Followers

Wednesday 7 December 2011

சரத்பவார் மீதான தாக்குதல் சரியானதே : காந்தியவாதி அன்னா ஹசாரே

 
 
மத்திய அமைச்சர் சரத்பவார் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவம் சரியானது என்று காந்தியவாதி அன்னா ஹசாரே தெரிவித்துள்ளார். பவார் மீது தாக்குதல் நடந்தவுடன் பத்திரிகையாளர்களை சந்தித்த ஹசாரே, ஒரு அடி தான் விழுந்ததா? என்று கேட்டு பரபரப்பை ஏற்படுத்தியது நினைவிருக்கலாம்.
 
இதுகுறித்து, காந்தியவாதி அன்னா ஹசாரே தனது வலைப்பூவில் (பிளாக்) தெரிவித்துள்ளதாவது, சரத்பவார் மீதான தாக்குதல், திட்டமிட்ட வன்முறை என்று பலர் தெரிவித்துள்ளனர். ஆனால், இந்த தாக்குதல், முன்னேற்றத்திற்கான அறிகுறியாகவே தான் கருதுகிறேன். ஊழலுக்கு எதிராக போராடுபவர்களுக்கு, அரசியல்வாதிகள் கொடியவர்களாகவும், ஊழல் வியாதிகளாகவும் தெரிவது இதன்மூலம் தெளிவாகி உள்ளது. தாக்குதல் நடத்திய இளைஞரை மட்டும் குறை கூறும் அரசியல்வாதிகள், அந்த சம்பவம் நடைபெற்றதற்கான காரணம் குறித்து அவர்கள் ஏன் சிந்திக்க மறுக்கிறார்கள்?
 
விவசாயத்தை அடிப்படையாகக் கொண்ட இந்திய திருநாட்டில், விவசாயிகளின் உரிமைகள் மறுக்கப்படுகிறது. மீறி போராடும் விவசாயிகள் கடுமையாக தாக்கப்படுகிறார்கள், துப்பாக்கிச்சூடும் அவர்கள் மீது நடத்தப்படுகிறது. மகாராஷ்டிரா மாநிலத்தில், விவசாயிகள் தற்‌கொலை அதிகளவில் நடைபெற்று வருகிறது. இந்த காரணங்களுக்காக, ஒரு அரசியல்வாதியும் சினம் கொண்டதாக தெரியவில்லை. ஆனால், அவர்கள் மீது தாக்குதல் நடைபெற்ற உடனே, அவர்கள் கொதித்து எழுகின்றனர். இது எந்தவகையில் நியாயம்?
 
கோதுமை இறக்குமதிக்கு வித்திட்ட இந்த மத்தி்ய அமைச்சர் சரத்பவார், அழுகிய கோதுமைகளை இங்கு இறக்குமதி செய்து அவர்களை பயன்படுத்தாவண்ணம் செய்து விட்டார். மேலும், அவை உண்ணும் நிலையில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. மக்களின் கோடிக்கணக்கான பணம் இதன்மூலம் வீணாக்கப்பட்டுள்ளது. இதுகுறி்த்து, கேட்டால் அவர்களிடம் உரிய பதில் இல்லை.
 
சரத்வார் சார்ந்த கட்சியான தேசியவாத காங்கிரஸ் கட்சியின் ‌3 அமைச்சர்கள் ஊழலில் ஈடுபட்டது நீதிபதி பி பி சாவந்த் கமிஷன் மூலம் வெளிவந்தபோதிலும், அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படாதது ஏன்? கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக, அந்த 3 அமைச்சர்களை பதவி விலக்க வேண்டும் என்று வலியுறுத்தி வந்துள்ளேன். ஆனால், அரசு இதை காதில் கூட போட்டுக் கொள்ளவில்லை.
 
இன்றைய நிலையில், நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக ஊழல் வளர்ச்சியடைந்து வருகிறது. இந்த ஊழல், பாமர மக்கள் நிம்மதியாக வாழ்வதற்கு பெரும் தடைக்கல்லாக இருந்து வருகிறது. ஒரு‌வேளை உணவு சாப்பிடுவதற்கே, அவர்கள் பெரும் கஷ்டம் அனுபவிக்க வேண்டியுள்ளது. எதற்கும் ஒரு எல்லை உண்டு. சாது மிரண்டால் காடு கொள்ளாது என்ற ப‌ழமொழிக்கேற்ப, எல்லை மீறும் பட்சத்தில், மக்கள் சட்டத்தை தங்கள் கையில் எடுத்துக் கொள்கி்ன்றனர். இதில் ஒன்றும் தவறு இருப்பதாக நான் உணரவில்லை என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.
 
சிலர் என்னை, மகாத்மா காந்தியோடு ஒப்பிட்டு பேசுகிறார்கள். இது முற்றிலும் தவறு. நான் அவரது கால் பகுதியில் உட்காருவதற்கு கூட தகுதியில்லாதவன். மகாத்மா காந்தியின் கொள்கைகளால் பெரிதும் ஈர்க்கப்பட்டு அவரது வழியிலேயே அகிம்சை முறையில், நாட்டின் வளர்ச்சிக்கு நான் பாடுபட்டு வருகிறேன் என்று அவர் மேலும் அதில் தெரிவித்துள்ளார்.



No comments:

Post a Comment