Followers

Saturday 29 October 2011

3 பேரையும் தூக்கில் போடுமாறு தமிழக அரசு கேட்டு கொண்டுள்ளது: ராமதாஸ்

 
 
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள 3 பேரின் தூக்கு தண்டனையை ரத்து செய்வதில் தமிழக அரசின் முடிவு ஏமாற்றம் அளிப்பதாக உள்ளதாக, பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
 
இதுகுறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
 
தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ள பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய 3 பேரும் அளித்த கருணை மனுக்கள் குடியரசு தலைவரால் தள்ளுபடி செய்யப்பட்டன. இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் 3 பேரும் வழக்கு தொடர்ந்தனர்.
 
3 பேரின் தூக்கு தண்டனையை ரத்து செய்வது குறித்த தமிழக அரசின் நிலைப்பாடு குறித்து உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. இதற்கு தமிழக அரசு தரப்பில் உள்துறை செயலாளர் ரமேஷ்ராம் மிஸ்ரா தாக்கல் செய்த பதில் மனுவில், 3 பேரின் தூக்கு தண்டனையும் ரத்து செய்வது குறித்த எல்லா கேள்விகளுக்கும், 'கருத்து கூற விரும்பவில்லை' என்றே பதிலளித்துள்ளது.
 
மேலும், தூக்கு தண்டனையை ரத்து செய்யக் கோரிய மூவரும் தாக்கல் செய்துள்ள மனுக்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என தமிழக அரசு கோரிக்கை வைத்துள்ளது. அதன்மூலம் 3 பேரையும் தூக்கில் போடுமாறு தமிழக அரசு கேட்டு கொண்டுள்ளது தெரிகிறது. தமிழக அரசின் இந்த முடிவு ஏமாற்றமும் வருத்தமும் அளிக்கிறது.
 
குடியரசு தலைவர் 3 பேரின் கருணை மனுக்களை தள்ளுபடி செய்த போது, அவர்களின் தூக்கு தண்டனையை ரத்து செய்யக் கோரி சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றுமாறு, நான் உட்பட பல அரசியல் தலைவர்கள் கேட்டு கொண்டோம். அதை ஏற்று சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றிய முதல்வர், தற்போது, உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் அதற்கு எதிராக செயல்பட்டிருக்கிறார்.
 
இதன்மூலம் மக்களின் எழுச்சியை அடக்கவே சட்டசபையில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது என தெளிவாக தெரிகிறது. மரணத்தின் விளிம்பில் சிக்கி தவிக்கும் 3 தமிழர்களை காப்பாற்ற முதல்வருக்கு அக்கறை இல்லாதது தெரியவந்துள்ளது. தமிழக மக்களின் உணர்வுகளுக்கு எதிராக செயல்படாமல், மூவரின் தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க வேண்டும் என்று தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றிய முதல்வர் அதில் உறுதியாக இருக்க வேண்டும்.
 
அப்படி 3 பேரின் உயிரையும் காப்பாற்றினால், தமிழக மக்கள் முதல்வரை வைத்து கொண்டாடுவர். இல்லாவிட்டால் தமிழக மக்கள் நலனில் அக்கறை இல்லாத முதல்வர் என்பது தெளிவாகிவிடும்.
 
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.



Friday 28 October 2011

ஜெயலலிதா முன்னிலையில் சைதை துரைசாமி பதவி ஏற்றார்

 
 
 
உள்ளாட்சி தேர்தலில் 10 மாநகராட்சிகளிலும் அ.தி.மு.க. மேயர்களே அமோக வெற்றி பெற்றுள்ளனர். சென்னையில் சைதை துரைசாமி 5 லட்சத்து 20 ஆயிரம் ஓட்டுக்கள் அதிகம் பெற்று மேயர் ஆகி இருக்கிறார். கோவை-செ.ம.வேலுசாமி, திருப்பூர்- விசாலாட்சி, மதுரை- ராஜன் செல்லப்பா, சேலம்-சவுண்டப்பன், ஈரோடு- மல்லிகா பரமசிவம், திருச்சி- எஸ்.எம்.ஆர்.ஜெயா, நெல்லை- விஜிலா சத்தியானந்த், வேலூர்- கார்த்தியாயிணி, தூத்துக்குடி-சசிகலாபுஷ்பா ஆகியோரும் அ.தி.மு.க. மேயர்களாக தேர்ந்து எடுக்கப்பட்டுள்ளனர்.
 
