Followers

Thursday 22 December 2011

முல்லைப்பெரியாறு: தே.மு.தி.க. பேச்சாளர் தற்கொலை; விஜயகாந்துக்கு உருக்கமான கடிதம்

 
 
 
 
 
தேனி மாவட்டம் தீலையம்பட்டி பழைய பஸ் நிலையப்பகுதியை சேர்ந்தவர் சேகர்(வயது 30). தே.மு.தி.க. தலைமை கழக பேச்சாளரான இவர் நேற்று முன்தினம் இரவு விருத்தாசலம் வந்தார். பின்னர் அவர் தனக்கு ஒரு அறை எடுத்து தரும்படி கட்சியின் நகர செயலாளர் சங்கரிடம் போனில் தெரிவித்தார்.
 
அதன்படி பஸ் நிலையம் அருகில் உள்ள ஒரு ஓட்டலில் அவர் சென்று தங்கினார். பின்னர் நேற்று காலை சனிப்பெயர்ச்சியை முன்னிட்டு விருத்தகிரீஸ்வரர் கோவிலுக்கு சென்று சாமி கும்பிட்டு அறைக்கு திரும்பினார்.
 
இந்நிலையில் நேற்று இரவு நகர செயலாளர் சங்கருக்கு போனில் பேசிய சேகர், தனக்கு உடல்நிலை சரியில்லாததால் உடனே அறைக்கு வருமாறு அழைத்தார். அதன்படி சங்கர் அங்கு சென்று பார்த்தபோது சேகர் விஷம் குடித்து நிலையில் உயிருக்கு போராடி கொண்டிருந்தார். உடனே அவர் விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்து போனார்.
 
இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சேகர் தங்கியிருந்த ஓட்டல் அறைக்கு சென்று சோதனை நடத்தினர். அப்போது அங்கு ஒரு விஷபாட்டிலும், தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்துக்கு எழுதிய உருக்கமான கடிதங்களும் சிக்கின. அதில் ஒரு கடிதத்தில் மரியாதைக்குரிய கேப்டனுக்கு சேகர் வணக்கத்துடன் எழுதுவது,
 
முல்லைப்பெரியாறு அணையை இடித்தே தீருவேன் என்று கேரள முதல்-மந்திரி உம்மன் சாண்டி கூறி வருகிறார். அவ்வாறு அணையை உடைத்தால் 5 மாவட்ட விவசாயிகளும் தற்கொலை செய்து கொள்ள வேண்டிய நிலை ஏற்படும். அந்த அணையை நீங்கள்தான் காப்பாற்ற வேண்டும். அணைக்காக நான் தற்கொலை செய்து கொள்கிறேன்.
 
நான் தற்கொலை செய்து கொள்ள விருத்தாசலத்தை ஏன் தேர்ந்தெடுத்தேன் என்றால் இந்த தொகுதி மக்கள்தான் தே.மு.தி.க. வுக்கும், உங்களுக்கும் அங்கீகாரம் அளித்தது என்பதால்தான். என்னை மன்னித்து விடுங்கள். இவ்வாறு அந்த கடிதத்தில் அவர் எழுதியுள்ளார்.
 
இது குறித்து விருத்தாசலம் போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.



No comments:

Post a Comment