளவரசி மூலமே பல தகவல்கள் போயஸ் கார்டனுக்கு அப்டேட் செய்யப்படுகின்றதாம்.
 
தற்போது இளவரசி கொடியே போயஸ் கார்டனில் பறப்பதாகவும் கூறப்படுகின்றது. சசிகலா ஆதரவு அமைச்சர்கள் பலர் தங்களது பதவியை காப்பாற்றிக் கொள்ள ரகசியமாக இளவரசியின் உதவியை நாட ஆரம்பித்துள்ளதாகவும் பேச்சு அடிபடுகிறது.
 
ஆனால் ஏற்கனவே சசிகலா விவகாரத்தில் பட்ட சூட்டால், இளவரசிக்கு அந்த அளவுக்கு முதல்வர் ஜெயலலிதா இடம் தர மாட்டார் என்றும் திடமாக பேசப்படுகிறது.



Tuesday 21 February 2012

பிரதமர் பதவிக்கு தகுதியானவர்கள் ஆறு பேர்

 
 
எங்கள் கட்சியில், பிரதமர் பதவி வேட்பாளருக்கு தகுதியான தலைவர்கள் ஐந்து அல்லது ஆறு பேர் இருக்கின்றனர். அவர்களில் ஒருவர் நரேந்திர மோடி'என, பா.ஜ., தேசிய தலைவர் நிதின் கட்காரி கூறினார்.
 
அடுத்த பார்லிமென்ட் தேர்தலில், பா.ஜ.,வின் பிரதமர் வேட்பாளர் யார் என்பதில், அந்த கட்சிக்குள் கடும் போட்டி நிலவுகிறது. கட்சியின் மூத்த தலைவரான அத்வானி, தன்னை பிரதமர் பதவிக்கான வேட்பாளராக முன் மொழிய வேண்டும் என்பதில் ஆர்வமாக இருந்தார். இதற்காக, நாடு தழுவிய ரத யாத்திரையையும் சமீபத்தில் மேற்கொண்டார். அதேநேரத்தில், பா.ஜ., மூத்த தலைவர்களில் ஒருவரும், குஜராத் முதல்வருமான நரேந்திர மோடியை, பிரதமர் பதவி வேட்பாளராக நிறுத்த வேண்டும் என, கட்சிக்குள் ஒரு சிலர் விரும்பினர். இந்த விவகாரத்தில் அத்வானிக்கும், நரேந்திர மோடிக்கும் இடையே, கருத்து வேறுபாடு எழுந்ததாக கூறப்பட்டாலும், இருவருமே, அதைப் பற்றி வெளிப்படையாக எந்த கருத்தும் தெரிவிக்காமல் மவுனமாக இருந்தனர்.
 
பிரசாரம் புறக்கணிப்பு:

இதற்கிடையே, உ.பி., உள்ளிட்ட ஐந்து மாநில சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும், பிரதமர் பதவி வேட்பாளராக தன்னை முன்னிலைப்படுத்தும் வகையில், நரேந்திர மோடி தீவிரமாக பிரசாரம் செய்வார் என, எதிர்பார்க்கப்பட்டது. ஆனாலும், பஞ்சாப், உத்தரகண்ட் மாநிலங்களில் பிரசாரம் செய்யாமல் புறக்கணித்தார். உ.பி., மாநிலத்திலும் இதுவரை பிரசாரம் செய்யவில்லை. உ.பி., மாநில பா.ஜ.,வினர், நரேந்திர மோடியை பிரசாரத்துக்கு விரும்பி அழைத்தபோதும், அவர் தொடர்ந்து புறக்கணித்து வருகிறார்.
 
எதிரியே காரணம்:

நரேந்திர மோடியின் அரசியல் எதிரியாக கருதப்படும் சஞ்சய் ஜோஷியை, உ.பி., சட்டசபை தேர்தல் பிரசாரத்துக்கான பொறுப்பாளராக, நிதின் கட்காரி நியமித்தது தான், மோடி, பிரசாரத்தை புறக்கணித்ததற்கு காரணம் என்றும் தகவல்கள் வெளியாயின. இதனால், பா.ஜ.வுக்குள், கட்காரிக்கும், மோடிக்கும் இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டதாகவும் கூறப்பட்டது.
 