580 மாநகராட்சி கவுன்சிலர்கள், 89 நகராட்சி தலைவர்கள், 1,680 நகராட்சி கவுன்சிலர்கள், 285 பேரூராட்சி தலைவர்கள், 2,849 பேரூராட்சி உறுப்பினர்கள், 3,797 ஊராட்சி ஒன்றிய உறுப்பினர்கள், 574 மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினர்கள் அ.தி.மு.க. சார்பில் வெற்றி பெற்றுள்ளனர். பல்வேறு கட்சிகள் மற்றும் சுயேட்சைகள் உள்பட மொத்தம் 20 ஆயிரத்து 81 பேர் உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றனர்.
 
19 ஆயிரத்து 646 பேர் போட்டியின்றி தேர்ந்து எடுக்கப்பட்டார்கள். உள்ளாட்சி தேர்தலில் புதிதாக தேர்ந்து எடுக்கப்பட்ட மேயர்கள், நகரசபை தலைவர்கள், பேரூராட்சி தலைவர்கள், மாவட்ட பஞ்சாயத்து, ஊராட்சி ஒன்றியம் உள்ளிட்ட அனைத்து உள்ளாட்சி அமைப்புகளின் கவுன்சிலர்கள் ஆகியோர் இன்று பதவி ஏற்றனர். சென்னை மாநகராட்சி புதிய மேயர் பதவி ஏற்பு விழா, ரிப்பன் மாளிகை மன்ற கூடத்தில் இன்று காலை 11 மணி அளவில் நடந்தது.
 
விழாவுக்கு முதல்- அமைச்சர் ஜெயலலிதா முன்னிலை வகித்தார். புதிய மேயர் சைதை துரைசாமிக்கு சென்னை மாநகராட்சி கமிஷனர் கார்த்திகேயன் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இதையடுத்து சென்னை மாநகராட்சியின் 200 வார்டு உறுப்பினர்களும் பதவி ஏற்றனர்.
 
முன்னதாக மாநகராட்சிக்கு வந்த முதல்- அமைச்சர் ஜெயலலிதாவுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. கூடிநின்ற தொண்டர்கள் `புரட்சித் தலைவி வாழ்க' என்று கோஷமிட்டு ஆரவாரம் செய்தனர். ஜெயலலிதா வருகையையொட்டி வழிநெடுக கொடி, தோரணங்கள், பேனர்கள் வைக்கப்பட்டு இருந்தன. மேயர் பதவி ஏற்பு நிகழ்ச்சி மாநகராட்சி வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த 2 பிரமாண்ட திரைகளில் ஒளிபரப்பப்பட்டது. பிளாஸ்மா டி.வி.க்களும் வைக்கப்பட்டிருந்தன.
 
வளாகத்தில் கூடி நின்றவர்கள் அங்கிருந்தபடியே பதவி ஏற்பு நிகழ்ச்சியை கண்டு மகிழ்ந்தனர். துணை மேயர்கள், நகராட்சி, பேரூராட்சி துணை தலைவர்களை அந்தந்த அமைப்புகளின் கவுன்சிலர்கள் வருகிற 29-ந்தேதி தேர்ந்து எடுக்கிறார்கள். அன்றைய தினம் மாவட்ட பஞ்சாயத்து தலைவர்கள், ஊராட்சி ஒன்றிய தலைவர்களும் தேர்ந்து எடுக்கப்படுகிறார்கள்.



ஈரோடு மேயருக்கு செங்கோலால் வந்த சிக்கல்!

 
 
 
ஈரோடு மாவட்ட மேயருக்கு செங்கோலால் பிரச்சனை ஏற்பட்டுள்ளது.
 
நகராட்சியாக இருந்த ஈரோடு கடந்த 2008ம் ஆண்டு மாநகராட்சியாக்கப்பட்டது. எனவே நகரமன்ற தலைவராக இருந்த குமார் முருகேஷ் மேயராக்கப்பட்டார். இதையடுத்து பதவியேற்பு விழாவில் அவருக்கு அப்போதைய முதல்வர் கருணாநிதி கையால் செங்கோல் வழங்குவதாக இருந்தது.
 
