Followers

Thursday 29 March 2012

'சசிகலா ரிட்டர்ன்ஸ்'... பயங்கர பீதியில் 'உண்மையான' அதிமுகவினர்!

 
 
எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது, எது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கிறது, எது நடக்கப் போகிறதோ அதுவும் நன்றாகவே நடக்கும் என்று சசிகலா நீக்கப்பட்டபோது சித்தாந்தமாக பேசி சிலாகித்துப் போன அதிமுகவினர் இப்போது எது நடக்கக் கூடாதோ அது நடந்து விட்டதே என்று திகிலடித்துப் போய் நிற்கின்றனராம்.
 
காரணம், சசிகலாவின் மறு வருகை.. இவர்கள் இப்படித்தான் பேசுவார்கள், பின்னர் சேர்ந்து கொள்வார்கள், இது என்ன புதுசா என்றுதான் 4 மாதத்திற்கு முன்பு சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினரை கூண்டோடு அதிமுகவை விட்டும் போயஸ் கார்டன் வீட்டை விட்டும் ஜெயலலிதா தூக்கியபோது அனைவருமே நினைத்தார்கள். இருந்தாலும் ஜெயலலிதாவின் செயல்பாட்டு வேகத்தைப் பார்த்த அதிமுகவினரும், பொதுமக்களும், பரவாயில்லையே உண்மையிலேயே சசிகலாவை துரத்தி விட்டு விட்டாரே என்றுதான் நினைத்தனர்.
 
விரட்டிய வேகத்தில், சசிகலா குடும்பத்தினர் மீது சரமாரியாக வழக்குகள் பாயத் தொடங்கின. இதுவரை நடராஜன், திவாகரன், ராவணன் என மூன்று பேர் சிறைக் கம்பிகளுக்குள் சிறைப்பட்டுள்ளனர். அடுத்து மகாதேவன், தொடர்ந்து சசிகலா என பெயர் அடிபட்ட நேரத்தில்தான். அக்கா.. என்னை மன்னிச்சுடுக்கா என்று அறிக்கை வந்துள்ளது சசிகலாவிடம்...
 
சசிகலாவின் அறிக்கை தமிழகம் முழுவதும் அதிமுக மற்றும் அதிமுக சார்ந்த, அதிகார மட்ட, காவல்துறை அளவில் பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதற்குக் காரணம், இனி மீண்டும் சசிகலா அதிகாரவட்டம் தலை தூக்கும், நாமெல்லாம் மறுபடியும் கைகளை மாற்றிக் கட்ட வேண்டும் என்ற பதட்டமே.
 
சசிகலா நீக்கப்பட்டதால் அவர்களுக்கு ஆதரவான கட்சிக்காரர்களை மேலிடத்திற்குப் போட்டுக் கொடுத்த அதிமுகவினர் தற்போது அதிர்ச்சி அடைந்து போய் நிற்கின்றனராம். தாங்கள் சசிகலாவால் பழிவாங்கப்படலாம் என்ற பயம்தானாம் அது.
 
அதேபோல சசிகலா தரப்பினர் மீது நடவடிக்கை எடுத்து வரும் போலீஸாரும் கூட பெரும் குழப்பத்தில் ஆழ்ந்து போயுள்ளதாக தெரிகிறது. அதிகாரிகள் மட்டத்திலும், இனி என்ன செய்வது, எப்படி நடந்து கொள்வது, சசிகலா தலையீடு மறுபடியும் இருக்குமா என்ற குழப்பத்தில் உள்ளனராம்.
 
மீண்டும் சசிகலா அதிகாரவட்டம் தலை தூக்காது என்பதற்கு என்ன உத்தரவாதம், சசிகலாவின் பெயரைச் சொல்லி பலரும் ஆட்டம் போட ஆரம்பிப்பார்களே, அதை முதல்வர் ஜெயலலிதா எப்படித் தடுக்கப் போகிறார் என்ற கேள்விகள் அதிமுகவினர் மத்தியில் இல்லாமல் அரசு அதிகாரிகள் மத்தியிலும் நிலவுகிறது.
 
சசிகலாவின் மறு வருகையால், உண்மையான அதிமுகவினர்தான் பெரும் கலக்கத்தில் மூழ்கியுள்ளனர். கட்சி உருப்படும் என்ற நிலையை ஏற்படுத்தி விட்டு தற்போது மறுபடியும் கலங்கலாக்கி விட்டனரே என்ற வேதனையிலும், விரக்தியிலும் அவர்கள் இருப்பதாக தெரிகிறது. மேலும் சசிகலா நீக்கப்பட்டபோது அதற்கு கட்சியினர் மத்தியில் மட்டுமல்லாமல் அரசு ஊழியர்கள், பொதுமக்கள், காவல்துறையினர் என பல தரப்பிலும் பெரும் வரவேற்பு காணப்பட்டது. காரணம், சசிகலா குடும்பத்தினர் தமிழகத்தை சூறையாடி போட்ட ஆட்டம்தான். கருணாநிதி குடும்பத்தினரை மிஞ்சி விட்டனரே என்றுதான் அத்தனை பேரும் சசிகலா குடும்பத்தி்னர் மீது ஆத்திரத்தில் இருந்தனர்.
 
