Followers

Friday 14 October 2011

ஜெயலலிதா சவால்...எனக்கு சிரிப்பு தான் வருகிறது: கருணாநிதி

 
 
வழக்குகளை எல்லாம் நீதிமன்றத்தில் சந்திக்க திராணியில்லாத கருணாநிதி எனக்கு சவால் விடுவது கேலிக் கூத்தாக இருக்கிறது என்று ஜெயலலிதா பேசியிருக்கிறார். எனக்கு சிரிப்பு தான் வருகிறது. எந்த வழக்கிலே நான் நீதிமன்றத்தைச் சந்திக்காமல் இருந்தேன்? அவர்தான் பெங்களூர் சொத்துக் குவிப்பு வழக்கில் நீதிமன்றத்தைச் சந்திக்க திராணியில்லாமல் 130 முறைக்கு மேலாக வாய்தா பெற்று, வேறு வழியிலே இல்லாமல் உச்ச நீதிமன்றமே அவரை நீதிமன்றத்தில் வரும் 20ம் தேதியன்று ஆஜராகுமாறு கட்டளையிட்டிருக்கின்றது என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
 
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அண்ணா அறிவாலய நில விவகாரம் குறித்து ஜெயலலிதா எனக்கு சவால் விடுத்துள்ளார். நான் அதை ஏற்றுக் கொள்கிறேன். திருச்சியில் இடைத் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் ஜெயலலிதா முதன் முதலாகப் பேசும்போது, திரு.கே.என். நேருவைப் பற்றிக் குறிப்பிட்டுவிட்டு, "அவருடைய தலைவரே அண்ணா அறிவாலயத்திற்கு நிலம் வாங்கியதில் ஊழல் செய்தவர், அவருடைய சீடரும் அப்படித் தானே இருப்பார்" என்று பேசத் தொடங்கி, அவர் சாட்டிய குற்றச்சாற்று அவர்களுடைய கட்சிப் பத்திரிகையிலும், மற்ற ஏடுகளிலும் வெளி வந்துள்ளது.
 
அந்தக் குற்றச்சாற்றில், "இந்தப் பத்திரத்தில் ஜமீன்தாரின் குடும்பத்தினர் பலர் கையெழுத்து இடவில்லை. ஜமீன் குடும்பத்தில் உள்ள பத்து பேருக்குப் பதிலாக சுப்புரத்தினம் நாயுடு மட்டும் கையொப்பம் இட்டு இருக்கிறார். ஆனால் இந்த இடத்திற்கான பத்திரத்தில் சுப்புரத்தினம் நாயுடு பெயர் இல்லை, இதை விற்பதற்கான அதிகாரம் அவருக்கு இல்லை. இதை நான் சொல்லவில்லை. சர்க்காரியா கமிஷன் அறிக்கையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. ஆக, அந்தக் காலத்திலேயே நில அபகரிப்பில் கைதேர்ந்தவர் கருணாநிதி" என்று குறிப்பிட்டிருந்தார்.
 
அந்தக் குற்றச்சாற்றிற்கு அதே திருச்சியில் நான் பதில் அளிக்கும்போது, அந்தப் பத்திரத்தையே காட்டி, அதிலே பத்து பேர் ஒவ்வொரு பக்கத்திலும் கையெழுத்திட்டிருக்கிறார்கள், சுப்புரத்தினம் பெயரும் பத்திரத்தில் உள்ளது, எனவே ஒருவர் தான் கையெழுத்திட்டிருக்கிறார் என்று ஜெயலலிதா கூறிய குற்றச்சாட்டு தவறானது, அதை நிரூபிக்கத் தயாரா என்று கேட்டிருந்தேன்.
 