இந்நிலையில் முருகேஷ் தனது சொந்த பணம் ரூ. 1.35 லட்சம் செலவு செய்து 3,400 கிலோ எடை கொண்ட வெள்ளி செங்கோல் செய்து வாங்கினார். அதை பதவியேற்பு விழாவில் கருணாநிதி கையால் வாங்கிக் கொண்டார். கடந்த வாரம் நடந்த மேயர் தேர்தலில் போட்டியிட்ட முருகேஷ் எப்படியும் தான் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கையில் செங்கோலை மாநகராட்சி அலுவலகத்திலேயே வைத்திருந்தார்.
 
ஆனால் எதிர்பாராவிதமாக மல்லிகா பரமசிவம் மேயராகிவிட்டார். இதையடுத்து முருகேஷ் தனது செங்கோலை திருப்பித் தருமாறு மாநகராட்சி ஆணையரிடம் கேட்டுள்ளார்.
 
இது குறித்து முருகேஷ் செய்தியாளர்களிடம் கூறியதாவது,
 
எனது சொந்த பணத்தில் வாங்கிய செங்கோலுக்கான தொகையை மாநகராட்சி நிதியில் இருந்து எடுத்துக் கொடுக்குமாறு அப்போதைய ஆணையாளர் செல்வராஜிடம் கேட்டேன். சரி என்று சொன்னவர் கடைசி வரை பணத்தை தரவேயில்லை. தற்போதுள்ள ஆணையாளர் செங்கோலை திருப்பிக் கேட்டால் பதில் பேசமாட்டேன் என்கிறார் என்றார்.
 
போகிற போக்கைப் பார்த்தால் மல்லிகாவும் ஒரு செங்கோல் வாங்க வேண்டியது வரும் போலும்.



பின்னணி இல்லாமல் எதுவும் நடக்காது : கருணாநிதி

 
 
 
தி.மு.க. தலைவர் கருணாநிதி டெல்லி சென்று அகில இந்திய காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி, பிரதமர் மன்மோகன்சிங் ஆகியோரை சந்தித்தார். பின்னர் திகார் சிறையில் இருக்கும் தனது மகள் கனிமொழியையும் அவர் சந்தித்து பேசினார். 4 நாட்கள் டெல்லியில் இருந்த கருணாநிதி நேற்று மதியம் 1 மணி அளவில் சென்னை திரும்பினார். பின்னர் மாலையில் நிருபர்களுக்கு கருணாநிதி பேட்டி அளித்தார். அதன் விவரம் வருமாறு:-
 
கேள்வி:- கனிமொழி எப்படி இருக்கிறார்?
 
பதில்:- உடல் இளைத்திருந்தாலும் உறுதியாக இருக்கிறார்.
 
கேள்வி:- கனிமொழி ஜாமீன் தள்ளிப் போவதற்கு அரசியல் பின்னணி இருப்பதாக கருதுகிறீர்களா?
 
பதில்:- பின்னணி இல்லாமல் எந்த காரியமும் நடைபெறுவதில்லை. அது அரசியல் பின்னணியா? அல்லவா? என்பது எனக்கு தெரியாது.
 
கேள்வி:- சோனியா காந்தியிடம் கனிமொழி ஜாமீன் பற்றி பேசினீர்களா?
 
பதில்:- கனிமொழி சிறையில் எப்படி இருக்கிறார்? சவுக்கியமாக இருக்கிறாரா என்று கேட்டார். அதைத் தவிர வேறு எந்த பேச்சுவார்த்தையும் அதைப்பற்றி கிடையாது.
 
கேள்வி:- சோனியா காந்தியிடம் வேறு என்ன பேசினீர்கள்?
 
பதில்:- அவருக்கு உடல் நலமில்லை என்ற செய்தியறிந்த போதே அவருக்கு கடிதம் எழுதினேன். பிறகு அமெரிக்காவில் சிகிச்சை மேற்கொண்ட போதும் விரைவில் குணமடைய விழைவு தெரிவித்து தந்தி அனுப்பி இருந்தேன். சென்ற முறை டெல்லி சென்றபோது அவர் ஓய்வில் இருக்க வேண்டியது அவசியம் என்பதை கேள்வியுற்று சென்று பார்ப்பதை தவிர்த்தேன். இப்போது உடல் நலம் பெற்றிருக்கிறார் என்பதையறிந்து நேரில் சென்று உடல் நலம் குறித்து விசாரித்தேன். வாழ்த்துக்களை சொன்னதோடு நல்ல ஓய்வு எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டேன்.
 
