Followers

Thursday 8 December 2011

தமிழக சட்டத்துறை அமைச்சர் பரஞ்சோதி மீது எப்.ஐ.ஆர்.

 
 
 
 
 
தமிழக சட்டத்துறை அமைச்சர் மு.பரஞ்சோதி மீது பெண்களுக்கு எதிரான வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழ்க்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
 
 
திருச்சையைச்சேர்ந்த டாக்டர் ராணி, மு.பரஞ்சோதியை தான் இரண்டாவது திருமணம் செய்துகொண்டார் என்றும், அவருக்கும் இது இரண்டாவது திருமணம் என்றும், தன்னிடம் பணம், நகைகளை வாங்கிக்கொண்டு ஏமாற்றிவிட்டார். என்னுடனான தொடர்பை துண்டித்துவிட்டார் என்று புகார் கூறினார். இந்த புகாரை பரஞ்சோதி மறுத்தார்.
 
இதையடுத்து ராணி, பரஞ்சோதி தனது கணவர் என்பதற்கும், தான் பரஞ்சோதியின் மனைவி என்பதற்கும் உரிய ஆதாரங்களை போலீஸ் ஸ்டேஷனில் சமர்ப்பித்தார்.
 
இதன்பிறகும் பரஞ்சோதி மீது நடவடிக்கை எடுக்காததால், ராணி கோர்ட்டுக்கு சென்றார்.
 
திருச்சி மே.எம். நீதிமன்றத்தில் ராணியின் மனு மீதான விசாரணை நடந்தது.
 
 
மனுவை விசாரித்த நீதிபதி புஷ்பராணி, பரஞ்சோதி மீது இன்னும் வழக்கு பதிவு செய்யாதது ஏன் என்று கேள்வி எழுப்பினார். அவர் மேலும், நாளை (9. 12.11) பரஞ்சோதி குறித்து விசாரணையை சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தார்.
 
 
 
தீர்ப்புக்கு பின்னர் போலீசார், பரஞ்சோதி மீது 294B, 323, 406, 420, 493, 506/2 ஆகிய 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
 
 
பெண்களுக்கு எதிரான வன்கொடுமை சட்டத்தின் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
 
 
 
 
 


Wednesday 7 December 2011

பலவீனம் அணையில் இல்லை, கேரள அரசியல்வாதிகளிடம்தான்- விஜயகாந்த்

 
பலவீனம் முல்லைப் பெரியாறு அணையில் இருப்பதாக தெரியவில்லை. மாறாக கேரள அரசியல்வாதிகளிடம்தான் உள்ளதாக தெரிகிறது என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.
 
இதுகுறித்து விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கை:
 
தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு செல்லும் ஐயப்ப பக்தர்களை கேரள சமூக விரோதிகள் அடித்து துன்புறுத்துகிறார்கள் என்றும், அதனால் பக்தர்கள் பாதிப்புக்கும், தவிப்புக்கும் உள்ளாகி உள்ளனர். அதோடு பஸ் பயணிகளும் தாக்கப்படுகிறார்கள் என்றும் அறிய வருகிறேன்.
 
இது மிகுந்த வருத்தத்தையும், வேதனையும் அளிக்கிறது. இது தமிழ்நாடு, கேரளாவுக்கும் இடையே நிலவி வரும் உறவுக்கு நல்லதல்ல.
 
மக்களுடைய உயிர்களுக்கும், உடமைகளுக்கும் பாதுகாப்பு அளிக்க வேண்டியது கேரள அரசின் கடமையாகும். பாதிக்கப்பட்ட மக்கள் புகார் கொடுத்தாலும் கேரளாவைச் சேர்ந்த காவல்துறையினர் கண்டு கொள்ளாமல், அங்குள்ள சமூக விரோதிகளுக்கு அவர்கள் உடந்தையாகவும் உள்ளனர் என்றும் தகவல்கள் தெரிவிக்கிறது.
 
இது இந்திய ஒருமைப்பாட்டுக்கு வேட்டு வைப்பதாகும்.இதைத் தட்டிக் கேட்க வேண்டிய இந்திய அரசோ மௌனம் காக்கிறது. பிரச்சினை இந்த அளவுக்கு வளர மத்திய அரசுதான் காரணம். 2006 ஆம் ஆண்டே முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு அளித்த தீர்ப்பை இந்திய அரசு நிறைவேற்றி இருந்தால் இன்று இந்த கலவரம் ஏற்பட்டு இருக்காது.
 
இந்திய அரசும் காங்கிரஸ் கட்சியின் கையில் தான் உள்ளது. கேரளாவிலும் காங்கிரஸ் ஆட்சிதான் நடக்கின்றன. இருப்பினும் அப்பாவித் தமிழ் மக்கள் கேரளாவில் தாக்கப்படுவதை இந்திய, கேரள அரசுகள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.
 
