Followers

Tuesday 6 March 2012

தனி மெஜாரிட்டியை நோக்கி முலாயம் சிங்: காங்கிரஸ் ஆதரவு தேவையில்லை?!

 
 
உத்தரப் பிரதேச சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் முலாயம் சிங் யாதவின் சமாஜ்வாடிக் கட்சி முன்னிலையில் உள்ளது. இதனால் அங்கு ஆட்சியைப் பிடிக்க அந்தக் கட்சிக்கு காங்கிரசின் ஆதரவு தேவைப்படாது என்று தெரிகிறது.
 
அந்த மாநில சட்டமன்றத்தில் 403 இடங்கள் உள்ளன. இங்கு ஆட்சியைப் பிடிக்க குறைந்தபட்சம் 202 இடங்கள் தேவை. ஆனால், காலையில் வாக்கு எண்ணிக்கை நிலவரப்படி, முலாயம் சிங் யாதவால் அதிகபட்சம் 188 இடங்களையே பிடிக்க முடியும் என்ற நிலை இருந்தது. ஆனால், பிற்பகலில் அந்தக் கட்சி 202 இடங்களை தனித்தே பிடிக்கும் நிலைக்கு முன்னேறிவிட்டது.
 
மாயாவதியின் பகுஜன் சமாஜ் 96 இடங்களிலும், காங்கிரஸ் 47 இடங்களிலும் பாஜக 49 இடங்களிலும் முன்னிலையில் உள்ளன. சிறிய கட்சிகளும் சுயேச்சைகளும் 12 இடங்களில் முன்னணியில் உள்ளன.
 
இதனால் அங்கு ஆட்சியைப் பிடிக்க முலாயம் சிங்குக்கு மற்ற கட்சிகளின் ஆதரவு தேவைப்படாது. சில இடங்கள் குறைந்தாலும் அதை சிறிய கட்சிகள் மற்றும் சுயேச்சைகளின் ஆதரவுடன் அவர் சமாளித்துவிட முடியும் நிலை உருவாகியுள்ளது.
 
முன்னதாக மெஜாரிடிக்குத் தேவையானதை விட 20 இடங்கள் முலாயம் சிங்குக்குக் குறைவாகக் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அப்படிப்பட்ட நிலையில் அவர் காங்கிரசின் ஆதரவைப் பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
 
மத்தியில் காங்கிரஸ் அரசை முலாயம் சிங் தானாகவே வெளியில் இருந்து ஆதரித்துக் கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்தத் ட்டமன்றத் தேர்தலில் சமாஜ்வாடி கட்சிக்கு பெரிய அளவில் பெரும்பான்மை கிடைத்திருக்காவிட்டாலும் ஒரு பெரிய நிம்மதி என்னவென்றால், மாயாவதியின் பகுஜன் சமாஜுக்குக் கிடைத்துள்ள மிகப் பெரிய தோல்வி தான்.
 
ஒருவேளை மாயாவதியின் கட்சியும் 150 இடங்களில் வென்றிருந்தால், அவரும் பாஜகவும் கூட்டணி அமைத்து எந்த நேரத்திலும் முலாயம் சிங்கின் ஆட்சியைக் கவிழ்த்துவிட்டு, அவர்கள் ஆட்சியமைக்க முயன்றிருப்பர்.
 
மாயாவதியைப் பொறுத்தவரை பதவிக்காக எந்த வகையான கூட்டணிக்கும் அவர் தயார் தான். அதே போல காங்கிரசும் மாயாவதியுடன் சேர்ந்து கொண்டு முலாயம் ஆட்சியைக் கவிழ்க்க முயன்றிருக்கும்.
 
ஆனால், இப்போது உள்ள சூழ்நிலையில் பாஜக, காங்கிரஸ், பகுஜன் சமாஜ் ஆகிய மூன்று கட்சிகளும் கூட்டு சேர்ந்தால் தான் முலாயம் அரசைக் கவிழ்க்க முடியும். இதில் பாஜக-காங்கிரஸ் கூட்டணி என்பது சாத்தியமே இல்லாத விஷயம்.



No comments:

Post a Comment