கேள்வி:- கனிமொழிக்கு ஜாமீன் வழங்காதது குறித்து தந்தை என்ற முறையில் எந்தவிதமான கவலையை அளிக்கிறது?
 
பதில்:- தந்தை என்பதை விட்டுவிடுங்கள். ஒரு மனிதன் என்ற முறையிலே கூட இதில் உள்ள நியாயம், அநியாயங்களை நான் பகுத்தறிந்து அதற்கான உணர்வுகளை பெற வேண்டியவனாக இருக்கிறேன். இந்த முறை ஜாமீன் மறுக்கப்பட்டதாக சொல்ல முடியாது. ஜாமீன் கொடுக்கலாம் என்று சி.பி.ஐ. நீதிமன்றத்திலே வெளிப்படையாக சொல்லி இருக்கிறது. தீபாவளி விடுமுறையினால் அதற்கான உத்தரவை பிறப்பிக்க முடியவில்லை என்றும் 3-ந் தேதி அன்று அதற்கான உத்தரவு பிறப்பிக்கப்படும் என்றும் நீதிபதி சொல்லியிருக்கிறார்.
 
கேள்வி:- நவம்பர் 3-ந் தேதி எப்படி இருக்கும் என்று நினைக்கிறீர்கள்.
 
பதில்:- நல்லவற்றையே நினைப்போம்.
 
கேள்வி:- பிரதமரிடம் என்ன பேசினீர்கள், கூடங்குளம் பிரச்சினை பற்றி பேசினீர்களா?
 
பதில்:- கூடங்குளம் பிரச்சினையில் அங்கே வாழ்கிற மக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாமல் அந்த திட்டத்தை நிறைவேற்ற உறுதிபட பாடுபட வேண்டும் என்பதை பிரதமரிடம் வலியுறுத்தியிருக்கிறேன். இலங்கை தமிழர்கள் பிரச்சினையில் அங்குள்ள தமிழர்களுக்கு நிவாரண உதவிகள் சரியாக வழங்கப்படவில்லை என்பதையும் சுட்டிக்காட்டியிருக்கிறேன்.
 
தமிழக மீனவர்கள் தொடர்ந்து இலங்கை கடற்படையினரால் தாக்கப்பட்டு வருவதையும் ஆதாரங்களோடு பிரதமருக்கு விளக்கியிருக்கிறேன். இவற்றோடு தூக்கு தண்டனை பெற்றிருக்கும் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோர் 20 ஆண்டு காலத்திற்கு மேலாக சிறையிலே வாடிக்கொண்டிருப்பதால் இதுவரையில் அனுபவித்து வந்த தண்டனை போதுமானது என்ற முறையில் அவர்களின் உயிர்களை காப்பாற்ற மத்திய அரசு உதவிட வேண்டும் என்று வலியுறுத்தி கேட்டுக் கொண்டிருக்கிறேன்.
 
காவிரிப் பிரச்சினையில் நடுவர் மன்ற இறுதி தீர்ப்பு மத்திய அரசிதழில் வெளியிடப்பட வேண்டும் என்பதை ஆட்சியில் இருந்த போதும் குறிப்பிட்டு கேட்டிருக்கிறோம். இப்போதுள்ள அரசும் கேட்டுக் கொண்டிருக்கிறது. நாங்களும் அதை வழிமொழிந்து கேட்டுக் கொள்கிறோம் என்பதை பிரதமரிடம் விளக்கி கூறியிருக்கிறேன்.
 
கேள்வி:- பிரதமர் முன்பு 2 மத்திய மந்திரி பதவிகள் தி.மு.க.விற்காக காலியாக இருக்கிறது என்று கூறியிருந்தாரே அதுபற்றி பேசினீர்களா?
 
பதில்:- அதைப்பற்றி அவரும் பேசவில்லை, நானும் கோரிக்கை வைக்கவில்லை.
 
கேள்வி:- அந்த இடத்தை எப்போது நிரப்ப போகிறீர்கள்?
 
பதில்:- நிரப்பும் போது உங்களுக்கு தெரியும்.
 