கட்காரி விளக்கம்:

இந்நிலையில், இதுகுறித்த கேள்விகளுக்கு நிதின் கட்காரி நேற்று விளக்கம் அளித்தார். அவர் கூறியதாவது:சமூக நல்லிணக்க விழாக்களை, குஜராத் முழுவதும் நரேந்திர மோடி நடத்தி வருகிறார். இந்த விழாக்களில் பங்கேற்க வேண்டியிருப்பதாலும், குஜராத் மாநில அரசியலில் கவனம் செலுத்தி வருவதாலும், அவரால் உ.பி., சட்டசபை தேர்தலில் பிரசாரம் செய்ய முடியவில்லை. அவர் பிரசாரத்துக்கு வராததால், நான் ஏமாற்றம் அடைந்துள்ளதாக சிலர் கேட்கின்றனர். இதற்கு எந்த பதிலும் தெரிவிக்க முடியாது.மற்ற மாநில முதல்வர்களுக்கு, ஒரு சிறப்பான முன் மாதிரியாக அவர் திகழ்கிறார். நிர்வாகத் திறமையிலும், மற்றவர்களுக்கு முன் மாதிரியாக செயல்படுகிறார். பிரதமர் பதவி வேட்பாளருக்கு தகுதியான, ஐந்து அல்லது ஆறு தலைவர்கள் பா.ஜ.,வில் இருக்கின்றனர். அவர்களில் நரேந்திர மோடியும் ஒருவர்.
 
வருணுக்கு முக்கியத்துவமா?

நரேந்திர மோடி பிரசாரத்துக்கு வராததால், பா.ஜ., எம்.பி.,யான வருணுக்கு, பிரசாரத்தில் அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுவதாகவும் சிலர் கூறுகின்றனர். பா.ஜ.,வைப் பொறுத்தவரை, ஒவ்வொரு தலைவருமே, பிரசாரத்தில் தங்களால் முடிந்த அளவுக்கு பணியாற்றி வருகின்றனர். ஒரு சிலர், மற்ற பணிகளில் தீவிரமாக இருப்பதால், பிரசாரம் செய்ய முடியவில்லை.இவ்வாறு நிதின் கட்காரி கூறினார்.
 
பிரதமர் பதவிக்கு தகுதியான வேட்பாளர்களில் நரேந்திர மோடியும் ஒருவர் என, கட்காரி கூறியிருப்பது, பா.ஜ.,வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
கட்காரிக்கு மீண்டும் வாய்ப்பு

பா.ஜ., தேசிய தலைவராக உள்ள நிதின் கட்காரியின் பதவிக் காலம், வரும் டிசம்பருடன் முடிவுக்கு வருகிறது. அடுத்த மூன்றாண்டுகளுக்கும் அவரே, கட்சியின் தலைவராக தொடர வேண்டும் என, ஆர்.எஸ்.எஸ்., தலைவர்கள் விரும்புவதாக தகவல் வெளியாகியுள்ளது. அடுத்த லோக்சபா தேர்தல் வரை, நிதின் கட்காரியே தலைவராக இருக்க வேண்டும் என, ஆர்.எஸ்.எஸ்., தலைவர்கள் கருதுவதால், அவருக்கு இரண்டாவது முறையாக வாய்ப்பு அளிக்கவுள்ளதாக பேச்சு எழுந்துள்ளது.



வரும் தேர்தலில் தேமுதிக ஆட்சியை பிடிக்கும்

 
 
தேமுதிக தலைமை செயற்குழு மற்றும் 7வது பொதுக்குழு கூட்டம் சென்னையை அடுத்த வானகரத்தில் நேற்று நடந்தது. விஜயகாந்த் தலைமையில் நடந்த கூட்டத்துக்கு, அழைப்பு விடுக்கப்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் விஜயகாந்த் பேசியதாவது: தானே புயலால் பாதித்த பகுதிகளில் வாழும் மக்களுக்கு ரூ.200 கோடி வட்டியில்லா கடன் வழங்குவதாக தமிழக அரசு அறிவித்தது.
 
