Followers

Thursday 24 November 2011

இன்றைய உண்ணாவிரதத்தில் அதிமுகவை விமர்சித்துப் பேசுவாரா விஜயகாந்த்?

 
 
 
அதிமுக அரசின் செயல்பாடுகள் குறித்து 6 மாதம் கழித்தே பேசுவேன் என்று கூறி வந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த், இன்று சென்னையில் தனது கட்சியினருடன் மேற்கொள்ள உண்ணாவிரதப் போராட்டத்தின்போது அதிமுக அரசை விமர்சித்துப் பேசுவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
 
முதல் முறையாக கூட்டணி அரசியலுக்குள் புகுந்து முதல் கூட்டணியாக அதிமுகவிடம் போய்ச் சேர்ந்தார். சட்டசபைத் தேர்தலுக்கு முன்பே இரு கட்சிகளுக்கும் இடையே பூசல் வெடித்தது. இருந்தாலும் அதை மறைத்துக் கொண்டு இரு கட்சிகளும் தேர்தலை சந்தித்து பெரும் வெற்றி கண்டன. இதில் அதிமுகவை விட தேமுதிகவுக்கே நிறைய லாபம் கிடைத்தது.
 
இதனால் உள்ளாட்சித் தேர்தலிலும் கூட்டணியாக போட்டியிட ஆர்வமாக இரு்நதது தேமுதிக.ஆனால் ஜெயலலிதாவோ முகத்தில் அடி்ததாற் போல அத்தனை கூட்டணிக் கட்சிகளையும் (ஒன்றிரண்டு சிறிய கட்சிகளைத் தவிர்த்து) விரட்டி விட்டார்.
 
இதனால் அதிருப்தி அடைந்த தேமுதிக சிபிஎம்முடன் கூட்டணி வைத்து தேர்தல் சந்தித்து மிகப் பெரிய தோல்வியைச் சந்தித்தது. சட்டசபைத் தேர்தலில் 2வது இடத்துக்கு முன்னேறிய அக்கட்சி உள்ளாட்சித் தேர்தலில் 3வது இடத்துக்குத் தள்ளப்பட்டது.
 
இந்த நிலையில் இடையில் அதிமுகஅரசின் செயல்பாடுகள் குறித்து செய்தியாள்கள் விஜயகாந்த்திடம் கருத்துக் கேட்டபோதெல்லாம் 6 மாதமாகட்டும் சொல்கிறேன் என்று கூறி வந்தார். மே 16ம் தேதி ஜெயலலிதா முதல்வராகப் பதவியேற்றார். தற்போது சட்டசபைத் தேர்தல் முடிந்தும், ஜெயலலிதா ஆட்சி அமைந்தும் 6 மாதமாகி விட்டது.
 
எனவே இனிமேலாவது அதிமுக அரசு குறித்து விஜயகாந்த் பேசுவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அதற்கேற்ப தேமுதிக சார்பில் பால் விலை உயர்வு, பஸ் கட்டண உயர்வைக் கண்டித்து இன்று தமிழகம் முழுவதும் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறுகிறது.
 
காலை 8 மணிக்கு இந்தப் போராட்டம் சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகம் முன்பு தொடங்கியது. அதேபோல மாவட்டத் தலைநகரங்களிலும் போராட்டம் தொடங்கியுள்ளது.
 
இதுவரை பெரிய அளவில் எந்தப் போராட்டத்திலும் தேமுதிக ஈடுபட்டதில்லை. இப்போதுதான் முதல் முறையாக மிகப் பெரிய அளவில் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தை அது நடத்துகிறது. இன்று அதிமுக அரசின் செயல்பாடுகள் குறித்தும், முதல்வர் ஜெயலலிதாவின் செயல்பாடுகள் குறித்தும் விஜயகாந்த் சூடாகப் பேசக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



Wednesday 23 November 2011

அமைச்சர் பரஞ்சோதி மீது 2வது மனைவி வழக்கு

 
 
 
அதிமுக அமைச்சர் பரஞ்சோதி மீது அவரது இரண்டாவது மனைவியான டாக்டர் ராணி புகார் கொடுத்துள்ளார். அவரது புகாரின்பேரில் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்துமாறு திருச்சி ஜே.எம்.4 நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 
திருச்சி அரசு மருத்துவமனையின் எஸ்ட்ஸ் நோய் சிகிச்சை பிரிவில் சிறப்பு மருத்துவராக இருக்கும் ராணி என்பவர் அதிமுக அமைச்சர் பரஞ்சோதி மீது முதல்வர் தனிப்பிரிவு மற்றும் திருச்சி போலீஸ் கமிஷனர் மாசானமுத்து ஆகியோரிடம் புகார் கொடுத்தார். பரஞ்சோதி அண்மையில் நடந்த திருச்சி இடைத்தேர்தலில் வெற்றி பெற்று அமைச்சரானவர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
அந்த புகார் மனுவில் ராணி கூறியிருப்பதாவது,
 
பரஞ்சோதியும் நானும் ஒரே கிராமத்தைச் சேர்ந்தவர்கள். சிறுவயது முதலே என் குடும்பத்திற்கு பழக்கமானவர் பரஞ்சோதி. என் கணவருடன் பிரிந்து விவகாரத்து வாங்கி, ஆழ்ந்த வருத்தத்தில் நான் இருந்தபோது, ஆறுதல் சொல்ல வந்தவர் பரஞ்சோதி. அப்படி ஆறுதல் சொன்னவர் என்னுடன் நெருங்கி பழகி, என்னை திருமணம் செய்து கொண்டார்.
 