கேள்வி:- உள்ளாட்சி தேர்தல் முடிந்த சூழ்நிலையில் தி.மு.க. காங்கிரஸ் கூட்டணி எப்படி இருக்கிறது?
 
பதில்:- இந்த உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. தனித்து போட்டியிடுவது என்று ஆலோசித்து அவ்வாறே போட்டியிட்டது. சட்டசபை, நாடாளுமன்ற தேர்தல்களில் மற்ற கட்சிகளோடு உடன்பாடு கொள்வதற்கும் உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. தனித்து போட்டியிடுகிற நோக்கத்திற்கும் உள்ள வேறுபாடுகளை ஏற்கனவே அறிக்கை மூலம் சுட்டிக்காட்டியிருக்கிறேன். நடந்து முடிந்த உள்ளாட்சி மன்ற தேர்தலில் ஒவ்வொரு கட்சி பெற்ற வாக்குகளை சதவிகித கணக்கில் பார்த்தால் அ.தி.மு.க. - 39.02, தி.மு.க. - 26.09, தே.மு.தி.க. - 10.11, காங்கிரஸ் - 5.71. 2011 மே சட்டசபை தேர்தலில் தி.மு.க., காங்கிரஸ், பா.ம.க. விடுதலை சிறுத்தைகள், முஸ்லிம் லீக் கட்சிகளோடு கூட்டணி வைத்து பெற்ற வாக்குகள் 82,49,991. பதிவான வாக்குகளில் இது 22.30 சதவீதம். இப்போது உள்ளாட்சி மன்ற தேர்தலில் தி.மு.க. தனித்து போட்டியிட்டு 26.09 சதவீதம் வாக்குகளை பெற்றுள்ளது.
 
கேள்வி:- ஓட்டு சதவீதம் அதிகரிக்க கூட்டணி இல்லை என்பது தான் காரணமா?
 
பதில்:- அதைக் காரணமாக சொல்ல முடியாது.
 
கேள்வி:- வாக்குகள் அதிகம் கிடைத்ததற்கு காரணம் அ.தி.மு.க. அரசுக்கு எதிரான வாக்குகளா?
 
பதில்:- கடந்த 4, 5 மாத காலத்திற்குள் இந்த காரணங்களை எல்லாம் அறுதியிட்டு உறுதியாக கூற முடியாது.
 
கேள்வி:- காங்கிரஸ் தனித்தே போட்டியிட வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கூறியிருக்கிறார். தி.மு.க.வும் அப்படிப்பட்ட நிலையை ஏற்படுத்துமா?
 
பதில்:- இதுபற்றி எல்லாம் காங்கிரஸ் மேல்மட்ட தலைவர்களிடம் கலந்து கொண்டு தான் நான் எதுவும் சொல்ல முடியும். உள்ளாட்சி தேர்தல் தமிழ்நாட்டை பொறுத்தவரை செய்து கொள்ள வேண்டிய ஏற்பாடு. ஆனால் அத்தகைய ஏற்பாடு மாற்றப்பட வேண்டும் என்று என்னிடத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் பேசவும் இல்லை. அதற்கான அறிவிப்பை செய்யவும் இல்லை.
 
கேள்வி:- மத்திய அரசு மாற்றாந்தாய் மனத்தோடு மாநில அரசை பார்ப்பதாக முதல்-அமைச்சர் கூறியிருக்கிறாரே?
 
பதில்:- மாநில சுயாட்சியின் மையக் கருத்து மத்திய அரசு மாநில அரசுகளை மாற்றாந்தாய் மனப்பான்மையோடு நடத்தக் கூடாது என்பது தான். இதை நாங்கள் சொல்லும்போது இதற்கு ஆயிரம் வியாக்யானங்கள், கிண்டல்கள், கேலிகள் செய்தவர்கள் இப்போது அவர்களே போய் ஒரு அவையிலே சொல்லியிருப்பது ஆச்சரியமாக இருக்கிறது.
 
இவ்வாறு கருணாநிதி கூறினார்.



அ.தி.மு.க.வுடன் கூட்டணியா? மதுரையில் அத்வானி பேட்டி

 
 
 
பாரதீய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் எல்.கே.அத்வானி இன்று மதுரையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
 
கே:- ஊழலுக்கு எதிராக போராடும் நீங்கள் உங்கள் கட்சியை சேர்ந்த கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா, ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளது குறித்து உங்கள் கருத்து என்ன?
 