மானியமா கொடுப்பதா சொல்லிட்டு, இப்போது அந்த தொகையை கடனாக கொடுக்கிறாங்க. இப்படித் தான் மத்திய, மாநில அரசுங்க மக்களை ஏமாத்துறாங்க. ஆனா மக்களை ஏமாத்தி ஓட்டை மட்டும் வாங்கிக்கிறாங்க. கூடங்குளம் அணுமின் நிலைய பிரச்னையில தமிழக அரசு நிபுணர் குழு ஒன்றை அனுப்பி ஒரு அற்ப நாடகத்தை அரங்கேற்றியிருக்கு. அந்த அம்மா பதவி ஏற்று 100 நாள் ஆன உடனே பாராட்டி பேச சொன்னாங்க. கூடங்குளம் பிரச்னையில அந்த பகுதி மக்கள் 100 நாளா தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்தாங்க அப்போ அவங்கிட்ட இந்த அம்மா போய் பேசனும்ல.
 
தமிழக அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லைன்னு பார்த்தா, அந்த பகுதியில மண் அள்ளுற ஒருத்தருக்காக இந்த விஷயத்துல அந்த அம்மா பாலிசா போறதா சொல்றாங்க. இது எந்த அளவுக்கு உண்மைன்னு தெரியல. தேர்தல் சமயத்துல பணம் கொடுத்து அந்த ஆளு உதவுறதா சொல்றாங்க. கூடங்குளம் பிரச்னையில ஏதோ சதி நடக்கிறது?. சட்டமன்றத்துல நான் கைய காட்டி பேசினதா சொல்லி சஸ்பெண்ட் பண்ணியிருக்காங்க. சட்டமன்றத்துல கைய காட்டக் கூடாது, நாக்க துருத்தக் கூடாதுன்னு சட்ட புத்தகத்தில எங்கயாவது சொல்லியிருக்கா.
 
1991ம் ஆண்டில் இருந்து அதிமுக, திமுக கட்சிகள் தான் மாறி மாறி ஆட்சி செஞ்சாங்க. மின் உற்பத்திக்காக ஏதாவது திட்டம் போட்டாங்களா? இல்லை. அவங்க செஞ்ச தப்புகளால தான் இப்ப தமிழகம் இருண்டு போயிருச்சு. மாணவர்கள் எல்லாம் படிக்க முடியாம சிரமப்படுறாங்க. வரும் தேர்தல்ல தேமுதிக ஆட்சிய பிடிக்கும். கடந்த தேர்தலுக்கு முன்பும் இப்படி சொல்லிட்டு அதிமுகவோட ஏன் கூட்டணி வச்சீங்கன்னு சிலர் கேட்டாங்க. பதவிக்கு ஆசைபட்டவன் நான் இல்ல. அந்த அம்மாவிடம் எந்த பதவியையும் நான் கேட்கவில்லை. மக்கள் பிரச்னைக்காக மட்டுமே அதிமுகவோட கூட்டணி வச்சேன். பணம் வாங்கிட்டு தேமுதிக தனியா ஒதுங்கிட்டாங்க என்ற பேச்சு வந்திரக்கூடாது என்பதற்காகவும் கூட்டணி வச்சேன். எங்க எம்எல்ஏக்கள் எல்லாம் வறுமையில இருக்காங்க காசு கொடுத்து வாங்கிடலாம்னு தப்பு கணக்கு போடாதீங்க. இவ்வாறு விஜயகாந்த் கூறினார்.
 
பொதுச்செயலாளராக வும் விஜயகாந்த்: தேமுதிக கட்சியின் பொதுச் செயலாளராக ராமு வசந்தன் பதவி வகித்து வந்தார். அவர் காலமானதை தொடர்ந்து அந்த பதவி காலியாக இருந்தது. இந்நிலையில், பொதுக்குழுவின் மீண்டும் கட்சி தலைவராக விஜயகாந்த் தேர்வு செய்யப்பட்டார். அத்துடன் காலியாக இருந்த பொதுச் செயலாளர் பதவியும் விஜயகாந்த்துக்கு கூடுதலாக வழங்கப்பட்டது. இதற்கான அறிவிப்பை அவைத்தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் அறிவித்தார்.