கேரளாவைச் சேர்ந்த சமூக விரோதிகள் மீதும், இப்பிரச்சினைக்கு காரணமானவர்கள் மீதும் இந்திய அரசும், கேரள அரசும் உடனடியாக நடவடிக்கை எடுத்து தமிழக மக்கள் தாக்கப்படுவதை நிறுத்தவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
 
பலவீனம் அணையில் இல்லை, கேரள அரசியல் வாதிகளிடம்தான் உள்ளதோ என்ற சந்தேகம் எனக்கு வருகிறது என்று அவர் கூறியுள்ளார்.



சரத்பவார் மீதான தாக்குதல் சரியானதே : காந்தியவாதி அன்னா ஹசாரே

 
 
மத்திய அமைச்சர் சரத்பவார் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவம் சரியானது என்று காந்தியவாதி அன்னா ஹசாரே தெரிவித்துள்ளார். பவார் மீது தாக்குதல் நடந்தவுடன் பத்திரிகையாளர்களை சந்தித்த ஹசாரே, ஒரு அடி தான் விழுந்ததா? என்று கேட்டு பரபரப்பை ஏற்படுத்தியது நினைவிருக்கலாம்.
 
இதுகுறித்து, காந்தியவாதி அன்னா ஹசாரே தனது வலைப்பூவில் (பிளாக்) தெரிவித்துள்ளதாவது, சரத்பவார் மீதான தாக்குதல், திட்டமிட்ட வன்முறை என்று பலர் தெரிவித்துள்ளனர். ஆனால், இந்த தாக்குதல், முன்னேற்றத்திற்கான அறிகுறியாகவே தான் கருதுகிறேன். ஊழலுக்கு எதிராக போராடுபவர்களுக்கு, அரசியல்வாதிகள் கொடியவர்களாகவும், ஊழல் வியாதிகளாகவும் தெரிவது இதன்மூலம் தெளிவாகி உள்ளது. தாக்குதல் நடத்திய இளைஞரை மட்டும் குறை கூறும் அரசியல்வாதிகள், அந்த சம்பவம் நடைபெற்றதற்கான காரணம் குறித்து அவர்கள் ஏன் சிந்திக்க மறுக்கிறார்கள்?
 
விவசாயத்தை அடிப்படையாகக் கொண்ட இந்திய திருநாட்டில், விவசாயிகளின் உரிமைகள் மறுக்கப்படுகிறது. மீறி போராடும் விவசாயிகள் கடுமையாக தாக்கப்படுகிறார்கள், துப்பாக்கிச்சூடும் அவர்கள் மீது நடத்தப்படுகிறது. மகாராஷ்டிரா மாநிலத்தில், விவசாயிகள் தற்‌கொலை அதிகளவில் நடைபெற்று வருகிறது. இந்த காரணங்களுக்காக, ஒரு அரசியல்வாதியும் சினம் கொண்டதாக தெரியவில்லை. ஆனால், அவர்கள் மீது தாக்குதல் நடைபெற்ற உடனே, அவர்கள் கொதித்து எழுகின்றனர். இது எந்தவகையில் நியாயம்?
 
கோதுமை இறக்குமதிக்கு வித்திட்ட இந்த மத்தி்ய அமைச்சர் சரத்பவார், அழுகிய கோதுமைகளை இங்கு இறக்குமதி செய்து அவர்களை பயன்படுத்தாவண்ணம் செய்து விட்டார். மேலும், அவை உண்ணும் நிலையில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. மக்களின் கோடிக்கணக்கான பணம் இதன்மூலம் வீணாக்கப்பட்டுள்ளது. இதுகுறி்த்து, கேட்டால் அவர்களிடம் உரிய பதில் இல்லை.
 
சரத்வார் சார்ந்த கட்சியான தேசியவாத காங்கிரஸ் கட்சியின் ‌3 அமைச்சர்கள் ஊழலில் ஈடுபட்டது நீதிபதி பி பி சாவந்த் கமிஷன் மூலம் வெளிவந்தபோதிலும், அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படாதது ஏன்? கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக, அந்த 3 அமைச்சர்களை பதவி விலக்க வேண்டும் என்று வலியுறுத்தி வந்துள்ளேன். ஆனால், அரசு இதை காதில் கூட போட்டுக் கொள்ளவில்லை.
 