ப:- கர்நாடகாவில் லோக் ஆயுக்தா அமைக்க முதலில் போராடியது பாரதீய ஜனதா தான். பாரதீய ஜனதாவை சேர்ந்தவர்கள் ஊழலுக்கு துணைபோனால் கட்சி அவர்களிடம் மென்மையான போக்கினை கடைப்பிடிக்காது.
 
கே:- கூடங்குளம் அணுமின் நிலையம் தொடர்பாக பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருவது குறித்து உங்கள் நிலைப்பாடு என்ன?
 
ப:- பொதுவாக அணுமின் நிலையங்கள் அமைக்கப்படும்போது மிக எச்சரிக்கையுடன் நடத்த வேண்டும். ஜப்பான் அணுஉலை விபத்திற்கு பிறகு பல்வேறு நாடுகள் பாதுகாப்பு அம்சத்தை கருத்தில் கொண்டு கடலோரத்தில் உள்ள தங்களின் அணுஉலையை மறு சீரமைப்பு செய்து வருகின்றன.
 
கூடங்கும் அணுமின் நிலையம் பாதுகாப்பையும் மத்திய அரசு மறுஆய்வு செய்ய வேண்டும். அணுமின் நிலையம் அமைக்கும்போது பொதுமக்களின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் தர வேண்டும். மேலும் மத்திய அரசு பொதுமக்களின் பாதுகாப்பை பராமரிக்க எச்சரிக்கையுடன் நடக்க வேண்டும்.
 
கே:- ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 3 பேருக்கு கருணை மனு பரிசீலிக்க வேண்டும் என்பது குறித்து உங்கள் கருத்து?
 
ப:- பாராளுமன்ற தாக்குதல் மற்றும் தேசிய தலைவர்கள் கொல்லப்பட்ட சம்பவங்களில் ஈடுபட்டவர்களுக்கு தண்டனை வழங்கும் அதிகாரம் கோர்ட்டுக்குதான் உள்ளது. இதற்கு அரசியல் ரீதியாக அணுகக்கூடாது. தனிப்பட்ட மனுதரின் கருணை மனு என்றால், கருணை காட்டலாம். ஆனால் இதுபோன்ற சம்பவங்களில் ஈடு பட்டவர்களுக்ஙகு கருணை காட்டக்கூடாது.
 
கே:- வருகிற பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. வுடன் கூட்டணி ஏற் படுமா?
 
ப:- மத்தியில் கூட்டணி ஆட்சி என்பது தவிர்க்க முடியாததாகி விட்டது. தனிக்கட்சி ஆட்சி என்பது இல்லை. வருகிற பாராளுமன்ற தேர்தலில் ஒத்தக்கருத்து உள்ள கட்சிகளுடன் கூட்டணி அமைப்பது குறித்து அப்போது முடிவு செய்யப்படும்.
 
இவ்வாறு அவர் கூறினார்.



முன்னாள் பிரதமர் தேவே கௌடா மீது ஊழல் வழக்கு பதிவு

 
 
 
கிருஷ்ணா நதிநீர் திட்டத்தில் பணிகள் ஒதுக்கியதில் முறைகேடுகள் நடந்துள்ளதாகக் கூறி முன்னாள் பிரதமர் தேவே கௌடா மீது சிஐடி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
 
கடந்த 1995ம் ஆண்டு கர்நாடக முதல்வராக இருந்தபோது தேவே கௌடா கிருஷ்ணா நதிநீர் திட்டப் பணிகளை பிரித்துக் கொடுத்ததில் முறைகேடு நடந்துள்ளது என்று புகார் தெரிவிக்கப்பட்டது. அவர் இந்த திட்டம் தொடர்பான நூற்றுக்கணக்கான ஒப்பந்தங்களில் யாரையும் கலந்தாலோசிக்காமல் ஒரே இரவில் கையெழுத்திட்டுள்ளார். ரூ. 400 கோடி மதிப்பிலான பணிகளை தேவே கௌடா தனியார் கான்டிராக்டர்களுக்கு கொடுத்துள்ளார். இது குறித்து சோமசேகர ரெட்டி என்பவர் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
 
அவரது மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம் இது குறித்து நடவடிக்கை எடுக்குமாறு மாநில அரசுக்கு உத்தரவிட்டது. இதையடுத்து சிஐடி போலீசார் தேவே கௌடாவுக்கு எதிராக வழக்கு பதிவு செய்துள்ளனர்.
 