Monday 20 February 2012

ஜெ. சவாலை ஏற்றார் விஜயகாந்த்..களத்தில் குதித்தது தேமுதிக

 
 
 
திராணி இருந்தால் சங்கரன்கோவில் இடைத் தேர்தலில் தனித்துப் போட்டியிடுங்கள் பார்ப்போம் என்று கூறிய முதல்வர் ஜெயலலிதாவின் சவாலை ஏற்று சங்கரன்கோவில் இடைத் தேர்தலில் போட்டியிடுவதாக தேமுதிக அறிவித்துள்ளது. இருப்பினும் திமுகவின் ஆதரவை நாடுமா என்பது தெரியவில்லை.
 
தேமுதிக சார்பில் சங்கரன்கோவிலில் முத்துக்குமார் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
 
சங்கரன்கோவிலில் மார்ச் 18ம் தேதி இடைத் தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு பல வாரங்களுக்கு முன்பே அதிமுக தனது வேட்பாளராக என்ஜீனியர் முத்துச்செல்வியை அறிவித்தது.
 
பின்னர் திமுக தனது வேட்பாளராக ஜவகர் சூரியகுமாரை அறிவித்தது. அதேபோல மதிமுகவும் தனது வேட்பாளராக டாக்டர் சதன்திருமலைக்குமாரை அறிவித்தது.
 
இந்த நிலையில் தேமுதிகவின் நிலை தெரியாமல் இருந்து வந்தது. நாளை கூடும் அக்கட்சியின் பொதுக் குழுக் கூட்டத்தில் இதுகுறித்து முடிவெடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
 
இந்த நிலையில் இன்றே தனது கட்சி வேட்பாளரை அறிவித்து விட்டார் விஜயகாந்த்.
 
தேமுதிக சார்பில் முத்துக்குமார் போட்டியிடுவார் என விஜயகாந்த் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
 
நடைபெற இருக்கின்ற சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பில் திருநெல்வேலி மேற்கு மாவட்ட கழகத்தின் துணை செயலாளர் மு. முத்துக்குமார், பி.இ,எம்பிஏ வேட்பாளராக போட்டியிடுகிறார் என்பதை தெரிவித்துக் கொள்ளுகிறேன்.
 
திருநெல்வேலி அரசு பொறியியல் கல்லூரியில் பி.இ. பயின்றவர். எம்பிஏ பட்டப் படிப்பு அழகப்பா பல்கலை கழகத்தின் தொலை தூர கல்வி மூலம் முடித்துள்ளார். கடந்த 2006 சட்டமன்ற தேர்தலில் சங்கரன்கோவில் தொகுதியில் போட்டியிட்டவர். இவர் சங்கரன்கோவில் நகரத்தில் வசிக்கின்றார்.
 
கழக நிர்வாகிகளும், தொண்டர்களும், கழக ஆதரவு அணிகளை சேர்ந்தவர்களும் அயராது தேர்தல் பணியாற்றி வெற்றி தேடி தருமாறு கேட்டுக் கொள்கின்றேன். சங்கரன்கோவில் தொகுதியை சேர்ந்த வாக்காளர் பெருமக்களும், பொதுமக்களும் தங்கள் மேலான ஆதரவை தர வேண்டுகிறேன் என்று கூறியுள்ளார் விஜயகாந்த்.
 
இந்தப் போட்டியைத் தொடர்ந்து சங்கரன்கோவிலில் தற்போது நான்குமுனை போட்டி உருவாகியுள்ளது. அதேசமயம், பொது வேட்பாளரை நிறுத்தும் வாய்ப்பு மங்கியுள்ளது. இருப்பினும் கடைசி நேரத்தில் தேமுதிக, திமுக இடையே உடன்பாடு ஏற்பட்டால் இவர்களில் யாராவது ஒருவர் விலகிடலாம் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது.
 
நாளை சென்னையில் நடைபெறவுள்ள தேமுதிக பொதுக்குழுக் கூட்டத்தில் விஜயகாந்த் எப்படிப் பேசப் போகிறார், என்ன பேசப் போகிறார் என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.



மு.க.அழகிரியை அவமதித்தாரா கே.என்.நேரு?-திமுகவில் அடுத்த பரபரப்பு!