இன்றைய நிலையில், நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக ஊழல் வளர்ச்சியடைந்து வருகிறது. இந்த ஊழல், பாமர மக்கள் நிம்மதியாக வாழ்வதற்கு பெரும் தடைக்கல்லாக இருந்து வருகிறது. ஒரு‌வேளை உணவு சாப்பிடுவதற்கே, அவர்கள் பெரும் கஷ்டம் அனுபவிக்க வேண்டியுள்ளது. எதற்கும் ஒரு எல்லை உண்டு. சாது மிரண்டால் காடு கொள்ளாது என்ற ப‌ழமொழிக்கேற்ப, எல்லை மீறும் பட்சத்தில், மக்கள் சட்டத்தை தங்கள் கையில் எடுத்துக் கொள்கி்ன்றனர். இதில் ஒன்றும் தவறு இருப்பதாக நான் உணரவில்லை என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.
 
சிலர் என்னை, மகாத்மா காந்தியோடு ஒப்பிட்டு பேசுகிறார்கள். இது முற்றிலும் தவறு. நான் அவரது கால் பகுதியில் உட்காருவதற்கு கூட தகுதியில்லாதவன். மகாத்மா காந்தியின் கொள்கைகளால் பெரிதும் ஈர்க்கப்பட்டு அவரது வழியிலேயே அகிம்சை முறையில், நாட்டின் வளர்ச்சிக்கு நான் பாடுபட்டு வருகிறேன் என்று அவர் மேலும் அதில் தெரிவித்துள்ளார்.



Tuesday 6 December 2011

சென்னை திரும்பினார் ஊழல்ராணி... விமான நிலையத்தில் கருணாநிதி வரவேற்பு

 
 
 
கலைஞர் கருணாநிதியின் மகளும், திமுக எம்.பி.யுமான கனிமொழி, 2ஜி அலைவரிசை வழக்கு தொடர்பாக கடந்த மே மாதம் 20-ந்தேதி கைது செய்யப்பட்டார்.
 
டெல்லி திகார் சிறையில் 194 நாட்கள் இருந்த அவர் கடந்த மாதம் 28-ந்தேதி ஜாமீனில் விடுதலை ஆனார். அவருடன் கலைஞர் டி.வி. நிர்வாக இயக்குனர் சரத்குமார் உள்பட 5 பேர் ஜாமீன் பெற்றனர். கனிமொழிக்கு 28-ந்தேதி டெல்லி ஐகோர்ட்டு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது என்றாலும் கோர்ட்டு உத்தரவு மற்றும் ஆவணங்கள் பெறுவதில் ஏற்பட்ட தாமதத்தால் 29-ந்தேதி இரவு 7 மணி அளவில் திகார் சிறையில் இருந்து வெளியே வந்தார்.
 
ஆனால் வழக்கு விசாரணை நடைபெறும் நாளில் டெல்லியில் இருக்க வேண்டும் என்பதால் அங்கேயே தங்கி இருந்தார். இன்று சி.பி.ஐ. கோர்ட்டுக்கு விடுமுறை என்பதால் 200 நாட்களுக்கு பிறகு சென்னை திரும்ப முடிவு செய்தார்.
 
அதன்படி இன்று காலை டெல்லியில் இருந்து விமானம் மூலம் சென்னை புறப்பட்டார். டெல்லி விமான நிலையத்தில் தி.மு.க. எம்.பி.க்கள், கட்சி நிர்வாகிகள் கனிமொழி எம்.பி.யை சென்னைக்கு வழியனுப்பி வைத்தனர்.
 
டெல்லி விமான நிலையத்தில் கனிமொழி நிருபர்களிடம் கூறுகையில், "2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் என் மீது குற்றமில்லை என்பதை நிரூபிப்பேன், இந்த வழக்கில் பலரும் விடுதலையானது மகிழ்ச்சி அளிக்கிறது" என்றார்.
 
மதியம் 1.45 மணி அளவில் கனிமொழி சென்னை வந்து சேர்ந்ததும் விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தி.மு.க. தலைவர் கருணாநிதி விமான நிலையம் சென்று வரவேற்றார். ராஜாத்தி அம்மாளும் உடன் சென்றார். தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின், தயாளுஅம்மாள், செல்வி, மு.க. தமிழரசு, மத்திய மந்திரி ஜெகத்ரட்சகன், முன்னாள் அமைச்சர்கள் பொன்முடி, கே.என். நேரு, எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், எ.வ.வேலு, தா.மோ.அன்பரசன், பொங்கலூர் பழனிச்சாமி, ஐ.பெரியசாமி, மைதீன்கான், சுப.தங்கவேலன், பூங்கோதை, தமிழரசி, சற்குணபாண்டியன், முன்னாள் மேயர் மா.சுப்பிரமணியன், நடிகை குஷ்பு மற்றும் செ. குப்புசாமி, எம்.பி.க்கள் டி.கே.எஸ்.இளங்கோவன், ஜெயதுரை மற்றும் எப்.எம்.ராஜரத்தினம், கவிஞர் காசிமுத்து மாணிக்கம் உள்ளிட்ட தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் ஏராளமானோர் கனிமொழியை வரவேற்க தி.மு.க. கொடியுடன் விமான நிலையத்தில் குவிந்தனர்.
 