என்னை இரண்டாவது திருமணம் செய்த பின்னர் அவர் கேட்கும்போதெல்லாம் பணம் மற்றும் நகைகளை கொடுத்தேன். இந்நிலையில் அவருக்கு திருச்சி இடைத்தேர்தலில் போட்டியிட அதிமுக வாய்ப்பு தந்தது. அப்போது என்னிடம் நான் ஜெயித்து அமைச்சர் ஆகிவிடுவேன். இரண்டாது மனைவி போன்ற விஷயங்கள் தலைமைக்கு பிடிக்காது, ஆகையால் நீ விலகிவிடு என்று கூறினார். மேலும் சிலரை வைத்து என்னை மிரட்டினார் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.
 
இந்த விவகாரத்தை திமுக தேர்தல் பிரசாரத்தின்போது பெரிதுபடுத்தியது. இருப்பினும் காவல்துறையும், முதல்வரும் கண்டுகொள்ளவில்லை. இதையடுத்து ராணி மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் மனு தாக்கல் செய்தார். ஆனால் நீதிமன்றம் இது குறித்து காவல் துறையிடம் புகார் அளித்து நடவடிக்கை எடுக்கச் சொல்லுமாறு கூறி மனுவை தள்ளுபடி செய்தது.
 
அதற்குப் பிறகும் காவல்துறை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இறுதியில் ராணி வழக்கறிஞர் இமயவள்ளி என்பவர் உதவியோடு திருச்சி ஜே.எம் 4 நீதிமன்ற மாஜிஸ்திரேட் புஷ்பராணியிடம் மனு கொடுத்தார். அந்த மனுவை விசாரித்த மாஜிஸ்திரேட் இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்துமாறு உறையூர் காவல் நிலையத்திற்கு உத்தரவிட்டுள்ளார்.



டாம் 999 சீமான் கண்டன அறிக்கை

 

முல்லைப் பெரியாறு அணை பலவீனமாக உள்ளதென கேரள அரசும், அம்மாநில அரசியல்வாதிகளும் தொடர்ந்து பேசிப் பேசி இரு மாநில மக்களுக்கும் இடையே ஒரு பகை உணர்வை ஏற்படுத்திவரும் நிலையில், இப்போது டாம் 999 என்ற பெயரில் ஒரு திரைப்படமாகவும் எடுத்து வெளியிட்டிருப்பது தமிழர், மலையாளிகள் இடையே மோதலை உண்டாக்க வேண்டும் என்கிற சூழ்ச்சியாகவே தெரிகிறது.



முல்லைப் பெரியாறு அணை உறுதியாக உள்ளது என்பதை உச்ச நீதிமன்றம் அளித்த உத்தரவின் அடிப்படையில் நியமிக்கப்பட்ட மத்திய நீர்வள அமைச்சகத்தின் நிபுணர் குழு ஆராய்ந்து அறிக்கை அளித்தது. அதன் அடிப்படையில்தான் முல்லைப் பெரியாறு அணையில் நீர் தேக்கும் அளவை 136 அடியில் இருந்து 142 அடியாக முதல் கட்டமாக உயர்த்தலாம் என்றும், அதன் பிறகு கொஞ்சம், கொஞ்சமாக உயர்த்தி முழு நீர்தேக்க அளவான 152 அடிக்கு உயர்த்திக் கொள்ளலாம் என்றும் 2005ஆம் ஆண்டிலேயே இந்திய உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.



ஆனால் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை நிறைவேற்ற மறுத்து சண்டித்தனம் செய்துவரும் கேரள அரசு, தனது நீர்ப்பாசன சட்டத்தில் திருத்தம் செய்து, நீதிமன்றத் தீர்ப்பையே அவமதித்தது. இந்த நடவடிக்கையை எதிர்த்து தமிழக அரசு தாக்கல் செய்த மேல் முறையீட்டை விசாரித்த உச்ச நீதிமன்ற அமர்வு, அணையின் பலத்தை முழுமையாக சோதித்து அறிக்கை அளிக்குமாறு மீண்டும் உத்தரவிட்டதையடுத்தே நீதிபதி ஆனந்த் தலைமையில் மூன்று நீதிபதிகள் கொண்ட நிபுணர் குழு முல்லைப் பெரியாறு அணையை சமீபத்தில் சோதனையிட்டது. அப்போது அணை பலவீனமாக உள்ளது என்பதற்கு பொறியியல் ரீதியாக ஒரு ஆதாரத்தையும் கேரள அரசால் அளிக்க முடியவில்லை. தொழில்நுட்ப ரீதியாகவும், பொறியியல் ரீதியாகவும் நிரூபிக்க வக்கற்ற கேரள அரசு, உச்ச நீதிமன்றத்தில் நடந்த விசாரணையில் அணையல்ல பிரச்சனை, அதில் தேக்கப்படும் நீர்தான் பிரச்சனை என்று கூறி வழக்கின் அடிப்படையில் இருந்தே மாறுபட்டுப் பேசியது. இதுதான் கேரள அரசின் சட்டப்பூர்வ நிலை.