கடந்த 16 ஆண்டுகளுக்கு முன்பு பிரச்சனையாகி ஒடுங்கிய விஷயம் தற்போது மீதும் தேவே கௌடாவுக்கு தலைவலி ஏற்படுத்தியுள்ளது. இந்த ஊழல் தேவே கௌடா பிரதமாராக பதவி ஏற்பதற்கு முன்பு நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
 
ஊழல் வழக்குகளில் சிக்கி கர்நாடக முன்னாள் முதல்வர் எதியூரப்பா ஒரு பக்கம் சிறையில் இருக்க மறுபக்கம் தேவே கௌடா மீது ஊழல் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.



மதுரையில் அத்வானியை கொல்ல சதி :ரதயாத்திரை செல்லும் பாதையில் வெடிகுண்டு!

 
 
 
பாஜக தலைவர் அத்வானி ரத யாத்திரை மேற்கொண்டுள்ள பாதையில் ஒரு பாலத்துக்கு அடியில் பயங்கர ஆர்டிஎக்ஸ் வெடிகுண்டு கண்டறியப்பட்டு, உரிய நேரத்தில் அகற்றப்பட்டது.
 
மதுரையிலிருந்து ராஜபாளையம் செல்லும் நெடுஞ்சாலையில் ஆலம்பட்டி என்ற கிராமத்தில் தரைப்பாலத்தில் இந்த குண்டு வைக்கப்பட்டிருந்தது.
 
மதுரை- டி.கல்லுப்பட்டி இடையிலான இந்தப் பாதையில் பிளாஸ்டிக் குழாயில் ஆர்டிஎக்ஸ் வெடி மருந்து நிரப்பப்பட்டு, ஒயர் மூலம் பேட்டரி-கடிகாரத்துடன் இணைக்கப்பட்டிருந்தது.
 
அத்வானி இன்று காலை இந்த வழியாக செல்லும் முன் பாதையை முழுமையாக ஸ்கேன் செய்த தேசிய பாதுகாப்புப் படையின் கமாண்டோக்கள் இதைக் கண்டுபிடித்து அகற்றினர்.
 
இந்த குண்டை செயலிழக்கச் செய்வதற்காக நெடுந்தூரம் கொண்டு செல்லப்பட்டது.
 
இந்தப் பாதையில்தான் அத்வானி இன்று மதுரையிலிருந்து நெல்லை செல்ல இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.



Thursday 27 October 2011

பாமகவுடன் கூட்டணிக்கு தேமுதிக முயற்சி: விருத்தாசலத்தில் பரபரப்பு!

 
 
 
தேமுதிக தலைவர் விஜய்காந்த்தின் சட்டமன்றத் தொகுதியான விருத்தாசலத்தில் ஒன்றியத் தலைவர் பதவியைப் பிடிக்க தேமுதிகவும் பாமகவும் கூட்டணி அமைக்க முயன்று வருகின்றன.
 
நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் கடலூர் மாவட்டம் விருத்தாசலம் ஒன்றியத்தில் மொத்தமுள்ள 19 கவுன்சிலர் பதவிகளில் அதிமுக, தேமுதிக ஆகியவை தலா 5 இடங்களிலும், பாமக 3 இடங்களிலும், திமுக 1 இடத்திலும் சுயேச்சைகள் 5 இடங்களையும் பிடித்துள்ளனர்.
 
இதையடுத்து இந்த ஒன்றியத்தின் சேர்மன் பதவியைக் கைப்பற்ற அதிமுக, தேமுதிகவினர் இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.
 
பாமகவும் சுயேச்சைகளும் யாரை ஆதரிக்கிறார்களோ அந்தக் கட்சிக்கே தலைவர் பதவி கிடைக்கும்.
 
இந் நிலையில் அதிமுக, தேமுதிக ஆகிய இரு கட்சிகளும் பாமக மற்றும் சுயேச்சைகளிடம் பேச்சு நடத்தி ஆரம்பித்துள்ளன.
 