கனிமொழி விமான நிலையத்தில் இருந்து வெளியே வந்தபோது தொண்டர்கள் உற்சாகமாக கோஷமிட்டனர். கனிமொழி விமான நிலையத்தில் இருந்து வீடு திரும்பும் வழியில் அவரை வரவேற்கும் வகையில் பேனர்கள் வைக்கப்பட்டு இருந்தன. தி.மு.க. கொடிகளும் பேனருடன் இடம் பெற்றிருந்தன.
 
மானமிகு கனிமொழி கருணாநிதி அவர்களே வருக, இனமான எழுச்சியே வருக, இரும்பு கூண்டின் பூட்டு திறந்தது.. பாட்டுக்குயிலே... கனிமொழியே வருக, சூழ்ச்சி மேகங்களை சுட்டெரித்து வரும் சூரிய கதிரே வருக, ஆறுதல் கூற வந்தவர்களை நலம் விசாரித்து ஆறுதல் கூறி அனுப்பிய கனிமொழியே வருக, சோதனை பொறுத்தாய்.. தண்டனை பொறுத்தாய்... பொறுத்தார் பூமி ஆள்வார், இயக்கத்தின் தியாகமே, ஏழைகளின் இதயமே வருக... வருக.., எறும்புக்கும் தீங்கு இழைக்காத உனக்கு இத்தனை துயரங்கள் எதற்கு? என்பன போன்ற வாசகங்கள் அதில் இடம்பெற்றிருந்தன.



ஜெ. மீது நடவடிக்கை எடுக்கச்சொன்னால் என்னை மிரட்டுகிறார்: ஸ்டாலின்

 
 
 
சிறுதாவூரிலும், கொடநாட்டிலும் முதல்வர் ஜெயலலிதா நிலத்தை அபகரித்துக் கொண்டிருப்பதற்காக அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா என்று கேட்டால் சட்டத்துறை அமைச்சர் என் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன் என்று மிரட்டுகிறார் என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
 
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
 
சிறுதாவூரிலும், கொடநாட்டிலும் ஜெயலலிதா தனது பினாமிகள் பெயரால் நிலத்தை அபகரித்துக் கொண்டிருக்கிறாரே, அதன் மீது நடவடிக்கை எடுப்பீர்களா என்று கேட்டதற்கு, சட்டத்துறை அமைச்சர் பரஞ்சோதி என் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்போவதாக மிரட்டியிருக்கிறார்.
 
சட்டத்துறை அமைச்சர் பரஞ்சோதி மீது டாக்டர் ராணி என்பவர் புகார் கொடுத்த போது போலீசார் அதனை வாங்க மறுத்ததால், டாக்டர் ராணி நீதிமன்றத்திலேயே மனு தாக்கல் செய்து, நீதிபதி உடனடியாக காவல் துறை வழக்கு பதிந்து விசாரிக்க வேண்டும் என்றும், அதற்கான அறிக்கையை வரும் 9ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டுமென்றும் கூறியிருக்கிறார்.
 
அதற்கு பதில் சொல்ல முடியாத அமைச்சர் தான் என் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்போவதாக சொல்லியிருக்கிறார். அதனைச் சட்டப்படியே சந்திக்க தயாராக நான் இருக்கிறேன்.
 
நீலகிரி மாவட்டம், கொடநாட்டில் உள்ள தேயிலை எஸ்டேட் அருகே உள்ள அண்ணா நகர், காமராஜர் நகர் பகுதி மக்கள் எஸ்டேட் வழியாகச் செல்லும் சாலையைத் தான் பயன்படுத்தி வந்தார்கள்.
 
ஆனால் ஜெயலலிதா அங்கே வந்து தங்க ஆரம்பித்த பிறகு, அந்த சாலையை மூடி விட்டதால், அதை எதிர்த்து வழக்கு உச்சநீதிமன்றம் வரை சென்றது.
 
உச்ச நீதிமன்றம் சில நிபந்தனைகளுக்குட்பட்டு சாலையைத் திறந்து விட உத்தரவிட்டும், அதனை ஏற்காததால், 19-3-2011 அன்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் குந்தகம் சர்மா, அனில் தவே ஆகியோர் 900 ஏக்கர் பரப்பளவிலான எஸ்டேட்டில், இரண்டரை கிலோ மீட்டர் தொலைவுள்ள சாலையை கிராம மக்கள் பயன்பாட்டிற்காக 24 மணி நேரமும் திறந்து வைத்திருக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
 
இதைத் தான் நான் சுருக்கமாக நில அபகரிப்பு என்ற பெயரால் கழகத்தினர் மீது தொடர்ந்து நடவடிக்கை எடுக்கும் அதிமுக அரசு, இந்த நில அபகரிப்புகளுக்கும் நடவடிக்கை எடுக்குமா? என்று எனது பேட்டியில் கேட்டிருந்தேன்.
 