எனவே, முல்லைப் பெரியாறு அணை பலவீனமாக உள்ளது என்பதை நீதிமன்றத்தில் நிரூபிக்க முடியாது என்பதை நன்றாக உணர்ந்துவிட்ட கேரள அரசு, இப்படி குறுக்கு வழியை கையாண்டு திரைப்படம் எடுத்து பெரியாறு அணையை உடைக்கும் தனது சதித்திட்டத்தை நிறைவேற்ற முயற்சிக்கிறது. அச்சுதானந்தம் முதல்வராக இருந்தபோது, இதேபோல் ஒரு சிடி-ஐ வெளியிட்டு, அதை கேரள மாநிலத்தில் உள்ள திரையரங்குகளில் எல்லாம் காட்டி, அம்மாநில மக்களிடையே வெறுப்புணர்வை ஏற்படுத்தியது. இப்போது ஐக்கிய அரசு அமீரகத்துடன் இணைந்து, இந்திய கடற்படையில் பணியாற்றி ஒரு மலையாளியைக் கொண்டு திரைப்படமாகவே எடுத்து வெளியிட்டிருக்கிறது. தொழில்நுட்ப ரீதியாகவும், பொறியியல் ரீதியிலும் நிரூபிக்க முடியாத அரசு, சினிமா எடுத்து நிரூபிக்கப் பார்ப்பது கோமாளித்தனமானது.



கேரள அரசும், அம்மாநில அரசியல்வாதிகளும் ஒன்றை உணர்ந்திடல் வேண்டும். தமிழர்களுக்கு முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சனை அல்ல, அது தமிழினத்தின் உரிமைப் பிரச்சனை. தமிழ்நாட்டிற்காக, தமிழனின் வாழ்விற்காக, தமிழர்களின் வாழ்வு செழிக்க வேண்டும் என்று நினைத்த ஆங்கிலேயர் பென்னி குயிக் எனும் மாமனிதனால் கட்டப்பட்டது. அதனை அகற்ற ஒருபோதும் தமிழன் ஒப்புக்கொள்ளப் போவதில்லை. அண்டை மாநிலத்துடன் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் தமிழருக்குச் சொந்தமான பாலக்காடு மாவட்டமும், தேவி குளம், பீர்மேடு ஆகிய ஒன்றியங்களும், கற்புக்கரசி கண்ணகி கோயில் மீதும் கேரளா சொந்தம் கொண்டாடி வருவதை தமிழன் அனுமதித்துக் கொண்டிருக்கிறான். தமிழனின் தாராள குணத்தை தோண்டிப் பார்க்க முற்பட்டால், அது எல்லைகளை மாற்றியமைக்கும் அளவிற்கு பிரச்சனை பெரிதாகும் ஆபத்து ஏற்படும் என்பதை அண்டை மாநில அரசும், அரசியல்வாதிகளும் புரிந்துகொள்ள வேண்டும் என்பதை அழுத்தத்துடன் நாம் தமிழர் கட்சி கூறிக்கொள்கிறது.



இந்தத் திரைப்படத்தை தமிழகத்தில் எந்தத் திரையரங்கில் திரையிட்டாலும் அதனை எதிர்த்து ஜனநாயக வழியில் நாம் தமிழர் கட்சி முற்றுகைப் போராட்டம் நடத்தும்.

சென்னை மாநகராட்சிக் கூட்டத்தில் ரகளை- திமுக கவுன்சிலர்கள் மீது பாட்டில் வீச்சு

 
 
 
மேயர் சைதை துரைசாமி தலைமையில் இன்று நடந்த சென்னை மாநகராட்சியின் முதல் மாமன்றக் கூட்டத்தில் பெரும் ரகளை மூண்டது.
 
சென்னை மாநகராட்சியின் முதல் மாமன்றக் கூட்டம் மேயர் சைதை துரைசாமி தலைமையில் இன்று கூடியது. காலை 10 மணிக்குக் கூடிய அக்கூட்டத்தில் அனைத்துக் கட்சி உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.
 
அப்போது திமுக கவுன்சிலர்கள் எழுந்து, மழை காரணமாக சேதமடைந்து விட்ட சாலைகளை மேம்படுத்த வேண்டும், குப்பைகளை சீரமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பிரச்சினைகளை எழுப்பினர். அதற்கு அதிமுக கவுன்சிலர்கள் ஆட்சேபனை தெரிவித்தனர்.
 
இதையடுத்து இரு தரப்பு கவுன்சிலர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதமும், கைகலப்பும் ஏற்பட்டது. அப்போது திமுக கவுன்சிலர்கள் மீது சில அதிமுக கவுன்சிலர்கள் தண்ணீர் பாட்டில்களை வீசினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
 
அதன் பின்னர் திமுக கவுன்சிலர்கள் அனைவரும் ஒட்டுமொத்தமாக கூட்டத்திலிருந்து வெளிநடப்புச் செய்து வெளியேறினர்.