 
 
 
மாஜி அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் மூலம் மு.க.ஸ்டாலினுக்கு திமுகவில் நெருக்கடி கொடுக்கப்பட்டு வரும் நிலையில், ஸ்டாலின் ஆதரவாளரான கே.என். நேரு மூலம் தற்போது மு.க.அழகிரி அவமானப்படுத்தப்பட்டதாக பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
கே.என்.நேருவின் மன் கல்யாணம் நேற்று திருச்சியில் நடந்தது. கருணாநிதி தலைமை தாங்கி நடத்தி வைத்தார். அப்போது நான் 6வது முறையாக முதல்வராக வருகிறேனோ இல்லையோ, ஆனால் நேரு குடும்பத்தில் 6வது கல்யாணத்திற்கு வந்து விட்டேன். இதுதான் எனக்குப் பெருமையாக உள்ளது என்று பேசினார்.
 
இந்த திருமண விழாவில் வழக்கமாக கருணாநிதிக்கு அருகில் அமரும் மு.க.ஸ்டாலின் அவருக்குப் பக்கத்தில் உட்காராமல் சற்று தள்ளிப் போய் அமர்ந்தார்.மேலும், மு.க.அழகிரி திருமணத்திற்கு வரவே இல்லை. காரணம் அவரை அவமானப்படுத்தும் வகையில் திருமண அழைப்பிதழையும், பத்திரிகை விளம்பரத்தையும் கே.என்.நேரு தயாரித்ததே காரணம் என்று கிசுகிசுக்கப்படுகிறது.
 
பத்திரிகைகளில் நேரு சார்பில் தரப்பட்ட விளம்பரங்களில் தேய்பிறை படத்தைப் போட்டு அதில் அழகிரி படத்தைப் போட்டு விட்டார்களாம். இதனால் தேய்பிறை போல அழகிரி இனி தேயப் போகிறார் என்று நேரு மறைமுகமாக கூறியுள்ளதாக அழகிரி தரப்பு காட்டமாகியுள்ளது. இதனால்தான் அழகிரி திருமணத்திற்கு வரவில்லை என்கிறார்கள்.



சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. தோற்றது ஏன்?: மு.க.ஸ்டாலின் விளக்கம்

 
 
பெரம்பலூர், அரியலூர் மாவட்ட தி.மு.க. இளைஞரணி நிர்வாகிகளுக்கான நேர்காணல் முகாம் பெரம்பலூரில் நடந்தது. தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு நேர்காணல் நடத்தினார். அப்போது அவர் பேசியதாவது:-
 
நமது கட்சியில் உள்ள பல அணிகளில் முதலிடத்தில் உள்ளது இளைஞரணி. கட்சியின் துணை அமைப்பாக 1980-ம் ஆண்டில் இந்த அணி தி.மு.க. தலைவர் கலைஞரால் தோற்றுவிக்கப்பட்டது. இளைஞரணியில் குளறுபடியும், பிரச்சினைகளும் எழுந்ததால் அதன் பொறுப்பாளருக்கு வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டது. அதன்படி 30 வயதுக்குட்பட்ட தகுதி உள்ளோரே இளைஞரணியில் இருக்கவேண்டும்.
 
ஆடம்பர வசதிகள் பெருகி வரும் நிலையில் ஆபத்துக்களும் அதிகமாகின்றன. ஆனால் பொருளாதாரம் வளர்ந்தால்தான் நாடு வளரும். கட்சிக்கு புது ரத்தம் பாய்ச்சவே இளைஞரணியினர் தேர்வு செய்யப்படுகின்றனர். 50 ஆண்டுகளில் செய்ய முடியாத பணிகளை கடந்த 5 ஆண்டு ஆட்சி காலத்தில் தி.மு.க. ஆட்சி காலத்தில் கலைஞர் செய்தார்.
 
இனி இதுபோன்ற சாதனைகளை செய்ய இயலாது. மாணவர்களையும், இளைஞர்களையும் நமது ஆட்சியில் கவர்ந்து இழுக்கவில்லை. அதனால்தான் பல்வேறு சாதனைகளை செய்த போதும் கடந்த சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. தோல்வி அடைந்தது. தற்போது 75 சதவீத கட்சி பணிகள் முடிந்து விட்டன.
 