அப்போது அந்த இடம் எத்தனை கிரவுண்ட் என்பது பற்றியெல்லாம் ஜெயலலிதா குறிப்பிட்டுப் பேசாத காரணத்தால் அந்த இடத்தின் பரப்பளவு எவ்வளவு என்பது பற்றியெல்லாம் நான் விவரமாகக் கூறவில்லை. தற்போது ஜெயலலிதா- அவர் முதலில் பேசிய, அதாவது விற்பனை பத்திரத்தில் ஒருவர் மட்டுமே கையெழுத்திட்டுள்ளார் என்பதையும், அந்தப் பத்திரத்தில் சுப்புரத்தினம் நாயுடு பெயரே இல்லை என்று கூறியதையும் அப்படியே மறைத்துவிட்டு, அந்த இடம் 25 கிரவுண்ட் தானா? அதற்கு மேல் இருந்தால் அதை அரசுக்கு ஒப்படைக்கத் தயாரா என்றெல்லாம் கூறியிருக்கிறார்.
 
உண்மையில் அந்தப் பத்திரத்தில் இடத்தின் மொத்த அளவு "கிரவுண்ட்" கணக்கில் குறிப்பிடப்படவில்லை. பத்திரத்தில் உள்ளதெல்லாம் The Net extent of land sold under this document 3 Cawnies, 12 grounds and 1951 Sq.feet marked Red in the sketch attached hereto" என்று தான் இருக்கிறதே தவிர, 25 கிரவுண்ட் என்றோ, மொத்தம் எத்தனை கிரவுண்ட் என்றோ அதிலே குறிப்பிடப்படவில்லை என்பது தான் உண்மை.
 
விற்பனை பத்திரத்தில் 3 காணி என்றிருந்ததால், 1 காணி என்பது 1 ஏக்கர் 33 சென்ட் அதாவது சுமார் 25 கிரவுண்ட் என்ற அடிப்படையில் ஒரு காணி என்பதற்கு ஏறத்தாழ 25 கிரவுண்ட் என்று சொன்னேனே தவிர, முழு இடமுமே 25 கிரவுண்ட் என்ற பொருளில் நான் பேசவில்லை. ஆனால் ஜெயலலிதா மொத்த இடமும் 25 கிரவுண்ட் என்று தான் பேசினாய், அதற்கு மேலே இடம் இருந்தால் அரசுக்கு கொடுத்து விடத் தயாரா என்று கேட்டிருக்கிறார்.
 
சிறுதாவூரில் தலித் மக்களுக்காக ஒதுக்கப்பட்ட 51 ஏக்கர் நிலத்தையும், அரசுக்குச் சொந்தமான 28 ஏக்கர் நிலத்தையும் அபகரித்துக் கொண்டவர் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியாலேயே குற்றம் சாட்டப்பட்டு, நீதியரசர் சிவசுப்ரமணியம் கமிஷன் ஏற்றுக் கொண்டதை மறக்க முடியுமா? அதுபோலவே கொடநாடு எஸ்டேட்டில் மாளிகை கட்டிக் கொண்டு ஏழையெளிய மக்களுக்கான பாதையைக் கூட விட மறுத்து உச்ச நீதி மன்றம் வரை வழக்கு நடைபெற்று, கடந்த 18-3-2011ல் உச்ச நீதிமன்றம் 24 மணி நேரமும் இலவசமாக பாதையைத் திறந்து விட வேண்டுமென்று தீர்ப்பளித்தும் இன்று வரை அதனைச் செயல்படுத்தாமல் இருப்பவர் ஜெயலலிதா என்பதைத் தான் மறக்க முடியுமா?.
 
ஜெயலலிதா கூறிய குற்றச்சாற்று, விற்பனைப் பத்திரத்தில் ஒருவர் தான் கையெழுத்திட்டுள்ளார், மற்றவர்கள் கையெழுத்திடவில்லை. பத்திரத்தில் கையெழுத்திட்ட சுப்புரத்தினம் நாயுடு பெயரே, அந்தப் பத்திரத்தில் இல்லை என்பதாகும். நான் அதை மறுத்து, ஒருவர் மட்டும் கையெழுத்திட்டுள்ளார் என்பது தவறான விவரம்.
 