சசிகலா நீக்கத்தை வைத்து அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட பல முக்கியப் புள்ளிகளும் மீண்டும் கட்சிக்குத் திரும்ப யோசித்து வருவதாகக் கூட செய்திகள் வெளியாகின. ஆனால் தற்போது அத்தனையும் தவிடுபொடியாகியுள்ளது. ஜெயலலிதா, சசிகலா சண்டை என்பது பொம்மை விளையாட்டு போல என்றாகி விட்டது. எனவே அதிமுகவின் தலைவிதியை மாற்ற முடியாது என்ற எண்ணத்தில் இந்த உண்மையான அதிமுகவினர் உள்ளனராம்.
 
சசிகலாவின் மறு வருகை அதிமுகவில் என்ன பாதிப்பை ஏற்படுத்தும் என்பதைப் போகப் போகத்தான் தெரிந்து கொள்ள முடியும்.



சட்டசபையில் எதிரொலித்த சங்கரன்கோவில்: தேமுதிக வெளிநடப்பு

 
 
தேமுதிக தலைவர் விஜய்காந்தை மறைமுகமாக அதிமுக எம்எல்ஏ கு.ப.கிருஷ்ணன் தாக்கியப் பேசியதையடுத்து அதற்கு பதிலளித்த தேமுதிகவினருக்கு அனுமதி தரப்படாததால் அவர்கள் சட்டமன்றத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
 
சட்டசபையில் இன்று அதிமுக எம்எல்ஏ கு.ப.கிருஷ்ணன் பேசுகையில், சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் தனியாக நின்று சந்திக்கத் தயாரா? திராணி இருந்தால் தேர்தலில் சந்திப்போம் என்று சவால் விட்டதும், அதன்பிறகு தேர்தலில் அவருக்கு டெபாசிட் பறிபோனதும் எல்லோருக்கும் தெரியும். தற்போது கட்சியை தொடர்ந்து நடத்தலாமா அல்லது கலைக்கலாமா என்று ஆலோசனை நடப்பதாக தெரிகிறது என்றார்.
 
இதற்கு தேமுதிக எம்எல்ஏக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து எழுந்தனர். அப்போது முதல்வர் ஜெயலலிதா குறுக்கிட்டு உறுப்பினர் கு.ப.கிருஷ்ணன் யாரையும் குறிப்பிட்டுச் சொல்லவில்லை. நீங்கள் ஏன் எதிர்ப்பு தெரிவிக்கிறீர்கள்?. நீங்கள் ஏன் எகப்பன் குதிருக்குள் இல்லை என்பதுபோல் ஏன் நடந்து கொள்கிறீர்கள் என்றார்.
 
அப்போது பேசிய தேமுதிக மூத்த உறுப்பினரான பண்ருட்டி ராமச்சந்திரன், கு.ப.கிருஷ்ணன் பேசியதை ஒப்பிட்டு பார்த்தால் எங்களைத்தான் சொல்வதாக உள்ளது அவரது பேச்சை முழுமையாக வாங்கி ஒப்பிட்டு பாருங்கள். இதேபோல் பேசினால் சட்டமன்ற நடைமுறை வேறு திசை நோக்கி சென்று விடும் என்றார்.
 
அப்போது சபாநாயகர் ஜெயக்குமார் குறுக்கிட்டு, யார் பெயரையும் குறிப்பிட்டு சொல்லவில்லை என்று முதல்வர் கூறியிருக்கிறார். அதன் பிறகும் நீங்கள் விளக்கம் சொன்னால் எப்படி? என்றார்.
 
இதற்கு பதிலளித்த பண்ருட்டி ராமச்சந்திரன், அவையில் இல்லாத எங்கள் கட்சித் தலைவரை தாக்கி பேசுவது எங்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலையை ஏற்படுத்துவதுபோல் உள்ளது. எனவே அவையில் இருந்து வெளிநடப்பு செய்கிறோம் என்று கூறிவிட்டு தனது கட்சி எம்எல்ஏக்களுடன் வெளிநடப்பு செய்தார்.
 
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பண்ருட்டி ராமச்சந்திரன், திராணி இருக்கிறதா என்று முதலமைச்சர் கேட்டது தேமுதிகவைத்தான். ஆகவே அதற்குப் பிறகு கட்சியை நடத்துவதா வேண்டாமா என்று அவர் யோசனை செய்துகொண்டிருக்கிறார் என்கிற தகவல் வந்திருக்கிறது என்று சொல்லுவது தேமுதிகவைத்தான் குறிக்கும். ஆகவே இரண்டையும் சேர்ந்து பார்த்து இவற்றை அவை குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டோம். அதற்கு பேரவைத் தலைவர் ஒப்புக்கொள்ளவில்லை. ஆகவே வெளிநடப்பு செய்தோம் என்றார்.
 