இதனால் நமது கட்சியினரிடையே எழுச்சி ஏற்பட்டு உள்ளது. இளைஞரணி பொறுப்பாளர்கள் பதவிகளுக்கு பெரம்பலூர் மாவட்டத்தில் 202 பேரும், அரியலூர் மாவட்டத்தில் 426 பேரும் விண்ணப்பித்து உள்ளனர். மற்ற மாவட்டங்களை விட அதிகமானோர் இங்கு விண்ணப்பித்து உள்ளனர்.
 
இவர்களில் பெரம்பலூர் மாவட்டத்தில் 37 பேர், அரியலூர் மாவட்டத்தில் 46 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். மீதமுள்ளோர் பதவி இல்லை என வருத்தப்பட வேண்டாம். அவர்கள் எல்லாம் கட்சியின் சொத்துக்கள். அவர்கள் அனைவருக்கும் மற்ற அமைப்புகளில் பொறுப்புகள் தரப்படும்.
 
இவ்வாறு அவர் பேசினார்.



தேமுதிகவை அழிக்கும் வேலையில் அதிமுக; சுதாகரித்து கொண்ட விஜயகாந்த்

 
 
தே.மு.தி.க., பொதுக் குழு நாளை நடக்கிறது. அதற்குள், யாரும் கட்சி தாவாமல் இருக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்கும்படி, தே.மு.தி.க., மாநில நிர்வாகிகளுக்கு, விஜயகாந்த் ரகசிய உத்தரவு பிறப்பித்துள்ளார்.
 
நூலறுந்த பட்டம்

சட்டசபை தேர்தலில் கூட்டணி அமைத்து, உள்ளாட்சி தேர்தலில் பிரிந்தாலும், அ.தி.மு.க., - தே.மு.தி.க.,வினர் இடையே நட்பு இருந்து வந்தது. சட்டசபையில், முதல்வர் ஜெயலலிதாவிற்கும், தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்திற்கும் இடையே நடந்த நேரடி வாக்குவாதம், இந்த நட்புறவை முறித்துள்ளது.தே.மு.தி.க.,வில் இருந்து ஆட்களை இழுக்கும் வேலைகளை, அ.தி.மு.க., பிரதிநிதிகள் துவக்கியுள்ளனர். சமீபத்தில் தே.மு.தி.க., தொழிற்சங்க மாநில நிர்வாகி வேல்முருகன் மற்றும் பல்வேறு அணி நிர்வாகிகள், அ.தி.மு.க.,வில் இணைந்தனர்.இவர்கள் அனைவரும் நிச்சயம் வெளியேறுவர் என, சில மாதங்களுக்கு முன்பே தகவல் கசிந்தும், அதை, தே.மு.தி.க., தலைமை பொருட்படுத்தாமல் இருந்தது. கட்சி பதவியிலேயே அவர்கள் நீடித்ததால், முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் அ.தி.மு.க.,வில் இணையும் வாய்ப்பு அவர்களுக்குக் கிடைத்தது.
 
ஏமாற்றதே ஏமாறாதே

அதன் பிறகு, தே.மு.தி.க., தலைமை சுதாரித்துக் கொண்டுள்ளது. இருப்பினும், நாளை (21ம் தேதி) சென்னையில், தே.மு.தி.க., பொதுக்குழு கூடும் நாளில் சென்னை, திருச்சி, கோவை, மதுரை, கடலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த சிலர், கட்சி தாவ திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர்கள் யார் என்று கண்டறிந்து, சமரசம் செய்து, "ஒரு இனிய உதயம்' காத்திருக்கிறது, "நம்பினார் கெடுவதில்லை' என அவர்களுக்கு எடுத்துச் சொல்லி, தொடர்ந்து கட்சியிலேயே நீடிக்கச் செய்ய வேண்டும் என, விஜயகாந்த் ரகசிய உத்தரவிட்டுள்ளார்.
 