பத்திரத்தில் ஒருவர் பெயர் மட்டுமே இருக்கிறது என்று சொல்வதும் தவறான விவரம். அதை ஜெயலலிதா நிரூபிக்கத் தயாரா?, ஒரு முதல் அமைச்சர் தவறான தகவலைத் தரலாமா?, இந்த ஒரே ஒரு அறைகூவலுக்கு அம்மையார் பதில் அளிப்பாரா? என்று கேட்டதற்கு ஜெயலலிதா வழக்கம் போல் நேரடியாகப் பதில் அளிக்காமல், பதிலளித்திட முடியாத அந்தப் பிரச்சனையை அப்படியே விட்டு விட்டு, கருணாநிதி பேசும்போது அந்த இடம் 25 கிரவுண்ட் என்று சொல்லியிருக்கிறார், அதற்கு மேல் இடம் இருந்தால் அதை அரசுக்குக் கொடுக்கத் தயாரா என்று பிரச்சனையைத் திரித்து திசை திருப்பக் கூடிய வகையிலே கேட்டிருக்கிறார்.
 
ஜெயலலிதா அம்மையாருக்கு மற்றும் ஒன்றை நினைவுபடுத்த விரும்புகிறேன். அவர் தற்போது குறிப்பிடுகின்ற அண்ணா அறிவாலய நிலம் எனக்காகவோ, என் குடும்பத்தினருக்காகவோ வாங்கப்பட்ட நிலம் அல்ல. திராவிட முன்னேற்றக் கழக அறக்கட்டளைக்காக அந்த இடம் வாங்கப்பட்டுள்ளதே தவிர, யாருடைய சொந்த லாபத்திற்காகவும் வாங்கப்பட்டதல்ல.
 
இன்னும் சொல்லப் போனால், தற்போது நான் வாழ்ந்து வரும் வீட்டைக் கூட, எனது காலத்திற்குப் பிறகு அறக்கட்டளைக்காக அளித்து அதுவும் பதிவு அதிகாரிகள் முன்னிலையில் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஜெயலலிதாவைப் போல, முதலமைச்சராக இருந்த போது அவருடைய பிறந்த நாளுக்காக 2 கோடி ரூபாய்க்கு மேற்பட்ட காசோலைகளைப் பெற்று பேராசைப்பட்டு சொந்த வங்கியிலே சேர்த்துக் கொண்டவன் அல்ல நான்.
 
ஜெயலலிதா முதலில் கூறும்போது விற்பனைப் பத்திரத்தில் பல பேர் பங்கு தாரர்களாக இருந்தாலும் சுப்புரத்தினம் நாயுடு மட்டுமே கையெழுத்திட்டுள்ளார் என்று கூறினார். அதற்குத் தான் நான் திருச்சியில் பத்து பேர் கையெழுத்து அதிலே இருப்பதாகவும், அதை மறுக்கத் தயாரா என்றும் கேட்டிருந்தேன். தற்போது அதிலே 18 பேர் உரிமையாளர்கள், ஆனால் பத்து பேர் தான் கையெழுத்திட்டிருக்கிறார்கள் என்று சொல்கிறார். அதற்கும் நான் பதில் கூறுகிறேன்.
 
கையெழுத்திட்ட பத்து பேர்கள் தவிர, வேறு சில உரிமையாளர்கள் மைனர்கள். அதனால் தான் அவர்கள் கையெழுத்திடவில்லை. ஆனால் அந்த மைனர்களின் தந்தைகளும் அதன் உரிமையாளர் என்ற தகுதியில், காப்புத் தந்தை என்று குறிப்பிட்டு, அவர்கள் தங்கள் மைனர் பிள்ளைகளுக்காக கூடுதலாக அந்தப் பத்திரத்திலே கையெழுத்திட்டிருக்கிறார்கள்.
 
ஜெயலலிதா தற்போது மேலும் கூறும்போது பத்திரத்தில் பத்து பேர் கையெழுத்து போட்டுள்ளனர், அதில் பெரும்பாலானோர் கையெழுத்து உண்மையானது தானா? என்று சந்தேகம் எழுகிறது என்றும் கூறியிருக்கிறார். முதலில் திருச்சியில் பேசும்போது பத்து பேர் கையெழுத்தே இல்லை என்றார், தற்போது கையெழுத்து உண்மையானது தானா என்கிறார்.
 