Tuesday 22 November 2011

விலை உயர்வை கண்டித்து சென்னையில் 24-ம் தேதி விஜயகாந்த் ஆர்ப்பாட்டம்

 
 
பஸ் கட்டணம், பால் விலை உயர்வை கண்டித்து சென்னையில் வரும் 24-ம் தேதி விஜயகாந்த் தலைமையில் தேமுதிகவினர் ஆர்ப் பாட்டம் நடத்துகின்றனர். மதிமுக, முஸ்லிம் லீக், புரட்சி பாரதம் உள்ளிட்ட கட்சிகளும் போராட்டங்களை அறிவித்துள்ளன. மதிமுக, முஸ்லிம் லீக், புரட்சி பாரதம் உள்ளிட்ட கட்சிகளும் போராட்டம் அறிவிப்பு. தமிழகத்தில் வரலாறு காணாத அளவுக்கு பஸ் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. மாநகர பஸ்களில் அதிகபட்சமாக ரூ.7 வரை உயர்த்தப்பட்டுள்ளது. வெளியூர் செல்லும் விரைவு போக்குவரத்து கழக பஸ்களின் கட்டணம், தனியார் ஆம்னி பஸ் கட்டணம் அளவுக்கு உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல ஆவின் பால் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வால் ஏழை எளிய மற்றும் நடுத்தர மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். கட்டண உயர்வை கண்டித்து பல இடங்களிலும் மக்கள் மறியல், ஆர்ப்பாட்டம், அதிகாரிகள் முற்றுகை போன்ற போராட்டங்களை நடத்தி வருகின்றனர். பஸ்களில் பயணிகளுக்கும் கண்டக்டருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு வருகிறது.
 
மத்திய அரசு எந்த உதவியும் செய்யாததாலும், முடங்கும் நிலையில் உள்ள பொதுத்துறை நிறுவனங்களை காப்பாற்றவுமே கட்டண உயர்வு முடிவை எடுத்ததாக முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார். ஆனால், மத்திய அரசு தரப்பில் தேவையான உதவிகள் செய்து வருவதாக மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன், தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் உள்ளிட்டோர் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், பஸ் கட்டணம் மற்றும் பால் விலை உயர்வை கண்டித்து பல்வேறு கட்சிகளும் போராட்டத்தை அறிவித்துள்ளன. விலை உயர்வு குறித்து கருத்து தெரிவித்த திமுக தலைவர் கருணாநிதி, Ôவிரைவில் போராட்டம் நடத்துவது குறித்து அறிவிக்கப்படும்Õ என்று கூறியிருந்தார். சட்டசபை எதிர்க்கட்சி தலைவரும் தேமுதிக நிறுவன தலைவருமான விஜயகாந்த், பஸ் கட்டண உயர்வை கடுமையாக கண்டித்திருந்தார். வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதுபோல உள்ளதாகவும், பால் விலையை உயர்த்தியதுதான் வெண்மை புரட்சியா என்றும் அவர் தனது அறிக்கையில் கூறியிருந்தார். மதுரையில் நேற்று நடந்த ஒரு திருமண விழாவில் பேசிய விஜயகாந்த், 'கட்டண உயர்வை எதிர்த்து விரைவில் போராட்டம் நடத்துவோம்' என்று அறிவித்திருந்தார்.
 
அதன்படி, கட்சியின் முன்னணி தலைவர்கள், மாவட்ட செயலாளர்களுடன் விஜயகாந்த் ஆலோசனை நடத்தினார். மக்களை பாதிக்கும் கட்டண உயர்வை எதிர்த்து போராட்டம் நடத்துவது குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. இதையடுத்து வரும் 24-ம் தேதி சென்னை கலெக்டர் அலுவலகம் முன்பு விஜயகாந்த் தலைமையில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்துவது என்றும் அதே நாளில் மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது. மதிமுக சார்பில் வரும் 28-ம் தேதி பொதுச் செயலாளர் வைகோ தலைமையில் சென்னையிலும் மற்ற மாவட்ட தலைநகரங்களிலும் ஆர்ப்பாட்டம் நடக்கும் என அக்கட்சி அறிவித்துள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளும் பல இடங்களில் போராட்டங்களை நடத்தி வருகின்றன. கட்டண உயர்வை கண்டித்து புரட்சி பாரதம், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகள் வரும்- 23ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக அறிவித்துள்ளன. விலை உயர்வை திரும்ப பெற வேண்டும் என பொதுமக்களும் பல்வேறு கட்சித் தலைவர்களும் கோரிக்கை விடுத்துள்ள நிலையில், உயர்த்தப்பட்ட பஸ் கட்டணம், பால் விலையை குறைக்க முடியாது என்று முதல்வர் ஜெயலலிதா நேற்று திட்டவட்டமாக அறிவித்துவிட்டார். இதனால், எதிர்க்கட்சிகளும் பல்வேறு அமைப்புகளும் தொடர் போராட்டம் நடத்துவது குறித்து ஆலோசித்து வருகின்றன.



அத்வானியின் 'அம்னீஷியா'வை மறந்த அதிமுக

 
 
 
அத்வானிக்கு செலக்டிவ் அம்னீஷியா என்று அவரை முன்பு கடுமையாக விமர்சித்த முதல்வர் ஜெயலலிதா தற்போது அதை மறந்து விட்டதாக தெரிகிறது. நேற்று டெல்லி ராம்லீலா மைதானத்தில் நடந்த அத்வானி ரத யாத்திரை நிறைவு கூட்டத்தில் அதிமுக சார்பில் தம்பித்துரை எம்.பி கலந்து கொண்டு அத்வானியை வாழ்த்தினார். மேலும், ஊழல் நிறைந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியை தூக்கி எறிய வேண்டும் என்றும் அவர் குரல் கொடுத்தார்.
 