இதில் பாமகவுக்கு துணை சேர்மன் பதவியை விட்டுத் தர இரு கட்சிகளுமே முன் வந்துள்ளன.
 
அதிமுக-பாமக இடையே மாநில அளவில் பலமுறை கூட்டணி இருந்துள்ளது. ஆனால், விஜய்காந்தை மிகக் கடுமையாக விமர்சித்து வந்த பாமகவுடன் தேமுதிக கூட்டணிக்கு முயல்வது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
அதே நேரத்தில் சுயேச்சைகளை மொத்தமாக வளைத்து பதவியைப் பிடிக்க அதிமுகவும் தீவிரமாக களமிறங்கியுள்ளது.
 
இங்கு தேமுதிக-பாமக கூட்டணி உருவானால் பிற்காலத்தில் அது மாநில அளவிலான கூட்டணிக்குக் கூட அடிப்படையாக அமையலாம்.



தோல்வியடைந்தும் மக்களுக்கு ஸ்வீட் கொடுத்த திமுக வேட்பாளர்!

 
 
 
வடமதுரை பேரூராட்சி கவுன்சிலர் தேர்தலில் தோல்வியடைந்த திமுக வேட்பாளர் மக்களுக்கு ஸ்வீட், கார வகைகளை வழங்கி நன்றி தெரிவித்தார்.
 
கடந்த உள்ளாட்சித் தேர்தலில் திண்டுக்கல் மாவட்டம், வடமதுரை பேரூராட்சி 11வது வார்டில் அதிமுக சார்பில் செந்திலாண்டவர் என்பவரும், திமுக சார்பில் மாரியப்பன் என்பவரும் போட்டியிட்டனர்.
 
இதில், அதிமுகவைச் சேர்ந்த செந்திலாண்டவர் வெற்றி பெற்றார். மாரியப்பன் 101 ஓட்டுக்கள் பெற்று தோல்வியடைந்தார். தோல்வி கண்டு துவளாத திமுக வேட்பாளர் மாரியப்பன் போட்டியிட்ட வார்டு பகுதியில் உள்ள வீடுகளுக்கு சென்று நன்றி அறிவிப்பு நோட்டீஸ் உடன், ஸ்வீட், மிக்சர் பாக்கெட்களை வழங்கி நன்றி தெரிவித்தார்.
 
அதனை பெற்றுக் கொண்ட வாக்காளர்கள் 'அடடே இவரைப் போய் தோல்வியடை செய்து விட்டேமே' என காமெடி நடிகர் வடிவேல் பாணியில் வருந்தினர். ஸ்வீட் பாக்கெட்டுகளை நன்றியோடு பெற்றுக் கொண்டார்கள்.




அதிமுகவினர் இடையே மோதல்: எம்.ஜி.ஆர். சிலை உடைப்பு

 
 
 
கடலூர் மாவட்டம் விருத்தாச்சலத்தை அடுத்துள்ள கம்மாபுரத்தில் துணை தலைவர் பதவிக்கு யார் போட்டியிடுவது என்று அதிமுகவைச் சேர்ந்த 2 கோஷ்டிகள் மோதிக் கொண்டன. இதில் அப்பகுதியில் இருந்த எம்.ஜி.ஆர். சிலை உடைக்கப்பட்டுள்ளது.
 
கடலூர் மாவட்டம் விருத்தாச்சலத்தை அடுத்துள்ளது கம்மாபுரம். அங்கு துணை தலைவர் பதவிக்கான போட்டி நடக்கவிருக்கிறது. அதில் நான் தான் போட்டியிடுவேன் என்று ஒரு கோஷ்டியும், இல்லை நான் தான் போட்டியிடுவேன் என்று இன்னொரு கோஷ்டியும் அடம்பிடிக்கிறது. இதனால் இந்த 2 கோஷ்டிகள் இடையே திடீர் என்று மோதல் ஏற்பட்டது.
 
இதனால் அப்பகுதியில் இருந்த எம்.ஜி.ஆர். சிலை உடைக்கப்பட்டுள்ளது. யார் உடைத்தது என்று கேட்டால் இரு கோஷ்டியினரும் ஒருவர் மீது ஒருவர் குற்றம்சாட்டுகின்றனர்.
 
இது குறித்து தகவல் அறிந்த அமைச்சர் செல்வி ராமஜெயம் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார்.