டான்சி நில பிரச்சனையில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ஆவணத்தில் இருந்த தனது கையெழுத்தை; அது தன்னுடைய கையெழுத்தே இல்லை என்று ஜெயலலிதா மறுத்து, பின்னர் அது அவருடைய கையெழுத்துத் தான் என்று நீதிமன்றத்தாலேயே நிரூபிக்கப்பட்டது அல்லவா, அதனால் தான் அப்படிக் கூறியிருக்கிறார்.
 
மேலும் ஜெயலலிதா பேசும்போது, "திமுக அறக்கட்டளையில் எம்.ஜி.ஆரும் ஒரு உறுப்பினர் என்று கருணாநிதி கூறியுள்ளார். ஆனால், பத்திரத்தில் கருணாநிதி பெயர் தான் இடம் பெற்றுள்ளது. இந்த இடம் மிரட்டி வாங்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்த காரணத்தால் தான் எம்.ஜி.ஆரை 1972ம் ஆண்டில் கட்சியை விட்டு நீக்கினர்" என்று கூறியிருக்கிறார். பதிவு செய்யப்பட்ட அறக்கட்டளை பத்திரத்தில்,
 
THIS DEED OF TRUST is made on the 14 th day of June 1972, by Dr. M. Karunanidhi, President of the Dravida Munnetra Kazhagam and (2) Dr. V.R. Nedunchezhian, General Secretary of the said Dravida Munnetra Kazhagam, hereinafter called the AUTHORS OF THE TRUST TO AND IN FAVOUR OF (1) Dr. M. Karunanidhi, son of Thiru Muthuvel, aged 48 years, (2) Dr.V.R. Nedunchezhian, son of Thiru Rajagopalan, aged about 50 years, (3) Thiru M.G. Ramachandran son of Thiru Gopala Menon aged about 50 years hereinafter called the TRUSTEES which expression shall mean and include their successors and the temporary trustees appointed as per terms of this Deed" என்று தொடங்கியுள்ளது. எனவே அறக்கட்டளை பத்திரத்தில் எம்.ஜி.ஆர். அவர்களின் பெயரும் இடம் பெற்றிருப்பதைக் காணலாம்.
 
ஜெயலலிதா தனது பேச்சில், அந்த நிலத்தை விற்ற சுப்புரத்தினம் பயமுறுத்தப்பட்டு, சர்க்காரியா விசாரணை கமிஷன் முன்னால் அழைக்கப்பட்டு, அப்போது அவர் கூறியதற்கெல்லாம் நான் ஏன் வாய் திறக்கவில்லை என்று கேட்டிருக்கிறார்.
 
சுப்புரத்தினம் நாயுடு சாட்சியத்திலே கூறிய இந்தக் குற்றச்சாட்டிற்கெல்லாம் நீதிபதி சர்க்காரியா அவர்களே, தனது தீர்ப்பில் அப்போதே பதில் சொல்லியிருக்கிறார். அந்தப் பதிலையும் நான் அன்றைக்கே சொல்லியிருக்கிறேன். அதாவது சர்க்காரியா அவர்கள் தனது தீர்ப்பில், In these circumstances, it cannot be said beyond doubt, that the Sellers were coerced or pressurised to part with this valuable property at a gross under value (அந்த இடத்தை விற்றவர்கள் குறைந்த விலைக்கு விற்கும்படி மிரட்டப்படவும் இல்லை, வலியுறுத்தப்படவும் இல்லை) என்று தெரிவித்த கருத்துக்களையும் நான் கூறியிருந்தேன்.
 
ஜெயலலிதா தனது பேச்சில், ஏழை மக்களின் நலன்களை மேம்படுத்துவது திமுக அறக்கட்டளையின் நோக்கம் என்று குறிப்பிட்டு விட்டு அதிலிருந்து மாறி நடப்பதாகச் ஜெயலலிதா சொல்லியிருக்கிறார். தி.மு.கழக அறக்கட்டளைச் சார்பில் வெற்றிச்செல்வி அன்பழகன் கண் மருத்துவமனை அண்ணா அறிவாலய வளாகத்திலேயே நடத்தப்பட்டு, 1988 முதல் 2011 செப்டம்பர் வரை இலவச கண் பரிசோதனை மற்றும் அறுவை சிகிச்சை பெற்றவர்கள் 1 லட்சத்து 1 ஆயிரத்து 944 பேராகும்.
 