இதற்கு பதில் அமைச்சர் பரஞ்சோதி தான் சொல்லியிருக்கிறார். தற்போது நான் கேட்டுள்ள இந்த விளக்கங்களின் மீது அந்த அமைச்சரோ, முதலமைச்சரோ சட்டப்படி நடவடிக்கை எடுக்கத் தயாராக இருக்கிறார்களா? என்பது தான் இப்போதும் என் கேள்வி என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.



ஒய் திஸ் கொலைவெறிம்மா: ஜெ.வைப் பார்த்து மக்கள் கேட்கிறார்கள்-குஷ்பு

 
 
 
பால் விலை, பேருந்து கட்டணத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் முதல்வர் ஜெயலலிதாவைப் பார்த்து ஏன் இந்த கொலைவெறிம்மா? உங்களுக்கு வாக்களித்தற்காகவா என்று கேட்கிறார்கள் என்று நடிகை குஷ்பு திமுக கண்டன பொதுக் கூட்டத்தில் தெரிவித்தார்.
 
பால் விலை, பஸ் கட்டண உயர்வைக் கண்டித்து தென் சென்னை மாவட்ட திமுக சார்பில் தி.நகர் பஸ் நிலையம் அருகே சில தினங்களுக்கு நடந்த கண்டனப் பொதுக் கூட்டம் நடந்தது. அதில் குஷ்பு பேசுகையில்,
 
அம்மையார் ஜெயலலிதா சர்வாதிகாரி ஹிட்லர் போன்று ஆட்சி நடத்துறாங்க. ஆட்சிக்கு வந்தவுடன் சமச்சீர் கல்வித் திட்டத்தில் கை வைச்சாங்க. அதனால குழந்தைகள் எல்லாம் 3 மாதமாக பாடம் படிக்காம சும்மா பள்ளிக்கூடம் போனாங்க.
 
பசங்க படிப்பை 3 மாதம் கெடுத்தது போதாதென்று புத்தகங்களில் சில பக்கங்கள் மீது பேப்பரை ஒட்டி, உச்ச நீதிமன்ற தீர்ப்பு வந்ததும் மறுபடியும் வேற பேப்பரை ஒட்டி ரூ.200 கோடிக்கு மேல் செலவு செஞ்சிருக்கீங்க. அந்த வீண் செலவை மிச்சப்படுத்தியிருந்தா பால் விலையை ஏற்றியிருக்க வேண்டாமே.
 
மக்களுடைய வரிப் பணத்தில் கட்டிய புதிய தலைமைச் செயலகத்தை தலைவர் கருணாநிதி கட்டியதால் அவருக்கு பெருமை சேர்ந்துவிடக்கூடாது என்பதற்காக நான் அந்த கட்டிடத்தில் கால் வைக்க மாட்டேன் என்று சொல்லி, கோட்டைக்கு போனீங்க. புதிய தலைமைச் செயலகத்தில் சட்டமன்றத்தை உங்களால் நடத்த முடியாதா என்ன?, எல்லாம் வாஸ்து படு்ததுற பாடு. படிச்ச காலத்தில வாஸ்து சாஸ்திரம் பார்க்கிறீங்க.
 
அரசாங்கம் வருடத்திற்கு ஒரு முறை தான் பட்ஜெட் போடும். ஆனால் குடும்பத் தலைவிகள் மாதாமாதம் பட்ஜெட் போடுவாங்க. ரூ.1000க்கு வாங்கிய பால் தற்போது ரூ.1500 ஆகவும், ரூ.1300 ஆக இருந்த பஸ் கட்டணம் ரூ.1,800 ஆகவும் உயர்ந்துவிட்டது. 5,10 வேண்டும் என்று அக்கம்பக்கத்தில் வாங்கிவிட்டு அடுத்த மாசம் கொடுத்திடலாம். ரூ.200 தேவைப்பட்டால் சொந்தக்காரங்க, நண்பர்கள்கிட்ட கேட்கலாம். ஆனால் ரூ.2,000, 3,000 அல்லவா பட்ஜெட்டில் இடிக்கிறது. மாதம் ரூ.5,000, 6,000 சம்பளம் வாங்குகிறவர்கள் எல்லாம் எங்க போறது?.
 