இது தம்பித்துரையின் குரலா அல்லது ஜெயலலிதாவின் குரலா என்று அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
 
சட்டசபைத் தேர்தலுக்கு முன்பு அவ்வப்போது காங்கிரஸுக்கு திமுக ஆதரவை வாபஸ் பெற்றால் நான் இருக்கிறேன் காப்பாற்ற என்று கூறி வந்தார் ஜெயலலிதா. இருப்பினும் காங்கிரஸ், அதிமுக கூட்டணிக்கு வரவில்லை. இந்த நிலையில், சட்டசபைத் தேர்தலுக்குப் பிறகு சோனியா காந்தியுடன் டீ பார்ட்டியில் ஜெயலலிதா பங்கேற்பார் என்ற தகவல் பரப்பப்பட்டது. ஆனால் அதை காங்கிரஸ் தரப்பு மறுத்து விட்டது.
 
அதன் பின்னர் காங்கிரஸ் மீது கடுப்பானார் ஜெயலலிதா. இந்த நிலையில், சமீ்பத்தில் பால் விலை, பஸ் கட்டணத்தை உயர்த்திய முதல்வர் ஜெயலலிதா, முந்தைய திமுக ஆட்சியின் அலங்கோலம் மற்றும் மத்திய அரசு கேட்ட நிதியைத் தராததே இதற்குக் காரணம் என்று கடுமையாக விமர்சித்தார்.
 
இப்படிப்பட்ட பின்னணியில் தற்போது பாஜகவுடன் நெருக்கம் காட்ட ஆரம்பித்துள்ளது அதிமுக. காங்கிரசுடனான எதிர்ப்பை வலுப்படுத்தும் வகையிலேயே பிரதான எதிர்கட்சியான பாரதீய ஜனதா கட்சியுடன் அதிமுக நெருங்கி வருவதாக அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
 
முதற்கட்டமாக ஊழலுக்கு எதிராக ஜனசேத்னா யாத்திரை மேற்கொண்ட பாஜக மூத்த தலைவர் அத்வானிக்கு அதிமுக பொதுச்செயலாளரும், தமிழ்நாடு முதலமைச்சருமான ஜெயலலிதாக சனிக்கிழமையன்று தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்ததாக கூறப்படுகிறது. அப்பொழுதே, டெல்லியில் நடைபெறும் நிறைவு நாள் விழாவில் தமது கட்சி சார்பில் யாராவது ஒருவர் பங்கேற்பர் என்றும் கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
மேலும் மதுரை அருகே அத்வானி ரத யாத்திரை சென்ற பாதையில் வைக்கப்பட்ட பைப் வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்ட விவகாரத்தில் மிகத் தீவிரமாக செயல்பட்டது தமிழக காவல்துறை. மேலும் குண்டைக் கண்டுபிடித்தவர்களுக்கு நேரில் அழைத்துப் பரிசளித்துக் கெளரவித்தார் ஜெயலலிதா. அத்வானியும் ஜெயலலிதாவைப் பாராட்டினார்.
 
இந்த நிலையில், அதிமுகவைச் சேர்ந்த எம்.பி தம்பித்துரை ஞாயிற்றுக்கிழமையன்று டெல்லி ராம்லீலா மைதானத்தில் நடைபெற்ற நிறைவு விழாவில் பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:
 
2ஜி ஏற்படுத்திய புரட்சி
 
மத்திய அரசில் மலிந்து கிடக்கும் ஊழல் குறித்து, மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த அத்வானி நாடு முழுவதும் யாத்திரை மேற்கொண்டார்.
 
அத்வானியின் யாத்திரைக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா வாழ்த்துத் தெரிவித்துள்ளார். ஜக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன. கடந்த குளிர்காலக் கூட்டத்தொடரில் அ.தி.மு.க. எழுப்பிய 2 ஜி அலைக்கற்றை முறைகேட்டுப் பிரச்னைக்கு எதிர்க்கட்சிகளும் ஆதரவு தெரிவித்தனர். மத்திய அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டது. இதன் விளைவாக தவறு செய்தவர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
 
2ஜி அலைக்கற்றை முறைகேட்டுப் பிரச்னையால் ஏற்பட்ட புரட்சியின் காரணமாக, தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சிக்கு மக்கள் ஆதரவு அளித்தனர்.
 
ஊழல் அரசை அகற்றுங்கள்
 
தமிழகத்துக்குத் தேவையான நிதியை வழங்க வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதா பிரதமர் மன்மோகன் சிங்கைச் சந்தித்து கோரிக்கை வைத்தார். ஆனால் இதுவரை மத்திய அரசு வழங்கவில்லை. ஊழலை ஊக்குவிக்கும் மாநிலங்களுக்கு மட்டும் தேவையான நிதியை மத்திய அரசு ஒதுக்கி வருகிறது. இதில் மத்திய அரசு பாரபட்சமாகச் செயல்பட்டு வருகிறது. இப்படிப்பட்ட ஊழல் மலிந்த மத்திய அரசை மக்கள் அகற்ற வேண்டும் என்று தம்பிதுரை கேட்டுக் கொண்டார்.
 
கூட்டணி ஏற்படுமா ?
 