அதிமுக.. தேமுதிக..அதிமுக.. கு.ப.கி.யின் பயணம்:
 
முன்பு அதிமுக அமைச்சராக இருந்தவர் கு.ப.கிருஷ்ணன். பின்னர் அதிலிருந்து விலகி தமிழர் பூமி என்ற கட்சியை தொடங்கினார். அந்த கட்சியை கலைத்து விட்டு தே.மு.தி.கவில் இணைந்தார். அங்கு அவருக்கு மாநில துணை பொது செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டது.
 
இந்நிலையில் கு.ப. கிருஷ்ணன் தேமுதிகவில் இருந்து விலகி மீண்டும் அதிமுகவில் இணைந்து கடந்த தேர்தலில் போட்டியிட்டு வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.



Monday 26 March 2012

கேப்டனாம்... என்ன கேப்டன்? : விஜயகாந்தை விளாசிய அன்புமணி

 
 
 
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் தம்மை கேப்டன் என்று அழைத்துக் கொள்கிறார்... அவர் எந்த விளையாட்டுக்கு கேப்டனாக இருந்தார்? அல்லது ராணுவத்துக்கு கேப்டனாக இருந்தாரா? என முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
 
சேலத்தில் நடைபெற்ற பா.ம.க. மாணவர் சங்க மாவட்ட மாநாட்டில் அன்புமணி பேசியதாவது:
 
தொலைநோக்கு பார்வையோடு திட்டங்களைத் தீட்டி, அதை செயல்படுத்தும் வல்லமை படைத்த ஒரே கட்சி பா.ம.க. மட்டுமே. தமிழகத்தில் ஆட்சி செய்யும் கட்சிகள், ஆட்சி செய்து முடித்து விட்ட பிறகு மீண்டும் அடுத்த தேர்தலுக்கு முக்கியத்துவம் அளிக்கும். ஆனால், பா.ம.க. -வுக்கு, அடுத்த தேர்தல் முக்கியம் இல்லை. அடுத்த தலைமுறை எப்படி இருக்க வேண்டும் என்பது தான் முக்கியம் .
 
விஷன் 2023/
 
தமிழகத்தை, 45 ஆண்டுகளாக ஆட்சி செய்த திராவிடக் கட்சிகள் செய்த சாதனைகள் என்ன? சமீபத்தில், முதல்வர் ஜெயலலிதா, 2023 தமிழகம் எப்படி இருக்க வேண்டும் என்ற ஆவணப்படத்தை வெளியிட்டுள்ளார். இதற்கு, 15 ஆயிரம் லட்சம் கோடி ரூபாய் நிதி திரட்ட வேண்டுமாம். தமிழகம் தற்போது, 1 லட்சத்து 19 கோடி ரூபாய் கடனில் மூழ்கியுள்ளது. தமிழகத்தில் வசிக்கும், 7.25 கோடி மக்களில் ஒருவரின் மீது, 17 ஆயிரம் ரூபாய் கடன் உள்ளது. இந்த நிலையில், தொலைநோக்கு திட்டத்துக்கான நிதியை எப்படி திரட்ட முடியும் ? தற்போது தமிழக அரசுக்கு வருமானம் என்பது டாஸ்மாக் மட்டுமே, இதை வைத்து கொண்டு இந்த நிதியை திரட்ட முடியுமா.
 
கேப்டனா?
 
தமிழகத்தில், மது, சினிமா போன்ற தேவையற்ற கலாசாரத்தை ஒழிக்க வேண்டும் என்ற திட்டத்தில் பாமக உறுதியாக உள்ளது. தி.மு.க. - அ.தி.மு.க. தே.மு.தி.க. போன்ற அனைத்து கட்சிகளும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் தான். சினிமா பார்ப்பது தவறு அல்ல. ஆனால், அதை கலாசாரமாகக் கருதி கடைபிடிக்கக் கூடாது. தமிழகத்தில் முதல்வர், எதிர்க்கட்சித் தலைவர் என, சினிமாக்காரர்கள் தான்அதிகம் உள்ளனர்.
 
கேப்டன் என்கின்றனர், அவர் என்ன புட்பால் கேப்டனா, அல்லது வாலிபால் கேப்டனா, அல்லது ராணுவக் கேப்டனா, நான் கூட இந்த விளையாட்டுக்கு எல்லாம் கேப்டனாக செயல்பட்டுள்ளேன்.
 
பாமக, ஆட்சிக்கு வந்தால், முதல் கையெழுத்தே, பூரண மதுவிலக்கை அமுதல் படுத்துவோம் என்பதுதான் என்றார் அவர்.