குழந்தைகளுக்கு ஒரு வேலை சோறு கொடுக்க முடியாட்டியும் பால் கொடுத்து தூங்க வைக்கலாம். ஜெயலலிதா அம்மையார் ஆட்சியில் தாய்மார்கள் கண்ணீர் அதுவும் ரத்தக் கண்ணீர் வடிக்கிறாங்க. வெளியே போயிட்டு வீட்டுக்கு வர்ற ஆண்கள் ஒரு டம்ளர் காபி கேட்க பயப்படுகிறாங்க. அதற்கு காரணம் ஜெயலலிதா அம்மையார் தான். அவங்களுக்கு என்ன ஏசி வண்டில சுத்திக்கிட்டு, கொடநாடு போய் ஜாலியாக இருப்பாங்க. கஷ்டப்படுவது எல்லாம் தமிழக மக்கள் தான்.
 
அந்த அம்மையார் கர்நாடக நீதிமன்றத்திற்கு போய் 1,400 கேள்விகளுக்குப் பதில் சொல்லிட்டு வந்தாங்க. ஆனால் தமிழக மக்கள் அந்த அம்மாவைப் பார்த்து ஒரேயொரு கேள்வி கேட்டுக்கிட்டே இருக்காங்க. அந்த அம்மா அதற்கு எந்த பதிலும் சொல்லவில்லை, சொல்லவும் மாட்டார்கள். பதில் தெரிந்தால் தானே சொல்வதற்கு.
 
அந்த அம்மாவைப் பார்த்து தமிழக மக்கள் ஏன் எங்களை இப்படி பழிவாங்குறீங்க என்ற ஒரு கேள்வியைத் தான் கேட்கிறாங்க. நாங்களும் அதைத் தான் கேட்கிறோம்.
 
பொய் வழக்கு போட்டு திமுகவினரை கைது செய்து அவர்கள் மீது மேல் மேலும் பல வழக்குகளைப் போடுறீங்க. எல்லாம் பொய் வழ்ககுகள். கடந்த 6 மாதமா இதைப் பார்த்து பார்த்து தமிழக மக்களுக்கும் போர் அடிச்சிடுச்சு.
 
தினமும் காலையில எழுந்து பேப்பரைப் பார்த்தா யாராவது திமுகவினர் மீது பொய் வழக்கு போட்டு கைது செய்திருப்பாங்க. அதைப் படிக்கும் மக்கள் இந்த அம்மாவுக்கு வேற வேலையே இல்லையான்னு நினைக்கிறாங்க. அவங்களுக்கு வேலை எதுவும் இல்லைன்னு தான் நானும் நினைக்கிறேன்.
 
காலை எழுந்து காபியைக் குடிச்சதும் இன்றைக்கு யாரை கைது செய்யலாம், என்ன பொய் வழக்கு போடலாம் என்று தான் நினைக்கிறாங்க.
 
கருணாநிதி ஆட்சியில் நிம்மதியா, சந்தோஷமா இருந்த தமிழக மக்கள் அந்த அம்மா ஆட்சியில் கண்ணீர் வடிக்கிறாங்க. ஏன் இந்த கொலைவெறி?- இதுதான் தமிழக மக்கள் முதல்வர் ஜெயலலிதாவை பார்த்துக் கேட்கும் கேள்வி.
 
ஒய் திஸ் கொலை வெறி, கொலை வெறி, கொலை வெறி, கொலை வெறிமா என்று கேட்கிறாங்க. ஏன் இப்படி மக்களை பழிவாங்குகிறீங்க என்று நான் ஒரு அதிமுகவைச் சேர்ந்தவரிடம் கேட்டேன். அதற்கு அவர், 1996, 2006 தேர்தல்களில் எங்களுக்கு வாக்களிக்காததற்கு பழிவாங்க வேண்டாமா என்றார். பழிவாங்குறத்துக்கா மக்கள் வாக்களித்தனர்.
 
நீங்கள் எல்லாம் கருணாநிதி ஆட்சியில் அனைத்தையும் பார்த்ததால் ஒரு மாற்றம் வேண்டி அவங்களுக்கு ஓட்டு போட்டு ஜெயிக்க வச்சீங்க. மாற்றம் வேண்டியவர்களுக்கு கிடைத்தது ஏமாற்றம் மட்டும் தான். அந்த அம்மா தேர்தல் நேரத்தில எவ்வளவு பொய் சொன்னாங்க. அத தர்றேன், இத தர்றேன், அத செய்வேன், இத செய்வேன்னு ஏதாவது செய்தாங்களா. இந்த 6 மாதத்தில் மக்களுக்கு உதவுகிற மாதிரி ஏதாவது ஒரு நலத்திட்டம் கொண்டு வந்தாங்கன்னு யாராவது சொல்ல முடியுமா?.
 