பாஜக மாநாட்டில் அ.தி.மு.க. பங்கேற்றது தேசிய அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு அ.தி.மு.க. ஆதரவு தெரிவிக்காவிட்டாலும், எதிரிக்கு எதிரி நண்பன் என்பதைப்போல பாரதீய ஜனதா கட்சியுடன் அதிமுக உறவு பாராட்டி வருவதாக அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர். இந்த உறவு வரும் நாடாளுமன்ற தேர்தலிலும் தொடருமா? என்ற கேள்வி டெல்லி வட்டாரங்களில் இப்பொழுதே பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
 
அதிமுகவுக்கும், பாஜகவுக்கும் இடையிலான முந்தைய உறவு கசந்தபோது அத்வானியை கடுமையாக விமர்சித்திருந்தார் ஜெயலலிதா. அத்வானிக்கு செலக்டிவ் அம்னீஷியா இருக்கிறது என்றும் அவர் குற்றம் சாட்டியிருந்தார் என்பது நினைவிருக்கலாம். இந்த நிலையில் அதை மறந்து இரு தரப்பும் நெருங்கி வருவது அரசியல் வட்டாரத்தில் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.



Monday 21 November 2011

அதிமுக 10 திமுக 4 ஆனால் வெற்றி திமுகவுக்கு:அதிர்ச்சியில் அதிமுக!

 
 
 
சென்னை மாநகராட்சிக்கு நேற்று நடந்த மண்லடக் குழுத் தலைவர் பதவிக்கான தேர்தலில், மொத்தம் உள்ள 15 மண்டலங்களில், 14ஐ அதிமுக கைப்பற்றியது. ஆனால் அதிமுக கவுன்சிலர்கள் அணி மாறி திமுகவுக்கு வாக்களித்ததால், பெரும்பான்மை பலம் இருந்தும் ஒரு மண்டலத்தில் மட்டும் திமுக வெற்றி பெற்றது.
 
ஆளுங்கட்சியாக இருக்கின்ற நிலையிலும், சற்றும் பயப்படாமல், அணி மாறி வாக்களித்த அதுவும் திமுகவுக்கு வாக்களித்த அதிமுக கவுன்சிலர்களால் அந்த கட்சி கடும் அதிர்ச்சி அடைந்துள்ளது.
 
சென்னை மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களில் அம்பத்தூரும் ஒன்று. இது ஏழாவது மண்டலமாகும். இங்கு திமுகவுக்கு 4 கவுன்சிலர்களும், அதிமுகவுக்கு 10 கவுன்சிலர்களும் உள்ளனர். காங்கிரஸுக்கு ஒரு உறுப்பினர் உள்ளார்.
 
இந்த மண்டலத் தலைவர் பதவிக்கு திமுக சார்பில் ஜோசப் சாமுவேல் மனு செய்தார். அதிமுக சார்பில் அலெக்சாண்டர் நிறுத்தப்பட்டார். இதையடுத்து வாக்கெடுப்புக்கு உத்தரவிடப்பட்டது.
 
அப்போது 15 உறுப்பினர்களும் தங்களது வாக்குகளைப் பதிவு செய்தனர். பின்னர் வாக்குகளை எண்ணியபோது திமுக வேட்பாளருக்கு 8 வாக்குகளும், அதிமுக வேட்பாளருக்கு 7 வாக்குகளும் கிடைத்தன. இதனால் அதிமுக தரப்பு அதிர்ச்சி அடைந்தது. வெறும் 4 உறுப்பினர்களே உள்ள திமுகவுக்கு 8 வாக்குகள் கிடைத்ததால், 4 அதிமுக கவுன்சிலர்கள் அணிமாறி வாக்களித்தது உறுதியானது.
 
10 கவுன்சிலர்களை கையில் வைத்திருந்தும் பரிதாபமாக தோற்றதால் அதிமுகவினர் கடும் அதிர்ச்சியும், அதிருப்தியும் அடைந்தனர்.
 
இதுகுறித்து கருத்து தெரிவித்த சென்னை மாநகராட்சி எதிர்க்கட்சி்த் தலைவர் சுபாஷ் கூறுகையில், அதிமுக ஆட்சியின் அராஜக போக்கு அக்கட்சியினருக்கே பிடிக்கவில்லை என்பதையே இது காட்டுகிறது என்றார்.
 
பின்னர் வெற்றி பெற்ற ஜோசப் சாமுவேலை தூக்கி்க கொண்டு திமுகவினர் வெளியே வந்தபோது அவர்களுடன் மோதுவது போல அதிமுகவினர் திரண்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. போலீஸார் தலையிட்டு இரு தரப்பையும் கலைந்து போகச் செய்தனர்.
 
தற்போது அணி மாறி வாக்களித்த அதிமுக கவுன்சிலர்கள் குறித்து கட்சி மேலிடத்திற்கு புகார்கள் பறந்துள்ளன. விரைவில் அவர்கள் மீது நடவடிக்கை பாயும் என்று தெரிகிறது.