1995ம் ஆண்டு முதல் 2011ம் ஆண்டு வரை 373 மாணவர்களுக்கு அதிக மதிப்பெண் பெற்றவர்களுக்கு ரொக்கப் பரிசாக இந்த அறக்கட்டளை சார்பில் 20 லட்சத்து 98 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. மேலும் பல உதவிகளும் வழங்கப்பட்டுள்ளன.
 
ஈழத்தில் பாதிக்கப்பட்ட ஈழத் தமிழர்களின் மருத்துவ உதவிகளுக்காக 3-11-1995 அன்று 25 லட்சம் ரூபாயும், தமிழகத்தில் ஏற்பட்ட வெள்ளச்சேதத்தை யொட்டி வெள்ள நிவாரண நிதியாக 23-12-1996 அன்று ஐந்து லட்ச ரூபாயும், 12-12-2005 அன்று 25 லட்ச ரூபாயும், ஏழையெளியோர்களுக்கு கல்வி மற்றும் மருத்துவ உதவித் தொகையாக 523 பேருக்கு 25 லட்சத்து 80 ஆயிரம் ரூபாயும், கும்பகோணம் கிருஷ்ணா மற்றும் சரஸ்வதி மழலையர் பள்ளியில் 2004ஆம் ஆண்டு தீ விபத்தில் உயிரிழந்த மாணவர்களின் குடும்பங்களுக்கு 27-7-2004 அன்று 28 லட்சம் ரூபாயும்,
 
சுனாமி கடல் கொந்தளிப்பின் போது பிரதமர் நிவாரண நிதியாக சோனியா காந்தி அம்மையாரிடம் ஒரு கோடி ரூபாயும் தொடர்ந்து தி.மு. கழக அறக்கட்டளையினால் உதவிகள் செய்யப்பட்டு வருகின்றன என்பதையும் அம்மையார் ஜெயலலிதாவுக்கு ஞாபகப்படுத்த விரும்புகிறேன்.
 
இது தவிர "பேராசிரியர் அன்பழகனார் ஆய்வு நூலகம்" ஒன்றும் அறக்கட்டளை சார்பில் நடத்தப்பட்டு, ஆய்வு மாணவர்கள் எல்லாம் அதன் மூலம் பயன் பெற்று வருகின்றனர்.
 
இறுதியாக அம்மையார் ஜெயலலிதா வழக்குகளை எல்லாம் நீதிமன்றத்தில் சந்திக்க திராணியில்லாத கருணாநிதி எனக்கு சவால் விடுவது கேலிக் கூத்தாக இருக்கிறது என்று பேசியிருக்கிறார். எனக்கு சிரிப்பு தான் வருகிறது. எந்த வழக்கிலே நான் நீதிமன்றத்தைச் சந்திக்காமல் இருந்தேன்? அவர்தான் பெங்களூர் சொத்துக் குவிப்பு வழக்கில் நீதிமன்றத்தைச் சந்திக்க திராணியில்லாமல் 130 முறைக்கு மேலாக வாய்தா பெற்று, வேறு வழியிலே இல்லாமல்
உச்ச நீதிமன்றமே அவரை நீதிமன்றத்தில் வரும் 20ம் தேதியன்று ஆஜராகுமாறு கட்டளையிட்டிருக்கின்றது.
 
யாரோ ஒருவர் அவரிடம் கூறியதை தவறாகப் புரிந்து கொண்டு, அண்ணா அறிவாலயம் பற்றி குற்றஞ்சாட்டி, திருச்சியிலே பேசிவிட்டு, அதற்கு ஆதாரப்பூர்வமாக விற்பனை பத்திரத்தையே காட்டி நான் 10ம் தேதி பதில் கூறிய பிறகு, தற்போது மூன்று நாட்கள் கழித்து மழுப்பலாக வேறு எதையெதையோ பதில் சொல்லி தப்பிக்கப் பார்க்கிறார் என்பதைத் தான் அவருடைய பேச்சு சுட்டிக் காட்டுகிறது என்று கூறியுள்ளார் கருணாநிதி.



No comments:

Post a Comment