மாமன் மச்சான்

இந்த சமரச பணிகளை தே.மு.தி.க., மாநில நிர்வாகிகள் சுதீஷ், சந்திரக்குமார், பார்த்தசாரதி அடங்கிய குழுவினர், ரகசியமாக செய்து வருகின்றனர். சமரச பேச்சுக்குப் பிறகும் பொதுக்குழு நாளில், கட்சி தாவல் நடக்கும் வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால்,"காலையும் நீயே மாலையும் நீயே' என, சில முக்கிய நிர்வாகிகள், தே.மு.தி.க., என்ற,"அகல்விளக்கை' அணையாமல் பார்த்துக் கொள்ளும்படி பணிக்கப்பட்டுள்ளனர்.
 
"பொறுத்தது போதும்' கடலூரில் கிளம்பிட்டாங்க!
 
தே.மு.தி.க., நிர்வாகிகள் நியமனத்தில் ஏற்பட்ட அதிருப்தியால் கடலூரில் கட்சிக் கொடி அகற்றப்பட்டது.
 
கடலூர் வடக்கு மாவட்ட தே.மு.தி.க.,விற்கான நிர்வாகிகள் பட்டியலை நேற்று முன்தினம் மாலை கட்சித் தலைமை அறிவித்தது. இது மாவட்ட நிர்வாகிகள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது.இந்நிலையில், மாநில பொதுக்குழு உறுப்பினராக அறிவிக்கப்பட்ட கடலூர் பாதிரிக்குப்பம் சிவராஜ், கட்சியிலிருந்து விலகப் போவதாக நேற்று காலை அறிவித்தார்.அதனைத் தொடர்ந்து, அவரது ஆதரவாளர்கள் பாதிரிக்குப்பம் திரவுபதி அம்மன் கோவில் திடலில் ஏற்றப்பட்டிருந்த தே.மு.தி.க., கொடியை இறக்கியதோடு, கொடிக் கம்பத்தையும் கழற்றி எடுத்துச் சென்றனர். மேலும், அங்கிருந்த கல்வெட்டில் கறுப்பு பெயிண்டை அடித்து பெயர்களை அழித்தனர்.

இதுகுறித்து சிவராஜ் கூறியதாவது:

கடந்த முறை எனக்கு, மாநிலப் பொதுக்குழு உறுப்பினர் பதவி வழங்கப்பட்டது. அதனால் இந்த முறை, மாநிலச் செயற்குழு உறுப்பினர் அல்லது மாவட்டத் துணைச் செயலர் பதவி கேட்டு விண்ணப்பித்தேன். ஆனால், மாவட்டச் செயலரான சிவக்கொழுந்து எம்.எல்.ஏ., பணத்தை வாங்கிக் கொண்டு, சமீபத்தில் கட்சிக்கு வந்தவர்களுக்கு நல்ல பதவியை வாங்கிக் கொடுத்துள்ளார். ரசிகர் மன்றத்திலிருந்து தொடர்ந்து கட்சிக்காக உழைத்து வரும் என்னைப் போன்றவர்கள், ஓரம் கட்டப்பட்டு வருகின்றனர்.இதன் காரணமாகவே நானும், எனது ஆதரவாளர்களும் தே.மு.தி.க.,விலிருந்து விலகுகிறோம். இங்கு அமைக்கப்பட்டிருந்த தே.மு.தி.க., கொடிக் கம்பத்தையும் அகற்றி விட்டேன் . மேலும் பலர் கட்சியிலிருந்து விலக உள்ளனர்.இவ்வாறு சிவராஜ் கூறினார்.




Sunday 19 February 2012

மதிமுகவை ஓரங்கட்டவே சங்கரன்கோவிலில் திமுக போட்டி?

 
 
 
சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் மதிமுகவை தோற்கடிக்கத் தான் திமுக போட்டியிடுவதாக ஒரு பேச்சு எழுந்துள்ளது. இந்தத் தேர்தலின் மூலம் மதிமுகவுக்கு மறுமலர்ச்சி ஏற்பட்டு விடக் கூடாது என்று திமுக யோசிப்பதாகவும் கூறப்படுகிறது.
 