நான் அழைத்தால் கலைஞர் வரமாட்டேன் என்று சொல்ல மாட்டார்; கவிஞர் வாலி

 
 
 
நான் அழைத்தால் கருணாநிதி வரமாட்டேன் என்று சொல்ல மாட்டார்; எனக்கும் அவருக்கும் நாற்பத்தைந்து வருட கால நட்பு இருக்கிறது என்று கவிஞர் வாலி கூறியுள்ளார். வசந்த் டி.வியும், சாதக பறவைகள் சங்கரும் இணைந்து வாலி 1000 என்ற தலைப்பில் கவிஞர் வாலி பற்றிய இனிமையான நிகழ்ச்சியை வழங்கவிருக்கிறார்கள். இந்த நிகழ்ச்சி பாடலை பெற்ற ஸ்தலம், கோலிவுட் - வாலிவுட், நினைவோ ஒரு பறவை, உன்னால் முடியும் தோழா, காஃபி வித் கவிஞர் என்ற ஐந்து பிரிவாக ஒளிபரப்பாகவிருக்கிறது. ஏ.வி.எம் சரவணன், எஸ்பி.முத்துராமன், இயக்குனர் மகேந்திரன், எம்.எஸ்.விஸ்வநாதன், இசையமைப்பாளர் தேவா, எஸ்.ஜே.சூர்யா, டைரக்டர் கதிர், எல்.ஆர்.ஈஸ்வரி, குஷ்பு உள்ளிட்ட ஏராளமான பிரமுகர்களை சந்திக்க வைத்து கலந்துரையாடல் நிகழ்ச்சியை எடுத்து முடித்துவிட்டார்களாம்.
 
இது பற்றி கவிஞர் வாலி அளித்துள்ள பேட்டியில், இந்த நிகழ்ச்சிக்கு யாரையும் நான் அழைக்கவில்லை. நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள்தான் அழைத்திருக்கிறார்கள். நான் அழைத்தால் கருணாநிதி கூட வருவார், வர மாட்டேன் என்று சொல்ல மாட்டார். எனக்கும் அவருக்கும் நாற்பத்தைந்து கால நட்பு இருக்கிறது. என்றார்.
 
ஆட்சி மாறியதும் ரங்கநாயகி என்றெல்லாம் கவிதை எழுதுகிறீர்களே, அந்தகால புலவர்கள் மாதிரி அரசவையை உங்களால் இடித்துரைக்க முடியாதா? என்ற கேள்விக்கு பதில் அளித்திருக்கும் கவிஞர் வாலி, இலங்கை பிரச்சனையில் முதல்வர் ஜெயலலிதா சட்டமன்றத்தில் கொண்டு வந்த தீர்மானத்தை பாராட்டி அந்த கவிதையை எழுதினேன். ஆனால் நான்தான் கலைஞர் ஆட்சியில் இருந்தபோது பார்வதியம்மாளுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க தமிழ்நாட்டில் அனுமதி மறுத்ததை கண்டித்தும் கவிதை எழுதினேன். அந்த கவிதையை பாராட்டி நிறைய பேர் பேசினார்கள். வைகோ கூட அதை தன் சங்கொலி பத்திரிகையில் வெளியிடவா என்று அனுமதி கேட்டு வெளியிட்டார். சமீபத்தில் தீக்குளித்த செங்கொடி பற்றியும் கவிதை எழுதியிருக்கிறேன். நாட்டில் நடக்கிற அன்றாட பிரச்சனைகள் பற்றி எழுதிக் கொண்டிருந்தால் அதை தவிர வேறு வேலை எதுவும் செய்ய முடியாது, என்று கூறியிருக்கிறார்.



ஆளுங்கட்சி எங்களை ஓவராகத் தான் சீண்டிப் பார்க்கிறது, சீண்டுவதை நிறுத்திக்கொள்ளுங்கள்: விஜயகாந்த்

 
 
 
ஆளுங்கட்சி எங்களை ஓவராகத் தான் சீண்டிப் பார்க்கிறது. எங்களைச் சீண்டுவதை நிறுத்திக்கொள்ளுங்கள் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் ஆவேசமாகத் தெரிவித்தார்.
 
மதுரையில் நடந்த திருமண விழாவில் கலந்து கொண்டார் தேமுதிக தலைவர் விஜயகாந்த். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது,
 
ஆளுங்கட்சி எங்களை ஓவராகத் தான் சீண்டிப் பார்க்கிறது. எங்களைச் சீண்டிப் பார்க்காதீர்கள். பால், பஸ் கட்டணத்தை உயர்த்தியதற்கு மத்திய அரசு போதிய நிதி ஒதுக்கவில்லை என்று காரணம் கூறினார். ஆனால் மத்திய அரசு தமிழகத்திற்கு எவ்வளவு நிதி ஒதிக்கியுள்ளது என்பதை மத்திய அமைச்சர் ஜி. கே. வாசன் பட்டியலிட்டுருப்பதை பத்திரிக்கையில் படித்து தெரிந்து கொண்டேன். ஜி.கே. வாசன் கூறியுள்ளதை நானும் கூறினால் விஜயகாந்த் காங்கிரஸ் பக்கம் போகிறான் என்று கதை கட்டிவிடுவார்கள். இதைச் சொல்வதால் நான் காங்கிரஸை ஆதரிப்பவன் என்று அர்த்தம் இல்லை.
 
ஜி.கே. வாசன் தெரிவித்திருப்பது போல் மத்திய அரசு மாநிலத்திற்காக சிறப்பு நிதி ஒதுக்கும். அதை திறமையாகப் பயன்படுத்த வேண்டியது மாநில அரசின் கையில் உள்ளது.
 
மாற்றம் வேண்டி அதிமுகவை ஆட்சிக்கு கொண்டு வந்த மக்களுக்கு அது வெறும் ஏமாற்றத்தைத் தான் அளித்துள்ளது. இதை மக்கள் சற்றும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.
 