காவல்துறை மேலிடத்து உத்தரவுபடி திமுகவினரை கைது செய்வதில் பிசியாக இருக்கு. அதனால் மக்களைப் பாதுகாக்க அவர்களுக்கு நேரமில்லை.
 
வெய்யிலின் அருமை நிழலில் தெரியும் என்பது போல கருணாநிதி ஆட்சியின் அருமையை மக்கள் தற்போது தான் உணர்கின்றனர். தலைவரின் அருமை, பெருமையை மக்கள் உணரக் காரணமா இருக்கும் அதிமுகவுக்கு நன்றி.
 
இந்த அம்மா சமீபத்தில் தான் கொடநாடு போனாங்க, இப்ப ஏன் மீண்டும் போகனும். கருணாநிதி என்னைக்காவது லீவு எடுத்துக்கிட்டு எங்காவது போனாரா? 24 மணி நேரமும் மக்களுக்காக பாடுபடும் ஒரே தலைவர் அவர் தான்.
 
பம்பரம் கூட சாட்டை இருந்தால் தான் சுத்தும். ஆனால் நம்ம தளபதி பதவி என்னும் சாட்டை இல்லாமலே தமிழகத்தை சுற்றி வருகிறார். யாருக்காக, எல்லாம் மக்களுக்காக.
 
புத்திசாலித்தனமா உள்ளாட்சித் தேர்தல் முடிந்த கையோடு வரியை ஏத்திட்டாங்க. அதுவே முன்னாடி செய்திருந்தா ஒரு ஓட்டு கூட கிடைத்திருக்காது. பெரிய புத்திசாலின்னு நெனப்பு. ஆனால் தமிழக மக்கள் கேள்வி கேட்கப் போகிறார்கள். அந்த நேரம் கூடிய சீக்கிரம் வரும். அதற்காக 5 வருஷம் காத்திருக்க வேண்டாம்.
 
கஷ்டத்தில் இருக்கையில் குரல் கொடுத்தா உதவ கோபாலபுரம் இருக்கு. கஷ்டத்தில் ஆறுதல் தரும் ஆலயம் போல அண்ணா அறிவாலயம் என்னைக்குமே இருக்கு. நம்ம தலைவரும், தளபதியும் மூச்சிருக்கும் வரை தமிழக மக்களை கைவிடமாட்டார்கள் என்றார்.



முல்லைப் பெரியாறு... கேரள நடிகர்கள் போராட்டம்!

 
 
 
முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சினையை தீர்க்கக் கோரி கேரள நடிகர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம் நடத்தினர்.
 
முல்லைப் பெரியாறு அணையை உடைக்கவும், புதிய அணை கட்டவும், கேரள அரசு தீவிரம் காட்டி வருகிறது. இதற்கு அரசியல் கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புகளின் ஆதரவை திரட்டி வருகிறது. போராட்டங்கள் நடத்தவும் தூண்டப்படுகிறது.
 
கேரளாவில் தமிழகத்தில் இருந்து சென்ற அய்யப்ப பக்தர்கள் தாக்கப்பட்டனர். இந்த நிலையில் மலையாள திரையுலகமும், போராட்டத்தில் குதித்துள்ளது. மலையாள நடிகர்- நடிகைகள் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம் நடத்தினர். கேரளா உயர் நீதிமன்றம் அருகில் நேற்று இரவு இப்போராட்டம் நடந்தது.
 
இதில் நடிகர்கள் சுரேஷ் கோபி, திலீப், முகேஷ், இன்நோசென்ட், இயக்குனர்கள் கமல், உன்னி கிருஷ்ணன் மற்றும் நடிகைகள் கலந்து கொண்டனர்.
 
மலையாள நடிகர் சங்கம், மலையாள திரைப்பட தொழிலாளர் சங்கம், மலையாள திரைப்பட விநியோகஸ்தர் சங்கம், போன்றவை இந்த போராட்டத்துக்கு ஏற்பாடு செய்து இருந்தன.
 
இதில் கலந்து கொண்டவர்கள் முல்லைப் பெரியாறு அணை பிரச்சினைக்கு அமைதியான முறையில் விரைவாக தீர்வு காண வேண்டும் என்று வற்புறுத்தி மெழுகுவர்த்தி ஏந்தி கோஷமிட்டனர். கேரள மக்களுக்கு பாதிப்பில்லாத வகையில் பிரச்சினை தீர வேண்டும் என்றும் அவர்கள் கோரினர்.
 
நடிகர்களில் சிலர் அணையை உடைத்துவிட்டு, புதிய அணை கட்டி அதன் மூலம் தமிழகத்துக்கு தண்ணீர் தர வேண்டும் என்றனர்.



சிறையில் இருப்பது பாதுகாப்பானதா? ஆ.ராசா ஜாமீன் மனு தாக்கல் செய்யாதது ஏன்?