கடந்த சட்டசபை தேர்தலில் போட்டியிடாமல் ஒதுங்கியிருந்த மதிமுக சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளது. இந்த தேர்தல் மூலம் மதிமுக அரசியல் மறுவாழ்வு பெற்றுவிடக் கூடாது என்று திமுக தலைமை குறியாக இருப்பதாகக் கூறப்படுகின்றது.
 
சங்கரன்கோவிலில் வரும் மார்ச் மாதம் 18ம் தேதி இடைத்தேர்தல் நடக்கவிருக்கின்றது. தேர்தல் தேதி அறிவிக்கும் முன்பே அதிமுக வேட்பாளரை அறிவித்தது. ஆளுங்கட்சி வேட்பாளரான முத்துச் செல்வியும் தனது பிரச்சாரத்தை துவங்கிவிட்டார். எப்படியும் இந்த தேர்தலில் வெற்றி பெற்றேத் தீர வேண்டும் என்ற முனைப்பில் அதிமுக இலவசங்களை வாரி வழங்கிக் கொண்டிருக்கிறது.
 
திருச்சி மேற்கு இடைத்தேர்தலில் போட்டியிட்டு அதிமுகவிடம் தோற்றபோதும் திமுக இந்த இடைத்தேர்தலிலும் போட்டியிடுகிறது. கடந்த சட்டசபை தேர்தலில் போட்டியிடாமல் ஒதுங்கியிருந்த மதிமுக உள்ளாட்சித் தேர்தலில் கணிசமான இடங்களில் வெற்றி பெற்றது. இந்த வெற்றி தந்த ஊக்கத்தை வைத்து தற்போது சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளது.
 
மதிமுக பொதுச் செயளாளர் வைகோவின் சொந்த ஊரான கலிங்கப்பட்டி சங்கரன்கோவில் தொகுதியில் தான் உள்ளது. எனவே இந்த தொகுதியில் மதிமுகவுக்கு வாக்கு வங்கி உள்ளது.
 
கடந்த 1996ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் மதிமுக மார்க்சிஸ்ட், ஜனதா தளம் ஆகிய கட்சிகளுடன் கூட்டணி வைத்து போட்டியிட்டு 30,000 வாக்குகளைப் பெற்றது. அடுத்து நடந்த 2001ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு 21,000 வாக்குகள் பெற்றது.
 
தற்போது சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் வெற்றி பெறாவிட்டாலும் இரண்டாவது இடத்தையாவது பிடிக்க வேண்டும் என்ற முனைப்பில் செயல்பட்டு வருகின்றது. அப்படி நடந்தால் தான் வரும் 2014ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் பெரிய கட்சிகளுடன் கூட்டணி வைக்கலாம் என்று அக்கட்சி நினைக்கிறது. ஆனால் அந்த இரண்டாவது இடத்தையும் மதிமுக பெறக்கூடாது என்று திமுக நினைக்கிறது.
 
சங்கரன்கோவிலில் போட்டியிடாவிட்டால் மதிமுக எளிதில் இரண்டாவது இடத்தைப் பெற்றுவிடும் என்பதாலேயே திமுக அங்கு போட்டியிடுகிறது. மதிமுக இரண்டாவது இடத்தை பெற்றுவிட்டால் அதுக்கு அரசியல் வாழ்வு கிடைத்து அடுத்த 7-8 ஆண்டுகளுக்கு நிலைப்பெற்றுவிடும். அதனை திமுக விரும்பவில்லை. திமுகவின் அடுத்த தலைவராக ஸ்டாலினை ஏற்க மனமில்லாமல் தான் வைகோ அந்த கூட்டணியில் இருந்து வெளியேறினார். அந்த மனக்கசப்பு மாறியதாகத் தெரியவில்லை.
 
திருச்சி மேற்கு தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெறாவிட்டாலும் இரண்டாவது இடத்தைப் பிடித்து தான் தான் பிரதான எதிர்கட்சி என்பதை திமுக நிரூபித்தது. அதே போன்று சங்கரன்கோவிலிலும் இரண்டாவது இடத்தைப் பிடித்து மதிமுகவை ஓரங்கட்ட வேண்டும் என்று திமுக தலைமை உறுதியாக இருப்பதால் தான் தேர்தல் களத்தில் குதித்திருப்பதாகக் கூறப்படுகின்றது.