குடும்ப ஆட்சி வேண்டாம் என்ற மக்கள் தற்போது கும்பலிடம் மாட்டிக் கொண்டுள்ளனர். விலையை ஏற்றுபவர்கள் அதை உள்ளாட்சித் தேர்தலுக்கு முன்பு செய்திருக்க வேண்டியது தானே. திமுக அரசு செய்த தவறுகளையே அதிமுக அரசும் செய்கிறது. அண்மையில் நடந்து முடிந்த அதிமுகவினர் எப்படி வெற்றி பெற்றார்கள் என்பது ஊருக்கே தெரியும்.
 
நான் சட்டசபை பக்கம் வரவில்லை என்கிறார்கள். எனக்கு உடல்நலம் பாதி்ககப்பட்டுள்ளதால் தான் செல்லவில்லை. சரி, ஜெயலலிதாவும், கருணாநிதியும் எதிர்கட்சித் தலைவர்களாக இருக்கையில் எத்தனை நாட்கள் சட்டசபைக்கு வந்தார்கள் என்பது அவர்கள் மனசாட்சிக்குத் தெரியும்.
 
பால், பஸ் கட்டண உயர்வை எதிர்த்து உண்ணாவிரதப் போராட்டம் நடத்தவுள்ளோம். அதற்கு அரசு அனுமதி மறுக்கலாம். இவ்வளவு ஏன் மதுரையில் ஒரு பேனர் வைக்க காவல்துறை அனுமதி மறுக்கிறது. பேனர் எல்லாம் வைக்கக் கூடாது என்கிறார் கமிஷனர்.
 
கடந்த ஆட்சியில் எப்படி காவல்துறை பாராபட்சமாக இருந்ததோ தற்போதும் அப்படியேத் தான் உள்ளது. மாவட்ட ஆட்சியர்கள் பொதுவானவர்களாக இருக்க வேண்டும். ஆனால் இவர்களோ கலெக்டர்கள் மாநாடு நடத்தி கலெக்டர்களுக்கு பரிசு கொடுத்து பாராபட்சத்தை தூண்டி விடுகிறார்கள். மதுரையில் அனைவருக்கும் வேண்டாதவர் என்று பெயரெடுத்த கலெக்டர் சகாயம் தற்போது ஆளுங்கட்சிக்கு சகாயம் செய்து சகாயமாகிவிட்டார்.
 
கமிஷனர் கண்ணப்பனும் மாறிவிட்டார். பேனர் வைப்பதை தடுப்பதால் எல்லாம் கட்சியின் வளர்ச்சியைத் தடுக்க முடியாது. எம்.ஜி.ஆர்., சிவாஜி புகழை யாராலும் அழிக்க முடியவில்லை. ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் ஆதவன் மறைவதில்லை என்ற பாட்டு தான் நினைவுக்கு வருகிறது. எங்களைச் சீண்டிப் பார்க்காதீர்கள் என்றார்.



மக்கள் நலப் பணியாளர்கள் பணி நீக்கம்: ஜெ அரசுக்கு உயர்நீதிமன்றம் குட்டு

 
 
 
ஜெயலலிதாவால் பணி நீக்கம் செய்யப்பட்ட மக்கள் நலப் பணியாளர்கள் 12600 பேரையும் நாளை காலைக்குள் மீண்டும் பணியில் சேர்க்க வேண்டும் என்று சென்னை உயர்நீதி மன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
 
கருணாநிதியின் ஆட்சிக் காலத்தில் அவரால் நியமிக்கப்பட்டவர்கள் மக்கள் நலப் பணியாளர்கள். மொத்தம் 13000 பேரை அவர் நியமித்திருந்தார்.
 
இவர்களில் சுமார் 12,600 ஆயிரம் பேர் பணியிலிருந்து வந்தனர். ஜெயலலிதா பதவி ஏற்றதும் இவர்களுக்கு சம்பளம் வழங்குவதை நிறுத்தினார். இரு வாரங்களுக்கு முன்பு மொத்த பணியாளர்களையும் நீக்கி உத்தரவிட்டார். இவர்கள் அனைவரும் திமுக சார்புடையவர்கள் என்று அவர் காரணம் கூறினார்.
 
அரசின் இந்த முடிவுக்கு எதிராகவும், மக்கள் நல பணியாளர்கள் நீக்கத்தை ரத்துச் செய்யக் கோரியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மக்கள் நல பணியாளர் சங்கம் வழக்கு தொடர்ந்தது.
 
இந்த வழக்கை கடந்த 11-ம் தேதி விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சுகுணா, மக்கள் நல பணியாளர்கள் நீக்கத்துக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார்.
 
பணி நீக்கம் செய்யப்பட்ட மக்கள் நலப் பணியாளர்கள் தங்கள் பணியில் தொடர அனுமதி அளித்தும் அவர் உத்தரவிட்டார்.
 
மேலும், அந்த விவகாரம் தொடர்பாக விரிவாக விளக்கம் அளிக்குமாறு தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.
 
இதைத் தொடர்ந்து, தமிழக அரசின் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்ட நிலையில், மக்கள் நலப் பணியாளர்களை மீண்டும் சேர்க்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.
 
இவர்கள் அனைவரையும் நாளை காலைக்குள் பணியில் சேர்த்துவிட வேண்டும் என்றும், இதுகுறித்த இறுதி அறிக்கையை நாளை மறுநாள் நீதிமன்றத்தில் தமிழக அரசு சமர்ப்பிக்க வேண்டும் என்றும் அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.