 
 
 
2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் முன்னாள் மத்திய மந்திரி ஆ.ராசா கடந்த பிப்ரவரி மாதம் 2-ந்தேதி கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் மொத்தம் 14 பேர் கைதானார்கள். இவர்களில் முதன் முதலில் கைதானவர் ஆ.ராசா என்பது குறிப்பிடத்தக்கது.
 
அவருடன் ஸ்வான் டெலிகாம் ஷாகித் பல்வா, தொலை தொடர்புத் துறை முன்னாள் செயலாளர் சித்தார்த் பெகுரா, ராசாவின் தனிச்செயலாளர் ஆர்.கே.சந்தோலியா ஆகியோரும் கைதானார்கள். அதன்பிறகு மே 20-ந்தேதி கனிமொழி, சரத்குமார், கரீம் மொரானி மற்றும் தனியார் நிறுவன அதிகாரிகள் கைது செய்யப்பட்டனர். இதில் கனிமொழி, சரத்குமார் உள்பட 12 பேர் அடுத்தடுத்து ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டு விட்டனர்.
 
ஆ.ராசா, சித்தார்த் பெகுரா ஆகியோர் மட்டும் தொடர்ந்து திகார் ஜெயிலில் அடைக்கப்பட்டு இருக்கிறார்கள். இதில் சித்தார்த் பெகுரா கனிமொழியுடன் சேர்த்து ஜாமீன் மனுதாக்கல் செய்து இருந்தார். அப்போது பெகுரா மனு மட்டும் நிராகரிக்கப்பட்டது. அதன்பிறகு ஆர்.கே.சந்தோலியாவுக்கு சி.பி.ஐ. கோர்ட்டு ஜாமீன் வழங்கியது. `ஆனால் அதை டெல்லி ஐகோர்ட்டு `சுமோட்டு' (தானாக முன்வந்து) மூலம் நிறுத்தி வைத்துள்ளது.
 
என்றாலும் அவர் ஜாமீனில் வந்து வீட்டில் இருக்கிறார். அவரது ஜாமீன் உறுதி செய்யப்படுமா? என்று நாளை டெல்லி ஐகோர்ட்டு தீர்ப்பு கூறுகிறது. கைதான 14 பேரில் ஆ.ராசா மட்டுமே இதுவரை ஜாமீன் மனு தாக்கல் செய்யவில்லை. அவர் சிறையில் இருந்து வெளியே வந்தால் உயிருக்கு ஆபத்து என்பதால் சிறையில் இருப்பதுதான் பாதுகாப்பானது என்று கருதி ஜாமீன் மனுதாக்கல் செய்யாமல் இருப்பதாக செய்திகள் வெளியானது.
 
இதுபற்றி ராசாவின் வக்கீல் சுகில்குமாரிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-
 
ராசா சிறையில் இருப்பதுதான் பாதுகாப்பானது என்று செய்திகள் வெளியாகி இருப்பது தவறானது. அவர் ஜாமீன் மனு தாக்கல் செய்வதற்கு சரியான நேரத்துக்காக காத்து இருக்கிறார். சித்தார்த் பெகுரா மீண்டும் டெல்லி ஐகோர்ட்டில் ஜாமீன் மனுதாக்கல் செய்ய உள்ளார். அவருக்கு ஜாமீன் கிடைப்பதை பொறுத்து அடுத்து ராசா மனுதாக்கல் செய்வார்.
 
ராசா, பெகுரா ஆகியோர் மீதான குற்றச்சாட்டுகள் வெவ்வேறானவை. என்றாலும் அவருக்கு ஜாமீன் கிடைப்பதை பொறுத்து மனு செய்யுமாறு நான் ராசாவுக்கு எந்த யோசனையும் தெரிவிக்கவில்லை. சரியான நேரத்துக்காக காத்திருக்கிறார். இவ்வாறு வக்கீல் சுகில் குமார் கூறினார்.
 
இவர் ஸ்பெக்ட்ரம் வழக்கில் ராசாவுக்காக ஆஜராகி வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே ஆர்.கே.சந்தோலியாவின் ஜாமீன் உத்தரவு நிறுத்தி வைக்கப்பட்டதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்துள்ளார். சந்தோலியா சார்பில் வக்கீல் சஞ்சீவ்சென் இந்த மனுவை தாக்கல் செய்தார்.
 
நீதிபதி அல்டாமஸ் கபீர் தலைமையிலான பெஞ்ச் இந்த மனுவை விசாரிக்கிறது.



அதிமுகவில் வடிவேலு ?

 



இக்கரைக்கு அக்கரைப் பச்சை என்று வடிவேலுக்கு புரிந்துவிட்டது !